தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.5.12

பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியருக்கு கட்டாய ஓய்வு: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

பாலியல் புகாரில் சிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் மீது, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கட்டாய ஓய்வு, பணி நீக்கம், டிஸ்மிஸ் ஆகிய, ஏதாவது ஒரு தண்டனை வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்தது.


பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை, சஸ்பெண்ட், பணியிட மாற்றம் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே, இதுவரை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த தண்டனைகளால், ஆசிரியருக்கு பெரிய அளவில் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதனால், ஒழுங்கீனச் சம்பவங்கள், அவ்வப்போது நடந்து விடுகின்றன.

அமைச்சர் அறிவிப்பு:கடந்த மாதம் 18ம் தேதி சட்டசபையில், "பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியரை, "டிஸ்மிஸ்' செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து, அரசு ஆலோசித்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, பள்ளிக்கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்தார்.அதை தொடர்ந்து, புகாரில் சிக்கும் ஆசிரியர் மீது, என்னென்ன நடவடிக்கை எடுக்கலாம் என, பள்ளிக் கல்வித்துறை, அறிக்கையை ஒன்றை தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பியது.

அரசாணை வெளியீடு:அதன் அடிப்படையில், தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது. 17ம் தேதியிட்ட அரசாணையில், பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா கூறியிருப்பதாவது:மாணவர்களுக்கு முன் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர், மாணவ, மாணவியரிடம், ஒழுக்கக்கேடான முறையில் நடந்து கொள்கின்றனர்.இதனால், மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் மோசமாக பாதிக்கப்படுவது குறித்து, சமீபகாலமாக ஊடகங்களில், செய்திகள் அதிகளவில் வெளி வருகின்றன. இதுகுறித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.இந்த அவல நிலையை உடனடியாக களையவும், மாணவ, மாணவியரிடம், ஆசிரியர் தவறான முறையில் நடந்து கொள்ளும் நிலையை முற்றிலும் தவிர்ப்பதற்கும், உரிய நடவடிக்கைகள் எடுக்க, பள்ளிக்கல்வி இயக்குனர், அரசுக்கு பரிந்துரைத்தார். பரிசீலனைக்குப் பின், தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது.

தண்டனை என்ன
?
  • அதன்படி, தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையாக, கட்டாய ஓய்வு, பணி நீக்கம் மற்றும் பணியறவு (டிஸ்மிஸ்) போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.
  • அரசுப் பள்ளி ஆசிரியரைப் பொறுத்தவரை, அரசுப் பணியாளர் நடத்தை விதி 19(2), இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு, மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்படும். அத்துடன், சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
ஆலோசனை
  • பள்ளி குழந்தைகளும், மாணவ, மாணவியரும், பிற நபர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து, தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
  • மாணவ, மாணவியரின் மனநிலை பிரச்னைகளை களைய, உளவியல் ஆலோசனைகளை வழங்குவதற்கென, பள்ளிக்கல்வித் துறை மூலம், உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வும், ஆசிரியருக்கு ஆலோசனைகளும் வழங்க வேண்டும்.
இவ்வாறு, செயலர் சபிதா கூறியுள்ளார்.
தனியார் பள்ளி நடவடிக்கை என்ன?தவறு செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கை என்ன என்பது குறித்து, நேரடியாக அரசாணையில் எதுவும் தெரிவிக்கப் படவில்லை. எனினும், அரசுப் பள்ளி ஆசிரியருக்கு தண்டனை வழங்க, என்னென்ன நடைமுறைகள் கடைபிடிக்கப் படுகிறதோ, அதே நடைமுறை, தனியார் பள்ளி ஆசிரியருக்கும் பொருந்தும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்