தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

18.4.10

இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு தரம் உயர்த்தி பதவி உயர்வு வழங்கிடுக


கடித எண்: 06/2010, நாள் 17-04-2010.

பெறுநர்:

மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
சென்னை.

ஐயா,
        

பொருள்:

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் 2010-ம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கும் போது அவர்கள்  பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலேயே பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு அளித்தல் சார்பு.

பார்வை:  

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) மற்றும் தகவல் வழங்கும் அலுவலரின் செயல் முறைகள், ஓ.மு.எண். 11996,0சி3,இ1   நாள் 18-12-2009.

வணக்கம்.

உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 28,000 இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அரசாணை எண் 100, நாள் 27-06-2003க்கு பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் கிடையாது. ஆனால் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை பணியிடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால்; அரசாணை 100ன் படி 27-06-2003க்குப் பிறகு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நிரந்தர காலிப்பணியிடம் ஏற்படும் போது அவை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றப்பட்டு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது.
      
ஆனால் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்று செல்லும் போது அனேகமாக வட மாவட்டங்களுக்கு பதவி உயர்வு பெற வேண்டிய நிலை உள்ளது. கலந்ததாய்வின் போது தென் மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் காட்டப்படுவது இல்லை. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட ஆசிரியர்கள்  அனேகர் பதவி உயர்வுக்கு செல்ல முடியாமல் பணித்துறப்பு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதிலும் அனேக இடைநிலை ஆசிரியர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளி மாவட்டங்களுக்கு செல்ல முடியாத காரணத்தால் நிரந்தர பணித்துறப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

 மேலும் சில மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் திருத்திய ஆணை மூலமாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்திலேயே பட்டதாரி  ஆசிரியராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
                      
தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 72 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் வெளிமாவட்டத்திற்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.                           
                                                               
எனவே 2010ல் நடைபெறுகின்ற பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வின் போது அந்தந்த மாவட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் சொந்த மாவட்டங்களிலேயே அவர்கள் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு தரம் உயர்த்தி பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கிட பணிவுடன் வேண்டிக் கொள்கிறோம்.

இவண்,

(ஒப்பம்)
மாவட்ட நிர்வாகிகள்,
கன்னியாகுமரி.

நகல்:

  1. மாண்புமிகு தமிழக கல்வி அமைச்சர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை, சென்னை.
  2. உயர்திரு பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தலைமைச்செயலகம், சென்னை.
  3. இயக்குநர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை.
  4. இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி), சென்னை.
.

கூடுதல் பணிமூப்பு பட்டியல் வெளியிடுதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்குக் கடிதம்

பெறுநர்:

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை - 6.

மதிப்புமிகு அய்யா,

பொருள்:

கல்வி - பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி உயர் மேல்நிலைப்பள்ளி - இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர் பட்டடியல் ஜனவரி - 2010க்கு பின் தகுதிவாய்ந்தோர் கூடுதல் பட்டியல் வெளியிடுதல் சார்பு.

தமிழ்நாட்டில் 31-12-2009 நிலவரப்படி அரசு உயர் - மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடையோர் பணி மூப்பு உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. ஜனவரி 2010-க்கு பின் வெளியாகியுள்ள பல்கலைக் கழக தேர்வு முடிவு(IGNOU, TNOU, B.Ed. Result) அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கொண்ட கூடுதல் பணி மூப்பு பட்டியல் தயார் செய்து மேற்படி ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர் பெற்றிட நடவடிக்கை எடுத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,

(ஒப்பம்)
மாநில நிர்வாகிகள்.

இடம்: சென்னை
நாள்:12-04-2010.
.

சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் பி.எட். பயின்றவர்களை பட்டதாரி பதவி மூப்பு பட்டியலில் சேர்த்திடுக.


பெறுநர்:

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை - 6.

மதிப்புமிகு அய்யா,

பொருள்:

கல்வி - பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி - சாஸ்திரா  பல்கலைக்கழகம் - B.Ed. பயின்றவர்களின் பெயர்களை -  பட்டதாரி பதவி மூப்பு பட்டியலில்  சேர்த்தல் - சார்பு.

தமிழ்நாட்டில் சாஸ்திரா பல்கலைக் கழகம் முலம் இளங்கலை கல்வியில் படிப்பு முடித்தவர்களுக்கு பதவி மூப்பு பட்டியலில் பெயர்களை சேர்த்திடுவதில் கடந்த மார்ச் 8ம் தேதி சென்னை உயர்நீதி மன்றம்  ஆணை பிறப்பித்துள்ளது. அதன் அடிப்படையில் 2010-2011ஆம் கல்வியாண்டில் பதவி உயர்வு பட்டியலில் மேற்படி ஆசிரியர்களை சேர்த்திட தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களில் சாஸ்திர பல்கலைக் கழகத்தில் இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டம் பெற்றவர்களின் பெயர்களையும் இணைத்து ஒருங்கிணைந்த பதவி உயர்வு பணிமூப்பு பட்டியல் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்,

(ஒப்பம்)
மாநில நிர்வாகிகள்.

இடம்: சென்னை,
நாள்:12-04-2010.
.

தமிழாசிரியர் பணி மூப்பு பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கிடுக.

பெறுநர்:

பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை - 6.

மதிப்புமிகு அய்யா,

பொருள்: 

கல்வி - பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி - இடைநிலை ஆசிரியர் - பதவி உயர்வு தமிழாசிரியர் பணி மூப்பு பட்டியல் - 1995 ஆசிரியர் தேர்வு வாரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் வழங்கிட நடவடிக்கை கோருதல் - சார்பு.

2010-2011ஆம் கல்வியாண்டில் உயர் மேல் நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு 756 பேர் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 1995ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் முலம் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் அனைவரின் பெயரும் இடம் பெற்றுள்ளது. தரஎண்.12136 வரையும் 31-08-1995 வரை நியமனம் பெற்ற ஆசிரியர்கள் பட்டியல் இடம் பெற்றுள்ளது.

ஆனால் கடந்தவாரம் உயர்-மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சங்க கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது 1032 தமிழாசிரியர் பணியிடங்கள் மட்டுமே காலியாக உள்ளது. அதில் 66.66% எனில் 687 பேருக்கு மட்டுமே தமிழாசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

1995-ல் தேர்வு வாரியம் முலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் வெளியிடப்பட்டுள்ள 756 பேருக்கும் தமிழாசிரியர் பதவி உயர்வு வழங்கிட ஆவன செய்திருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்,
(ஒப்பம்)
மாநில நிர்வாகிகள்.

இடம்: சென்னை,
நாள்:12-04-2010.
.

பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்துதல் - பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்குக் கடிதம்


பெறுநர்
           
பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி) அவர்கள்,
பள்ளிக்கல்வி இயக்ககம்,
சென்னை – 6.

மதிப்புமிகு அய்யா,

பொருள்:

கல்வி - பள்ளிக்கல்வி - இடைநிலைக்கல்வி உயர்  மேல்நிலைப்பள்ளி - இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்துதல் - சார்பு

பார்வை

1. பள்ளிக்கல்வித்துறை இணைச் செயலாளர் கடித எண்.19618 எம்1-2009 நாள் 30.07.2009.

2. தங்களின் செயல்முறைகள் ந.க.எண்.79809/C5/ F4/2009. நாள் 18.01.2010

 தமிழ்நாட்டில் உயர்-மேல் நிலைப்பள்ளிகளில் 28000 இடைநிலை ஆசிரியர்கள் (அரசுப்பள்ளிகளில் 16812 பேர். அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 11200 பேர்) 3-009-2006ன் நிலவரப்படி பணியாற்றி வருகின்றனர். அரசாணை 100ன்படி பட்டதாரி ஆசிரியர்கள் எங்களது பணியிடங்களில் 2004 முதல் நியமனம் பெற்று வருகின்றனர். எனவே ஒரே பணி இருவேறு ஊதியம் என்ற நிலை உள்ளது. இது தொடர்பாக கடந்த முன்று ஆண்டுகள் எங்களது அமைப்பு நடத்திய தொடர் இயக்க நடவடிக்கைகள் முலம் பார்வை 1-ல் கண்ட கடித அடிப்படையில் தங்களிடம் விவரங்கள் பெறப்பட்டு பார்வை 2ன் அடிப்படையில் தாங்கள் விவரங்களை அனுப்பியுள்ளீர்கள்.

28000 இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் “இளநிலை ஆசிரியர் இடைநிலை ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டது போல் மூத்த பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தப்பட்டது போல்” இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்,

(ஒப்பம்)
மாநில நிர்வாகிகள்.

இடம்: சென்னை,
நாள்:12-04-2010.
.

14.4.10

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் சார்பாக 2009-2010 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது.

நாள்: 17-04-2010, சனி

நேரம்: மாலை 3 மணி

இடம்: அரசு ஊழியர் இல்லம், தக்கலை.

தலைமை

திரு. V. L. சேம் பிறின்ஸ் குமார்
 மாவட்டத் தலைவர்.

வரவேற்புரை: திரு. S.ஆதிமணி, வட்டாரத் தலைவர், இராஜக்கமங்கலம்.

வாழ்த்துரை:
  • திரு. ம. எட்வின் பிரகாஷ், மாவட்டச் செய்தித் தொடர்பாளர்.
  • திரு. G. பாஸி, மாவட்டச் செயலாளர்.
  • திரு. கோ. பூதலிங்கம் பிள்ளை, மாவட்ட அமைப்புச் செயலாளர்.
  • திரு. P. திவாகரன் பிள்ளை, மாவட்டப் பொருளாளர்.
மற்றும்
  • வட்டார நிர்வாகிகள்.
சிறப்புரை

திரு. க. இசக்கியப்பன்
மாநில அமைப்புத் தலைவர்.

நன்றியுரை: திரு. K. ஹரிகுமார், வட்டாரச் செயலாளர்.

பணி நிறைவு பெறும் அனைத்து ஆசிரியப் பெருமக்களும் இயக்க உறுப்பினர்களும்  கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பிக்குமாறு அனபுடன் அழைக்கிறோம்.
.

    6.4.10

    திரிசங்கு நிலையில் இருபத்தெட்டாயிரம் இடைநிலை ஆசிரியர்கள்

     தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் 28 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், திரிசங்கு நிலையில் பதவி உயர்வு இல்லாமல் பரிதவிக்கின்றனர். 

    தமிழகத்தில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது 2002ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. அதிலிருந்து, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால், ஏற்கனவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் 28 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பதவி உயர்வு இல்லை: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், இன்றும், பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் 6 முதல் 10ம் வகுப்பு வரை அதே பாடங்களைத் தான் மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். இருந்தும் இவர்களுக்கு பதவி உயர்வு, மற்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. 2002ம் ஆண்டு முதல் இன்று வரை இடைநிலை ஆசிரியர்கள் நிலையிலேயே பணியாற்றி வருகின்றனர்.

    தரம் உயர்த்த வேண்டும்: உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் பலர் பட்டதாரிகளாகவும், முதுநிலை பட்டதாரிகளாகவும் பட்டம் பெற்றுள்ளனர். இருந்தும் அரசு, இடைநிலை ஆசிரியர்களை இன்று வரை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க முன் வரவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு சிறப்பு பயிற்சிகள் வழங்கி பட்டதாரி ஆசிரியர்களாக தரம் உயர்த்தி பணி நியமனம் செய்திட வேண்டும்.

    பல போராட்டங்கள்: 28 ஆயிரம் ஆசிரியர்கள் தங்களை தரம் உயர்த்தக் கோரி உண்ணாவிரதம், கண்டன ஆர்ப்பாட்டங்கள், முதல்வர் முதல் பள்ளிக்கல்வி அமைச்சர் வரை பல முறை கோரிக்கைகள் விடுத்தும், இன்று வரை அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. 28 ஆயிரம் ஆசிரியர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

    திரிசங்கு நிலையில் இடைநிலை ஆசிரியர்கள்: பாதிக்கப்பட்டுள்ள 28 ஆயிரம் ஆசிரியர்களில் பலர் ஓய்வு பெற்று வருகின்றனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களைப் பற்றி கண்டு கொள்ளாததால் பல ஆண்டுகளாக பதவி உயர்வு, சம்பள உயர்வு இல்லாமல் ஒரே இடத்தில் பணியாற்றி வருகின்றனர். சம்பள விதியும் குறைவாகக் கிடைப்பதால், திரிசங்கு நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் பரிதவித்து வருகின்றனர். அரசும், பள்ளிக் கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


    நன்றி: தினமலர் 06-04-2010

    5.4.10

    இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வலியுறுத்தி தர்ணா - ஆர்பாட்டம்

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் நாகர்கோவிலில் சனிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 28 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உள்படுத்தும் கோரிக்கையை கல்வி மானியத்தில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.  

    நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் சேம்பிரின்ஸ் குமார்,  நிம்ரோத், சந்தன கருப்பையா ஆகியோர் தலைமை வகித்தனர்.  அமிர்தராஜ், தமிழ்ராஜன், ரவிச்சந்திரன், திவாகரன்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சுந்தர்ராஜ், முருகேசன் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.  மாநில இணைச் செயலர் பாஸி, துணைத் தலைவர் நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  மாநில பொருளாளர் உதயசூரியன் நிறைவுரையாற்றினார்.



    பிரபலமான இடுகைகள்

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்