தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.9.10

மேலவைத் தேர்தல்: 'வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரைவில் அறிவிப்பு வெளியாகும்'

தமிழக சட்டப்பேரவையின் மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று சட்ட மேலவைத் தேர்தல் ஆலோசகர் சி.ஆர். பிரம்மம் தெரிவித்தார்.
தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை ஆகிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடந்தது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பிரம்மம் கூறியது:
சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து மாவட்ட அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழக சட்ட மேலவைக்கு 78 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அதில், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மூலமாக 26 உறுப்பினர்கள்; உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலமாக 26 உறுப்பினர்கள்; ஆசிரியர் தொகுதி, பட்டதாரித் தொகுதி மூலமாக தலா 7 உறுப்பினர்களும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 12 உறுப்பினர்களை ஆளூநர்  நியமிப்பார்.
ஆசிரியர் தொகுதியில், 1.11.2010-க்கு முன்பாக குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள் தான் ஓட்டுப் போட முடியும். பட்டதாரித் தொகுதியில், 2007-ம் ஆண்டுக்கு முன்னர் பட்டம் பெற்ற பட்டதாரிகள் ஓட்டுப் போடலாம். இத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றார்.
.
நன்றி:


சென்னை உண்ணாவிரத போராட்டத்தில் நாமக்கல் மாவட்ட தஇஆச-வினர் திரளாக பங்கேற்க முடிவு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத்தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் மஞ்சுநாதன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் சந்திரமோகன், தமிழ்நாடு உயர், மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டத்தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகேசன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திர பிரசாத், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாநிலச் செயலாளர் குப்புசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

கூட்டத்தில், 


  • அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி பணியிடத்துக்கு உட்படுத்த வேண்டும். 
  • ஒரு நபர் குழுவின் பரிந்துரையை மீண்டும் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் இதரப்படிகள் வழங்க வேண்டும். 
  • நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டதிலிருந்து, மாவட்ட தலைநகருக்கு உரிய வீட்டு வாடகைப்படி வழங்க வேண்டும். 
  • ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் (பணி நீட்டிப்பு காலத்தில்) சி.ஆர்.சி., கூட்டத்தில் பங்கேற்றால் அதற்கான ஈடுசெய் விடுப்பு வழங்க வேண்டும். 
  • மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், தமிழ்நாடு அரசு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மாவட்ட அமைப்பாளராக நீட்டிக்க வேண்டும்
 என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக பெரியசாமியும், பொருளாளராக ஜெயந்தியும் தேர்வு செய்யப்பட்டனர். 

மேலும், அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி பணியிடத்துக்கு உட்படுத்த வலியுறுத்தி சென்னை காயிதே மில்லத் மணிமண்டபம் அருகே அக்டோபர் 8ம் தேதி நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து  இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. 



நிகழ்ச்சியில், ஒன்றியச் செயலாளர் மதிவாணன், மங்கையர்கரசி, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
.      

தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பூதியம் பெறுவதில் சிக்கல்


தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 6வது ஊதிய குழு அமல்படுத்தப்பட்டது. இதில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுவதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் குறிப்பாக, இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தை 5,200 - 20,200, தர ஊதியம் 2,800ல் இருந்து 9,300 - 34,800, தர ஊதியம் 4,200 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றனர். முதுகலை ஆசிரியர்கள் தங்கள் அடிப்படை ஊதியத்தை 21 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பூதியமாக 500 ரூபாய் என அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு ஊதியம் 1.8.2010 முதல் அமல்படுத்தப்பட்டது.


இந்த சிறப்பூதியம் வழங்க கருவூல அதிகாரிகள் தர ஊதியத்தை கணக்கில் எடுப்பதால் 2,800 ரூபாய்க்கும் கூடுதலாக தர ஊதியம் பெறும் தேர்வு நிலை, சிறப்பு நிலை அந்தஸ்து பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் சிறப்பூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரிர்கள் சங்க மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன் கூறும் போது, 10 ஆண்டுகள் பணிபுரிந்து 1.1.2006க்கு முன்பு தேர்வு நிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் தர ஊதியமாக 4,200 ரூபாயும், சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்கள் தர ஊதியமாக 4,500 ரூபாயும் பெறுகின்றனர். இவர்கள் அடிப்படை சம்பளமாக 5,200-20,200 ரூபாய் பெற்று வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் ஒரு சில கருவூல அதிகாரிகள் 2,800 ரூபாய் தர ஊதியம் பெறுபவர்களுக்கு மட்டும் சிறப்பூதியம் வழங்க முடியும் என கூறுகின்றனர். இதனால் தர ஊதியம் கூடுதலாக பெறும் ஆசிரியர்கள் சிறப்பூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை களைய வேண்டும்'' என்றார்.  

இதற்கிடையில் ஒரு நபர் கமிஷன் பரிந்துரை குளறுபடிகளை கண்டித்து டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மாநில அளவில் சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதுகலை ஆசிரிய சங்கங்கள் இணைந்து "ஜாக்' சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் தொடக்க நிலை முதல் முதுகலை வரை அனைத்து ஆசிரிய சங்கங்களும் இணைந்து கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்த ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. கொள்கைகள் அடிப்படையில் பிரிந்து கிடக்கும் சங்கங்கள் தற்போது "அதிசயமாக' ஒற்றுமையாக இணைந்து போராட்டங்களையும் நடத்த முன்வந்திருப்பது ஆசிரிய, ஆசிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  
நன்றி:
   

24.9.10

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - அரசாணை வெளியீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம்அகவிலைப்படியை 1.7.2010 முதல் உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் 1.7.2010 முதல் 10 சதவீதம் அக விலைப்படியை உயர்த்தி முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார்.

உயர்த்தப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி 1.7.2010 முதல் நிலுவையின்றி ரொக்கமாக வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வின் காரணமாக அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.2ஆயிரத்து 190 கோடி கூடுதலாக செலவாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


அரசாணை எண்: 371 நாள்: 24-09-2010
.

22.9.10

மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

"உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்  இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்தப்படுவர்" என்று பள்ளிக் கல்வி அமைச்சர் 24-11-2007 அன்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் தந்த உறுதிமொழியை அமல்படுத்திட வலியுறுத்தி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.   
 .
இடம் 
காயிதே மில்லத் மணி மண்டபம் அருகில் - LIC எதிரில், அண்ணாசாலை, சென்னை.
.  
நாள்
08-10-2010, வெள்ளிக்கிழமை
.
தலைமை
G. குமார்  
மாநில தலைவர்
   
ஆசிரியர் பேரினமே!
கோரிக்கையை வென்றெடுக்க
தலைநகர் சென்னைக்கு 
அலைகடலென திரண்டு வாரீர்! வாரீர்!!
.

17.9.10

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி அவர்களுக்கான அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி 45 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் 88 லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வூதியதாரர்களும் பயனடைவர். அரசுக்கு இதனால் ஆண்டுக்கு கூடுதலாக ரூ.9 ஆயிரத்துக்கு 300 கோடி செலவாகும் என மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

புதிய அகவிலைப்படி 2010 ஜூலை 1-ம் தேதியிட்டு வழங்கப்படும். ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

நன்றி: 

13.9.10

ஆசிரியர்களுக்கு வீட்டு வாடகைப்படி: செப். 16 முதல் உண்ணாவிரதம்

ஆசிரியர்களுக்கு உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப்படியை உடனடியாக வழங்க வலியுறுத்தி இம்மாதம் 16-ம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் குழித்துறை கல்வி மாவட்டம் மற்றும் திருவட்டார் ஒன்றிய ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் தொடர் உண்ணாவிரதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

குழித்துறை நகராட்சி இரண்டாம் நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், இந்த நகராட்சி மற்றும் அதன் எல்லையிலிருந்து 8 கி.மீ. தொலைவுக்குள்பட்ட கிள்ளியூர், முன்சிறை, திருவட்டார், மேல்புறம் ஆகிய ஒன்றியப் பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப்படியை  உயர்த்தி வழங்க வலியுறுத்தி ஆக. 31-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    

இதை அரசு கண்டுகொள்ளாததால்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இம்மாதம் 16-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் நடத்த  தீர்மானிக்கப்பட்டது.   

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்துக்கு எஸ். ஜெரோம் தலைமை வகித்தார். கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். வட்டார அமைப்பாளர்கள் ஜோஸ்பென்சிகர், கிறிஸ்துதாஸ், கனகராஜ், சாம்பிரின்ஸ்குமார் ஆகியோர் பேசினர்.  இதில் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலகக் கழகம் சார்பில் பயஸ் மோரிஸ், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி சார்பில் சந்திரசேகரன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் பாஸி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
.

கருணை அடிப்படையில் பணி: அரசு புது உத்தரவு


கருணை அடிப்படையிலான பணி நியமனம் குறித்து புதிய உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.கருணை அடிப்படையிலான அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கும் போது திருமணமாகாமல் இருந்து, பணி உத்தரவு வழங்கும் நேரத்தில் திருமணம் ஆகியிருந்தாலும் சம்பந்தப்பட்ட நபருக்கு வேலை அளிக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது.  

பணிக் காலத்தில் மரணமடையும் அரசு ஊழியர் குடும்பத்தில் வசித்து வரும் மகளுக்கும் மற்றும் அவ்வாறு வசித்து வரும் விதவை மகள் மற்றும் விவாகரத்துப் பெற்ற மகளுக்கும் கருணை அடிப்படையில் பணி வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

திருமணத்துக்கு முன்பும், பின்பும்... இந்த நிலையில்,  மரணமடைந்த அரசு ஊழியர் குடும்பத்தில் உள்ள ஒரு பெண், அதாவது ஊழியரின் மகள் கருணை அடிப்படையில் அரசுப் பணி கோரலாம். அவ்வாறு கோரும் நேரத்தில் அவருக்கு திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம். அரசின் பரிசீலனைகள் முடிந்து அவருக்கு பணி உத்தரவு வழங்கப்படும் நேரத்தில் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.அவ்வாறு குடும்ப பந்தத்துக்குள் நுழைந்த அந்த மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படுவது கேள்விக் குறியாக இருந்து வந்தது. இந்த நிலையில், அந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் பிரபாகர் ராவ் வெளியிட்ட உத்தரவு:  

ஒரு குடும்பத்தில் திருமணமாகாத நிலையில் உள்ள பெண்ணுக்கு கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, அந்தக் குடும்பத்தில் உள்ள பிற வாரிசுதாரர்கள் எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதற்கான சான்று அளிக்கப்பட வேண்டும். வேலைக்கான பரிசீலனை நடைபெறும் நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு திருமணமாகி இருக்கலாம். அப்படி திருமணம் ஆன அந்தப் பெண்களுக்கு பணி அளிக்கப்படும் போது மீண்டும் மற்ற வாரிசுதாரர்களால் மறுப்பின்மைச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும்.

திருமணம் செய்து கொண்ட பின்பு பணி வாய்ப்பு பெற்ற வாரிசு தனது பெற்றோரின் குடும்பத்துக்கு உதவும் வகையில் உறுதி ஆவணம் அளிக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு கோரியுள்ள நபரை திருமணம் செய்யும் நபர், வருங்காலத்தில் அவரது மனைவி அவருடைய பெற்றோருக்குச் செய்யும் உதவிக்கு மறுப்பு ஏதும் ஏற்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழியையும் அளிக்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:  

 

11.9.10

ஆசிரியர்களின் "தனிநபர் தகவல்கள்" தொகுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தனிநபர் தகவல்கள் தொகுப்பு பணியை இந்தக் கல்வியாண்டின் இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநர் (மின் ஆளுமை) ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சிறப்பாக நிர்வகிக்கும் வகையில் அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் தனிநபர் தகவல்களைத் தொகுக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாவட்டங்களும், திருநெல்வேலி, மதுரை, கோவை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் என 8 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 4 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.



முதலாவதாக திருநெல்வேலி மண்டலத்தில் (திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர்) இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.



பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் பயிற்சியின்போது நிருபர்களுக்கு ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:


இந்த தனிநபர் தகவல்கள் தொகுப்பு பணியின் முதல் கட்டமாக தொழில்கல்வி ஆசிரியர்களின் தனிநபர் தகவல்களைத் தொகுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அனைத்து மண்டலங்களிலும் தொழில்கல்வி ஆசிரியர்களின் தனிநபர் தகவல்கள் தொகுக்கப்பட்ட பின்னர் அடுத்து பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், ஊழியர்கள் என விவரங்கள் தொகுக்கப்படும். ஆசிரியர்களின் மொத்த எண்ணிக்கையில் தொழில்கல்வி ஆசிரியர்கள் குறைவாக இருப்பதால் அந்தப் பணி முதலாவது எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.



தனிநபர் தகவல்கள் தொகுப்பில் ஆசிரியரின் அடிப்படை விவரம், பணி நியமனம், வாரிசு தகவல், விடுப்புத் தகவல், சிறப்புத் தகுதிகள், துறைசார் விவரங்கள் என அனைத்து விவரங்களும் அடங்கும்.



இந்த விவரங்கள் அனைத்தும் ஒவ்வொரு பள்ளிக்கும் அளிக்கப்படும் குறியீட்டின் அடிப்படையில் கணினியில் பதிவு செய்யப்படும். மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏற்கெனவே உள்ள குறியீடு (இலவச சைக்கிள் வழங்குவதற்காக அளிக்கப்பட்டது) பயன்படுத்தப்படும். உயர்நிலைப் பள்ளிகளுக்கு தனி குறியீடு அளிக்கப்படும்.



தொழில்கல்வி ஆசிரியர்கள் சுமார் 7,000 பேரின் தனிநபர் தகவல்களைத் தொகுக்கும் பணியை இம் மாதம் 25ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சுமார் 2.5 லட்சம் பேரின் தகவல் தொகுப்பு பணியானது இந்தக் கல்வியாண்டின் இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் உடனுக்குடன் புதுப்பிக்கப்படும்.



உள்கட்டமைப்பு வசதிகள் பதிவு: 


அடுத்தகட்டமாக ஒவ்வொரு பள்ளிகளிலும் உள்ள கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளையும் பதிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ராதாகிருஷ்ணன்.


பேட்டியின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மேரி ஜெசிரோச், கண்காணிப்பாளர் பாபு ஆகியோர் உடனிருந்தனர்.


நன்றி:


வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.5 % வழங்க பரிந்துரை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (பி.எஃப்.) வட்டி விகிதம் குறித்து செப்டம்பர் 15-ல் முடிவு செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக முடிவெடுக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி இயக்குநர்களின் கூட்டம் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அக்கூட்டம் செப்டம்பர் 15-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிதி மற்றும் முதலீட்டு கமிட்டி (எஃப்.ஐ.சி.) 8.5 சதவீதம் வட்டி வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையே ஏற்கப்படும் என்பதால் 2010-11-ம் நிதியாண்டுக்கும் 8.5 சதவீதம் வட்டியே அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

2005-06 முதல் வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்னர் 3 ஆண்டுகள் 9.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 4.71 கோடி பேர் சந்தாதாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:


சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்

கல்வி உரிமைச் சட்டம் என்று பொதுவில் அறியப்படும் சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தினால் 4 ஆகத்து, 2009ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு பகுதி 21A வழங்கும் அதிகாரப்படி ஆறு அகவை முதல் பதினான்கு அகவை வரையிலும் உள்ள சிறார்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கும் நெறிமுறைகளை வரையறுக்கும் வண்ணம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 1, 2010 முதல் இந்தச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளது.

சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்