தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

29.10.10

பச்சை மையை யார் பயன்படுத்தலாம்? அரசு புதிய உத்தரவு

பச்சை மையை யார், எப்போது, எந்தத் தருணத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
  • அரசு அலுவலகங்களில் நீலம், கருநீலம் அல்லது கருப்பு வண்ணத்திலான மைகளை மட்டுமே அரசு ஆவணங்களில் எழுத பயன்படுத்த வேண்டும். இவைகளைத் தவிர பிற வண்ண மைகளை பயன்படுத்தக் கூடாது.  
  •  சட்டத் துறையைச் சேர்ந்தவர்கள் சிவப்பு நிற மையை உபயோகப்படுத்தலாம்.
யார் பச்சை மை பயன்படுத்தலாம்? 
  • வரைவு உத்தரவுகள், அறிவிக்கைகள், விதிகள் போன்றவற்றில் திருத்தம் செய்யும் போது பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை அதிகாரிகள் பச்சை நிற மையை பயன்படுத்தலாம்.  

  • அரசு அலுவலகங்களில் மைப் பேனா, பால்பாயிண்ட் பேனா, ஜெல் பேனா ஆகியவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம். 
    • சான்றொப்பம் இடுவதற்கு அனுமதிக்கப்பட்ட அலுவலர்கள் பச்சை நிற மையினை பயன்படுத்த வேண்டும்.  
    • பிரிவு "அ' அலுவலர்கள் மட்டும் அரசு கோப்புகளில் சிறு குறிப்புகள் எழுத பச்சை நிற மையை பயன்படுத்தலாம். 
    அரசாணை எண்: 151 நாள்: 21-10-2010

    27.10.10

    வருங்கால வைப்பு நிதி - பணம் திரும்ப பெறுதல் உச்சவரம்பு உயர்வு

    வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணம் திரும்ப பெறுதல் உச்சவரம்பு ரூ.2,50,000/-லிருந்து ரூ.6,00,000/-மாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அரசாணை எண்: 381 நாள்: 30-09-2010

    நான்கு மாதங்கள்ஆகியும் மதிப்பூதியம் வழங்காததால் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியாளர்கள் வேதனை

    தேசிய முக்கியத்துவம் வாய்ந்த  மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி முடிந்து நான்கு மாதங்கள்ஆகியும் மதிப்பூதியம் வழங்காததால் ஊழியர்கள் வேதனையில் உள்ளனர். 
     
    தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி இரண்டு கட்டமாக நடக்கிறது. முதற்கட்டமாக ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை வீட்டுப்பட்டியல் தயாரிப்பு பணி நடந்தது. இதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, பணி முடிந்தது. அதனுடன் தேசிய அடையாள அட்டைக்கான பணிக்கும் விபரங்கள் சேகரிக்கப்பட்டன.

    இப்பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு  பொறுப்பாளர், அவருக்கு கீழ் 3 கூடுதல் பொறுப்பாளர்கள், அவர்களுக்கு கீழ் பயிற்சியாளர்கள், அவர்களுக்கு கீழ் கணக்கெடுப்பாளர்கள் என பலர் நியமிக்கப்பட்டனர்.  

    கணக்கெடுப்பாளர்களை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆசிரியர்களே பணியாற்றினர். படிவத்தை வீடுவீடாகக் கொண்டு சென்று கணக்கெடுத்தனர். ஜூலை மத்தியில் பணி முடிந்தாலும், படிவங்கள் அனைத்தும் ஆகஸ்ட் மத்தியில்தான் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இப்பணி முடிந்து நான்கு மாதங்களாகியும் இதுவரை பணியாளர்களுக்கு சம்பள பட்டுவாடா நடக்கவில்லை.

    இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு வீட்டுப் பட்டியலுக்காக 3250  ரூபாயும், தேசிய அடையாள அட்டை பணிக்காக 3000 ரூபாயும் வழங்கப்பட வேண்டும். இதனால் ஆசியர்கள், அதிகாரிகள் அதிருப்தியில் உள்ளனர். ""தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இப்பணிக்காக கணக்கெடுப்பு நடத்தும்போது பல சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றினோம். இதுவரை சம்பளமில்லை. இன்னும் சில மாதங்களிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பும் நடக்க உள்ளது'' என்றனர்.

     மாவட்ட அளவில் ஸ்டேஷனரி மற்றும் விளம்பரம் குறித்த செலவினங்களுக்காக மட்டும் சில ஆயிரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக நியமிக்கப் பட்ட சில அமைச்சுப்பணியாளர் களுக்கும் ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது. மற்றபடி யாருக்கும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. 

    இதுதொடர்பாக சென்னையில் விசாரித்தபோது, அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சென்னைக்கு அனுப்பப்பட்ட படிவங்களை சரி பார்க்கும் பணி முடிந்தபின்தான் பணப்பட்டுவாடா நடக்கும் என தெரிவித்தனர். தற்போது வீட்டுப்பட்டியலை  புத்தகமாக தயாரிக்கும் பணி, (சுருக்கம் தயாரிக்கும் பணி) நடக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு  நடத்தப்பட வேண்டும். அதற்கு முன் பணப்பட்டுவாடா செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

    நன்றி: 

    24.10.10

    ஆசிரியர் பயிற்சி பட்டயம் இனி, "தொடக்க கல்வி பட்டய சான்று" என அழைக்கப்படும்.

    ஆசிரியர் பயிற்சி பட்டயத்தை இனி, "தொடக்க கல்வி பட்டய சான்று" என குறிப்பிடுமாறு, அரசு உத்தரவிட்டுள்ளது. 

    தமிழகத்தில் 30 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஏராளமான தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பட்டய சான்று பெற்றவர்கள் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் நியமிக்கப்பட்டனர். தற்போது, இவர்கள் ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். 

    வரும் கல்வி ஆண்டு முதல், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிப்போருக்கு "தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய சான்று" என குறிப்பிட வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

    நன்றி:

    மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் ஆயிரமாக உயர்வு

    மாற்றுத் திறனாளிகளின் நலத்துறை ஆணையர் மாற்றுத் திறனாளிகள் பொது போக்குவரத்தினை அவர்களது இயலாமை காரணமாக பயன்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தனியார் போக்குவரத்தினை பயன்படுத்தும் போது அதிக செலவினம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தும் போது, எரிபொருள் செலவினம் அதிகமாவதாலும், தமிழக அரசில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படியை உயர்த்துவது அவசியம் என குறிப்பிட்டும், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படியை (Conveyance Allowance) ரூ.300/-லிருந்து ரூ.1000/-ஆக உயர்த்தி வழங்குமாறு அரசிடம் கோரியுள்ளார்.

    மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கருத்துருவினை ஏற்று அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படியை ரூ.300/-லிருந்து ரூ.1,000/- ஆக (ரூபாய் ஆயிரம் மட்டும்) 1.10.2010 முதல் உயர்த்தி வழங்கலாம் என அரசு முடிவு செய்து ஆணையிட்டுள்ளது.

    ..

    15.10.10

    மேலவை: வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம்

    மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  

    ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி, இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.  

    இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

    மேலவைத் தேர்தலில் ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெயர் சேர்ப்புப் பணியை தீவிரப்படுத்த சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

    அக்டோபர் 16, 17, 30, 31 ஆகிய நான்கு நாட்களிலும் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வருகின்றன. இதனால், அந்த இரு தேதிகளிலும் நடக்க இருந்த சிறப்பு முகாம்கள் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  

    தேர்தல் அதிகாரிகள், அந்தத் தேதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பணியில் இருக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு வருவோருக்குத் தேவையான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் எனவும் தனது செய்திக் குறிப்பில் பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.  

    பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்ப படிவம் 18-ம், ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவம் 19-ம் பயன்படுத்தப்படுகிறது.
      
    நன்றி: 

     

    சிறுபான்மை கல்வி நிறுவன ஆசிரியர் நியமனம்: விதிமுறைகளை வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

    சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனம் தொடர்பான விதிமுறைகளை வகுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

    கன்னியாகுமரி மாவட்டம் மேல்பாளையில் உள்ள செயின்ட் மேரீஸ் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை தேவசாந்தினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  மனுவில், எனக்கு பின்பு பணியில் சேர்ந்தவர் தலைமை ஆசிரியராக பணி உயர்வு பெற்றுள்ளார். எனவே, எனது பணி மூப்பை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரினார்.  

    நீதிபதிகள் எலிப் தர்மாராவ், நீதிபதி கே.கே.சசிதரன் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது. 
      
    விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ள அவற்றுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை காரணமாக, இத்தகைய நிறுவனங்கள் நிர்வாகத்தைத் தவறாக நடத்த வேண்டும் என்பதல்ல. சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனம் தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்படவில்லை.  

    சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களின் பணி நியமனங்கள் தொடர்பாக தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று டி.எம்.ஏ. பாய் வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது.  

    எனினும், மேல்பாளை செயின்ட் மேரீஸ் பள்ளி உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றவில்லை. அதனால், சிறுபான்மையினர் நலனுக்காக உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பணிபுரியும் சிறுபான்மையின ஆசிரியரின் கோரிக்கையைக் கூட பரிசீலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  

    எனவே, சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனம், பணிகள், பணி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பான விதிமுறைகளை வகுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

    மேல்பாளை செயின்ட் மேரீஸ் பள்ளி ஆசிரியை தேவசாந்தினிக்கு நாகர்கோயில் கோட்டார் ரோமன் கத்தோலிக்க திருச்சபை வரம்புக்குள் உள்ள 109 பள்ளிகளில் ஏதேனும் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியை அல்லது உதவி தலைமை ஆசிரியை பணியை வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    நன்றி: 

    அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது

    மத்திய அரசு உறுதி அளிக்காத வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.), பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.  

    தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ரூ. 5 லட்சம் கோடி நிதி உள்ளது. இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.  

    ஸ்திரமற்ற பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனால் ஏற்படும் நஷ்டத்தை அப்பாவித் தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது என அரசின் முடிவை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்க்கின்றன. 

    பங்குச் சந்தை முதலீடுகளுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. இதில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசு உத்தரவாதம் அளிக்காவிட்டால் பங்குச் சந்தை முதலீட்டுக்கு அனுமதிக்க முடியாது என்று தொழிலாளர் நலத்துறைச் செயலர் பி.சி. சதுர்வேதி, நிதிச் செயலர் அசோக் சாவ்லாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

    பிஎப் நிதியை நிர்வகிக்கும் அமைப்பாக மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) உள்ளது. இதன் தலைவராக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உள்ளார். இவரது தலைமையில் கடந்த மாதம் 15-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓய்வுக் கால நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து ஆராயப்பட்டது.

    நன்றி: 

     

    ஒரே பணி; இரு வேறு ஊதியம் - இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி நிலைக்கு உட்படுத்தப்படுவார்களா?


    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலை ப்பள்ளிகளில் பணிபுரியும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உள்படுத்தப்படுவர் என்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் உறுதிமொழி 3 ஆண்டுகளாகியும் அமலாகவில்லை. இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் 1 முதல் 8-ம் வகுப்புகள் வரை இடைநிலை ஆசிரியர்களாக நியமனம் பெற்று பணியாற்றி வந்தனர்.

    இந்நிலையில், 27.6.2003-ல் வெளியிடப்பட்ட அரசாணை அடிப்படையில் 6,7,8-ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் 2004-ம் ஆண்டு தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

    2006-ல் திமுக அரசு பொறுப்பேற்றதும், இந்த ஆசிரியர்கள் 1.6.2006 முதல் காலமுறை ஊதியத்துக்கு மாற்றப்பட்டனர்.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு போதிக்கும் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர் ஊதியவிகிதத்தில் பணியாற்றுகிறார்கள்.

    இவர்களில் 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் பி.ஏ. தமிழ், பி.லிட். முடித்து தமிழாசிரியர் தகுதியுடனும், பி.ஏ., பி.எஸ்.சி., எம்.காம், எம்.ஏ. பட்டத்துடன் பி.எட். படித்து பட்டதாரி ஆசிரியர் தகுதியுடனும் உள்ளனர். 15 சதவிகிதம் பேர் ஏதேனும் ஒரு பட்ட அல்லது பட்டமேற்படிப்பு முடித்துள்ளனர். 5 சதவிகிதம் பேர் மட்டுமே கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்ளாதவர்களாக உள்ளனர்.

    6, 7, 8-ம் வகுப்புகளுக்கு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றுகிறார்கள். இதனால் ஒரே பணி; இருவேறு ஊதிய விகிதம் என்ற அவல நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

    ஏற்கெனவே 6, 7 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு போதிக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து ஒரு தீர்வை அளித்த பின்னரே பட்டதாரி ஆசிரியர்களை அப்பணியிடங்களில் நியமித்திருக்க வேண்டும் என்று பல்வேறு சங்கங்களும் கருத்து தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மாநிலம் முழுக்க பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டிருக்கின்றன.
     
    24.11.2007-ல் சென்னையில் 8 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்ற கல்வி மாநாட்டில் பங்கேற்ற மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கை குறித்து முதல்வரிடம் பேசி, பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதியளித்தார்.

    ஆனால், அந்த உறுதிமொழி 3 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றப்படவில்லை என்கிறார், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் வி.எல். சேம் பிரின்ஸ்குமார்.
     
    29.7.2007 அன்று வெளியிடப்பட்ட அரசாணைப்படி, இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தில் பணியாற்றிய தொழிற்கல்வி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியவிகிதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதுபோல், 4.10.2006-ல் வெளியிடப்பட்ட அரசாணைப்படி, தனியார் நிறுவனங்கள் பள்ளிகளில் நியமித்திருந்த கணினி ஆசிரியர்கள் கம்ப்யூட்டர் பயிற்றுநர்களாக பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதுபோல், பல்வேறு முன்உதாரணங்களையும் கூறமுடியும். அதன்படி, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியர் ஊதிய விகிதத்திற்கு உள்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
     
    உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தற்போதும் பட்டதாரி ஆசிரியர்கள் பாடம் நடத்தும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை அதே பாடங்களையே மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர். ஆனாலும், இவர்களுக்கு பதவி உயர்வு, மற்ற சலுகைகள் வழங்கப்படவில்லை. 2002-ம் ஆண்டு முதல் இன்று வரை இடைநிலை ஆசிரியர்கள் நிலையிலேயே பணியாற்றி வருகின்றனர்.    
     
    இடைநிலை ஆசிரியர்கள் குறித்து அரசு கண்டுகொள்ளவில்லை என்பதால் பல ஆண்டுகளாக பதவி, ஊதிய உயர்வு இல்லாமல் ஒரே இடத்தில் பணியாற்றும் நிலையும் தொடர்கிறது.   
     
    அரசு தங்களுக்கு வழங்கியிருந்த உறுதிமொழி நிறைவேறும் என்று பட்ஜெட் கூட்டத் தொடரின் கல்விமானியக் கோரிக்கையின்போது இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்களுக்கு  மிஞ்சியது ஏமாற்றமே!

    நன்றி:


    12.10.10

    ஆசிரிய சங்க நிர்வாகிகளுடன் கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன் பேச்சுவார்த்தை

    தொடக்க நிலை முதல் மேல் நிலைப் பள்ளி வரையிலான அனைத்து ஆசிரிய சங்க நிர்வாகிகளுடன்  கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  

    தமிழகத்தில் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊதிய குழுவில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகிறது.  மத்திய அரசுக்கு இணையான சம்பளம் ஆசிரியர்களுக்கு தரப்படவில்லைஇதையடுத்து அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவும், சம்பள வேறுபாடுகளை களையவில்லை என்பதால் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன.

    இதற்கிடையில் ஒரு நபர் கமிஷன் பரிந்துரை குளறுபடிகளை கண்டித்து டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மாநில அளவில் சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதுகலை ஆசிரிய சங்கங்கள் இணைந்து "ஜாக்' சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பும் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.

    இதையொட்டி, ஆசிரியர் இயக்கங்களை அழைத்து  கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன்  பேச்சுவார்த்தை நடத்தினார். "ஆசிரியர்களின் சம்பள வேறுபாட்டையும் எதிர்பார்ப்பையும்,  அரசு அறிந்துள்ளது. சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
    .

    10.10.10

    மேலவை ஆசிரியர் வாக்காளர் பட்டியல் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம்

    சட்ட மேலவை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், சங்கங்கள் மூலமாக விண்ணப்பிக்க கூடாது என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. 

    சட்ட மேலவை ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது. தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நவ., 6 வரை விண்ணப்பிக்கலாம். உயர்நிலைப்பள்ளி மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ள பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாவது பணி செய்திருக்க வேண்டும். இவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் அல்லது இவர்கள் பணிபுரியும் நிறுவனம் (முதல்வர்/தலைமை ஆசிரியர்) மூலமாக மொத்தமாக விண்ணப்பங்களை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அதேசமயம், சங்கங்கள் மூலமாக விண்ணப்பிக்க கூடாது. இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

    நன்றி: 

    9.10.10

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில்  8ம் தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 
    • அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர் நிலைக்கு உட்படுத்த வேண்டும்.
    • இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள மேம்படுத்தப்பட்டுள்ள ஊதிய விகிதமான (பே பாண்ட் 2) 9,300-34,800 கிரேடு பே 4,200 ரூபாய் சாதாரண நிலைக்கும், 9,300-34,800 கிரேடு பே 4,600 ரூபாய் தேர்வு நிலைக்கும், 9,300-34,800 கிரேடு பே 4,800 ரூபாய் சிறப்பு நிலைக்கு வழங்க வேண்டும். 
    • மகப்பேறு விடுப்பு 6 மாதங்கள் வழங்க வேண்டும். 
    • பதவி உயர்வுக்கு 5 சதவீதம் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் 8ம் தேதி காயிதே மில்லத் மணி மண்டபம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாநில தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் இசக்கியப்பன், மாநில துணை பொது செயலாளர் இதயராஜா முன்னிலை வகித்தனர். மாநில தலைமையிட செயலாளர் சோமசேகர் அனைவரையும் வரவேற்றார். மாநில பொது செயலாளர் குமரேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். உண்ணாவிரதத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவி தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். அகில இந்திய எஸ்.டி.எப்.ஐ பொது செயலாளர் ராஜேந்திரன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மாநில பொருளாளர் உதயசூரியன் நன்றி கூறினார்.
    .

    6.10.10

    ஆசிரியர்கள் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான தகுதிகள்

    • இந்தியக் குடிமகன்/ள்-ஆகவும் தொகுதியில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் 01.11.2010-க்கு முன்பாக கடந்த ஆறு ஆண்டு காலத்தில், குறைந்தபட்சமாக மொத்தம் மூன்றாண்டு கால அளவிற்கு, மாநிலத்திலுள்ள இடைநிலைப் பள்ளித் தரத்திற்குக் குறையாத, குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணியாற்றியவராயும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படத் தகுதியுடையவராயும் இருத்தல் வேண்டும். அவ்வாறு குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியல்  www.elections.tn.gov.in என்ற வலைதளத்தில் காணலாம்.
      .
    • ஆசிரியர்கள் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படக் கோரும் ஒரு நபரின் படிவம் 19 - உடன், ஒரு ஒப்பளிப்பு செய்யப்பட்ட பணியிடத்தில் முந்தைய ஆறு ஆண்டுகளில் மொத்தம் மூன்றாண்டு கால அளவிற்கு ஆசிரியப் பணியாற்றியமைக்கான சான்றிதழை கல்வி நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணியாற்றியிருக்கும் நேர்வில், அந்த ஒவ்வொரு கல்வி நிறுவனத்திடமிருந்தும் தனித்தனிச் சான்றிதழ் நகல்களைப் பெற்று இணைக்கவேண்டும்.
    • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதியில் ஆசிரியர் பணியில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், சான்று(கள்) அவர் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த கல்வி நிறுவனத்தினால் கையொப்பமிடப்படவேண்டும்.
    • நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஒட்டு மொத்தமாக அளிக்கப்படும் பெயர் சேர்த்திடுவதற்கான விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அலுவலரால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. இருப்பினும் தகுதியுள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் அந்நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் படிவம் 19 விண்ணப்பங்களை தனித்தனியாக பெற்று தனித்தனிச் சான்றுகளுடன் இணைத்து ஒட்டுமொத்தமாக அளித்திடலாம்.
    • ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆகிய இரண்டு தொகுதிகளின் வாக்காளர் பட்டியலிலும் சேர்த்திடுவதற்கு தகுதியான நபர்கள் தனித்தனியே படிவம் 18 மற்றும் படிவம் 19இல் விண்ணப்பித்திட வேண்டும்.
    • விண்ணப்பதாரர் இருப்பிடச் சான்றாக கீழ்க்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை படிவம் 18 / படிவம் 19 உடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
    (அ) வங்கி/கிசான்/அஞ்சல் அலுவலக நடப்புக் கணக்குக் கையேடு; அல்லது
    (ஆ) விண்ணப்பதாரரின் உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை/கடவுச்சீட்டு/ஓட்டுநர் உரிமம்/ வருமான வரி விதிப்பு ஆணை; அல்லது
    (இ) விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது அவரது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள குடிநீர்/தொலைபேசி/மின்சாரம் சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றின் சமீபத்திய ரசீது; அல்லது
    (ஈ) கொடுத்துள்ள முகவரியில் விண்ணப்பதாரரின் பெயருக்கு வந்து சேர்ந்த தபால் துறையின் தபால்கள்
    .

    5.10.10

    மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியல் - பட்டதாரிகள், ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்

    தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தகுதி உடைய பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு மேல்சபை தேர்தலுக்கு பட்டதாரி தொகுதிகள், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.

    1.11.2010-ஐ தகுதி நாளாகக் கொண்டு பட்டதாரி தொகுதிக்கு படிவம்-18-ஐ, ஆசிரியர் தொகுதிக்கு படிவம் 19-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

    விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் அளிக்கலாம். மாநகராட்சி பகுதிகளில் மண்டல உதவி ஆணையாளர்களும், இதர பகுதிகளில் தாலுகா அலுவலகங்களில் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்வார்கள்.

    தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்திலும் விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம். வாக்காளர்களுக்கான தகுதிகள், தொகுதி பட்டியல் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெயர் சேர்க்கக் கோரி கோரி நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மொத்தமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

    பட்டதாரி தொகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் இதர உறுப்பினர்களுக்கும் சேர்த்து விண்ணப்பம் கொடுக்கலாம். இதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசல் கல்விச் சான்றிதழ் ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.

    ஆசிரியர் தொகுதியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேர்த்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பம் கொடுக்கலாம். பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற கடைசி நாள் நவம்பர் 6-ந் தேதி ஆகும். வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22-ந் தேதி வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு கடைசி நாள் டிசம்பர் 7-ந் தேதி ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    விண்ணப்பங்களை டவுண்லோடு செய்க.
    . .

    பிரபலமான இடுகைகள்

    தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்