தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.12.11

கடலூர்: ஜனவரி 4 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தானே புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் வரும் ஜனவரி 4ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணிகளை செய்வதற்கு வசதியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

பள்ளி மேலாண்மைக் குழு - அமைப்பு விதிகள்; அரசாணை

Constitution of School Management Committee

30.12.11

குமரி மாவட்ட தஇஆச நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலருடன் சந்திப்பு


கன்னியாகுமரி மாவட்ட தஇஆச நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களின்  பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு முதன்மைக் கல்வி அலுவலரிடம் வழங்கப்பட்டது.

கோரிக்கைகள்:
  • 1990, 1991, 1992ஆண்டுகளில் ஓப்பந்த அடிப்படையில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்களை அரசாணை 336ன்படி தொகுப்பூதியத்தில் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு பணிவரன்முறை, தகுதிகாண் பருவம், தேர்வுநிலை சிறப்புநிலை போன்றவற்றில் உரிய திருத்தம் செய்து நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க வேண்டுகிறோம்.
  • ஆசிரியர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறுவதில் உள்ள இடர்பாடுகளினால் தேர்வுநிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய ஆணை வழங்காமல் உள்ளது. பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுகின்ற பட்டங்களுக்கு உண்மைத்தன்மை அறியப்பட்டு பணிபதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. 10 மற்றும் 12ம் வகுப்பு சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதில் அரசு தேர்வுத்துறையால் காலதாமதம் ஏற்படுகிறது. இது பொருள் குறித்து தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர் (மேல்நிலைக் கல்வி), சென்னை – 6 அவர்களின் செயல்முறைகள் (ந. க. எண். 91662/டபிள்யு2/இ2/2010 நாள். 29.9.2010) மற்றும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை – 6 அவர்களின் செயல்முறைகள் (ந. க. எண். 60039/சி5/சி19/2004 நாள். 05.11.2004)-இன் படி தேர்வுநிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய ஆணை வழங்க வேண்டுகிறோம்.
  • அரசு பள்ளி ஆசிரியர்களைப் போன்றே அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் கூட்டு அமர்வின் மூலம் பணிவரன்முறை தகுதிகாண் பருவம், தேர்வு நிலை சிறப்பு நிலை போன்ற கருத்துருக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
  • கல்வி உரிமைச் சட்டம் – 2009இன் படி 6,7மற்றும் 8 வகுப்புகளுக்கு ஒவ்வொரு 35 மாணவர்களுக்கும் ஓர் ஆசிரியர் என்ற அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை 35க்கு அதிகமாகும் போது இரண்டாவது ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர் பணியிட நிர்ணயத்தின் போது கல்வி உரிமைச் சட்டம் – 2009இன் அடிப்படையில் ஆசிரியர் பணியிட நிர்ணயம் செய்யப்படாமையால் இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக மாற்றப்பட்டுள்ளது. இது பொருள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
  • அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் மாதம்தோறும் குறுவள மையங்களில் நடைபெறும் பயிற்சிகளில் கலந்துகொள்ள இயலாத ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் மறு பயிற்சியை அந்தந்த வட்டார வள மையங்களில் நடத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

27.12.11

இளமை குன்றாத ஜன கன மன... தேசிய கீதத்திற்கு இன்று வயது 100

ஜன..கன..மன என்று இந்திய தேசீய கீதம் நம்நாட்டில் முதன் முதலாக முழங்கியதன் 100-ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு சுதந்திரமடைந்து 64 ஆண்டுகள் ஆன போதும் இந்தியரை ஒற்றுமைப்படுத்த நாட்டின் தேசிய கீதம் முக்கியத்துவம் பெறுகிறது. 

நூற்றாண்டு கண்ட தேசிய கீதம்
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் கடந்த 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ம் தேதி இந்திய தேசிய கீதமாக, நோபல் பரிசு பெற்ற வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜன.கன.மன கீதம் அங்கீகரிக்கப்பட்டது. 52 வினாடிகளில் இப்பாடலை பாடி முடிக்க வேண்டும் என அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு முன்னரே இந்திய தேசிய கீதம் , ஓங்கி ஒலிக்கப்பட்டுவிட்டது. முதன்முதலாக கடந்த 1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போதே ஜன.கன .மன ஹதி. நாயக. ஜேயஹே... என துவங்கும் தேசிய கீதம் பாடப்பட்டது. மொழி, இனத்தால் வேறுபட்டாலும் ஒற்றுமையில் நாம் இந்தியர் அதனை இப்பாடல் வலியுறுத்துகிறது. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையால் இந்தியர்கள் என அடை‌‌யாளம் காண , நாட்டில் எந்த அரசு மற்றும் தனியார் விழாக்களில் இந்திய தேசிய கீதம் இன்றளவும் ஒலிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் அந்நாட்டு தேசிய கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் எப்போதும் ஒலிக்கும் ‌மந்திரம் ஆகும். அது போல் இந்தியர்களாகிய நாம் நமது தேசப்பற்றை ‌காண்பிக்க ஜன..கன.மன தேசிய கீதம் , ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

நன்றி:

26.12.11

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2012

RHL-2012

19.12.11

பணிநிரவல் - பணி நியமன நாள் அடிப்படையில் இளையவர் வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார்

Junior - Senior Deployment

மாணவர்களை சந்தோஷப்படுத்துமா முப்பருவ கல்வித்திட்டம்?

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலம், தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, சமச்சீர் பாடத்திட்டமாக மாற்றப்பட்டதால், அனைத்து மாணவர்களும் ஏற்றத்தாழ்வின்றி, ஒரே பாடங்களை படிக்க முடிகிறது. ஜூனில் துவங்கும் முதல் பாடத்திலிருந்து, பொதுத்தேர்வு வரையான கடைசி பாடம் வரை,
அரையாண்டிலிருந்து அனைத்துப் பாடங்களையும் தொடர்ந்து படிக்க வேண்டும். ஓராண்டுக்கான பெரிய புத்தகங்களையும், ஒவ்வொரு பாடத்திற்கான நான்கு நோட்டுக்களையும், தேர்வு முடியும் வரை சுமக்க வேண்டும்.ஒவ்வொரு தேர்வுக்கும் சராசரியாக 20 பாடம் என்றால் கூட, கடைசி ஒரு மாதத்தில் 100 பாடங்களை மனப்பாடம் செய்வது, அனைத்து மாணவர்களுக்கும் இயலாது. மேலும் பள்ளி வளாகத்தில் படிப்பதும், எழுதுவதும் தவிர, மாணவர்களுக்கு சிந்தனை செய்வதற்கு நேரமும், வாய்ப்பும் இல்லை. இது தான் இப்போதுள்ள தேர்வு முறை.

இப்போது அறிவித்துள்ள முப்பருவ முறை, மாணவர்களின் உற்சாகத்தை இருமடங்காக்கி உள்ளது. முதுகில் பையை சுமந்து கொண்டு, கஷ்டப்பட்டு செல்லும் மாணவர்களின் நிலையில் இருந்து பார்த்தால், இது சந்தோஷமான விஷயம். பாடச்சுமையும், எடையும் ஒரே நேரத்தில் குறைவதால், மனதின் பாரமும் சட்டென்று குறைந்து விடும். 

ஜூன் முதல் செப்., வரையும், அக்., முதல் டிச., வரையும், ஜன., முதல் ஏப்., வரையும் மூன்று பருவங்களாக பிரித்து, புதுப்புது பாடங்களை படிக்கும் போது, ஆர்வம் அதிகரிக்கும். வெறும் வார்த்தைகளை கவனிப்பதை விட, காட்சிகளாக, செயல்விளக்கமாக இருந்தால், எளிதாக பாடங்கள் மனதில் பதிந்துவிடும். ஆக மொத்தம்... மாணவர்களின் அக்கறையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட, முப்பருவ கல்வி திட்டம்... கல்வியாளர்களின் பார்வையில் எப்படி இருக்கிறது? இதோ... உங்கள் பார்வைக்கு இங்கே...

டபிள்யூ. தயா சியாமளா(முதல்வர், எஸ்.பி.ஓ.ஏ., மேல்நிலைப் பள்ளி, மதுரை)
இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்க்க முடியும். மூன்று முறை தேர்வுகள் நடத்தப்படுவதால், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியாக படிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். கணிதத்தை பொறுத்தவரை, இத்திட்டம் சரியாக வருமா என சொல்ல முடியாது. கணிதத்தின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து படித்தால் தான், மனதில் நிற்கும். எனவே கணிதத்தில் பாடத்தை வகுக்கும் போது, முந்தைய பாடங்களின் நினைவுபடுத்தல் இருக்க வேண்டும். இலக்கணப் பாடங்களையும் தொடர்ந்து படித்தால் மட்டுமே, மாணவர்கள் மொழிப்புலமை பெறமுடியும். 

எஸ்.வி.டி. ராஜன் (தலைமை யாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எழுமலை ):
இம்முறை மாணவர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் ஆசிரியர்களுக்கு தான் வேலை கடினம். சில பள்ளிகளில் ஜன., துவக்கத்தில் இருந்து தான், மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வர். இனிமேல் அது இயலாது.

ஆசிரியர்கள் அந்தந்த பாடங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி கற்றுத் தந்தால், மாணவர்கள் மதிப்பெண் பெறும் விகிதமும் அதிகரிக்கும். கணிதம், இலக்கணம் இதெல்லாம் காலத்துக்கும் தொடரும் விஷயம். எங்களைப் போன்ற கிராமப்புற பள்ளி மாணவர்களை கையாளுபவர்களுக்கு, இந்த முறை பெரிய வரம் என்பேன். எங்கள் மாணவர்களும் அந்தந்த பாடங்களை மட்டும் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.

எஸ்.அப் துல் ரஹ்மான் (எட்டாம் வகுப்பு மாணவர், மதுரைக் கல்லூரி பள்ளி, மதுரை)
நான் நன்றாக படிக்கும் மாணவனாக இருந்தாலும், அனைத்து பாடங்களையும் திரும்ப திரும்ப படித்தால் தான் நினைவில் நிற்கிறது. முப்பருவ முறையாக இருந்தால், குறைந்த பாடங்களில் அதிக கவனம் செலுத்தலாம். மதிப்பெண்களும் அதிகமாக பெறலாம். மூடை போல புத்தக சுமையை தூக்க வேண்டாம். மாணவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.

எஸ். ரத்தினபாண்டியன் (தாளாளர், எம்.எஸ்.பி., பள்ளி, திண்டுக்கல்)
நடைமுறை கல்வியில் மனப்பாடமே பிரதானமாக உள்ளது. மாணவர்கள் புத்தகங்களை தூக்கி சுமப்பதால், உடல் பாதிப்பு, மன அழுத்தம் ஏற்படுகிறது. புதியமுறையில், வகுப்பறையில் மாணவர்களுக்கு அதிகம் நேரம் கிடைக்கும். ஆசிரியர்களும் செய்முறை, சோதனை, நேரடி
ஆய்வுகள் மூலம் மாணவர்களை சோதிக்க முடியும்; தனித்திறமை வெளிப்படும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் மட்டுமே, திட்டத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடையும்.

கே.கலைவாணி (எட்டாம் வகுப்பு ஆசிரியை, குமரன் நடுநிலைப்பள்ளி, ராமநாதபுரம்)
தற்போதுள்ள முறையில் மாணவர்கள் அதிகமான பாடங்களை படிப்பதால் சோர்வடைகின்றனர். சாதாரணமாக வீட்டுப்பாடங்களை செய்வதில் திணறி, மறுநாள் பாடங்களை கவனிக்க முடியாத நிலையை நேரில் காணமுடிகிறது. பருவமுறையில் படிப்பதும், கற்றுத்தருவதும் எளிது. மாணவர்கள் புரிந்து கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். தற்போதைய முறையில், சுமாரான மாணவர்களால் திருப்புதல் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. பருவமுறை தேர்வில் குறைந்த பாடங்களே இருப்பதால், கல்வியின் மீது ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

வி.சியாமளா(கல்வியாளர், ஆக்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை)
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, முப்பருவ முறை சரியாக இருக்கும். ஏனென்றால் ஒரே ஆசிரியரே அனைத்து பாடங்களையும் நடத்திவிடுவர். ஆறாம் வகுப்பிற்கு மேல் இத்திட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்களின் நினைவுத்திறன் குறைந்துவிடும். தற்போது மொபைல் போன் பயன்பாட்டால், உறவினர்களின் போன் எண்களை கூட நினைவில் வைப்பதில்லை. இதேநிலை தான் கல்வியிலும் ஏற்படும். படித்து முடித்தவுடன், புத்தகங்களை தூக்கி எறிந்துவிடுவர். அந்தப்பாடம் அப்படியே மறந்துவிடும். அறிவியல் துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு, இது பிரச்னையாகிவிடும். ஆசிரியர்களுக்கும் அனைத்து பாடங்களும் நினைவில் இருக்காது.

அறிவுத் திறனை வளர்க்கலாம்:(முதன்மை கல்வி அலுவலர், மதுரை): அரசு திட்டத்தில் இது சிறந்த அணுகுமுறை. புத்தக சுமை இல்லாததால், மாணவர்களின் மனஅழுத்தம் குறையும். இதனால் ஆசிரியர்களின் மனஅழுத்தமும் குறையும். வெறும் பாடங்களை மட்டும் படிக்காமல், பாடம் சார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சிந்திக்கும் திறனை இது மேம்படுத்தும். கேரளா, கர்நாடகாவில் இம்முறை செயல்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் பாரபட்ச மின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கிறோம். இதனால் முப்பருவ முறையால், இளம் மாணவர்களின் அறிவுத்திறன் குறையாது. கிரேடிங் முறை மூலம், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த முடியும். முப்பருவ தேர்வு முறையில், வெற்றி பெறுவதற்கான மதிப்பெண் பற்றி இன்னும் முழுமையாக கூறவில்லை. அரசு அறிவித்த பின் தான், வெற்றிபெறுவதற்கான மதிப்பெண்ணை அதிகரிக்க வேண்டுமா என்பதை பற்றி கூறமுடியும்.

 நன்றி:

 

கல்விக்கான வீடியோ இணையதளம் : YOU TUBE அறிமுகம்

வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக திகழ்வது யூடியூப் ஆகும். சர்வதேச மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற யூடியூப் நிறுவனம், பள்ளி குழந்தைகளுக்காக, கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டு‌ம் கொண்ட இணைய‌தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. 

"யூடியூப் ஃபார் ஸ்கூல்ஸ்" என்ற பெயரில் இந்த இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. 4.5 லட்சம் எண்ணிக்கையிலான கல்வி தொடர்பான வீடியோக்கள் இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. பள்ளிகளில் ஸ்மார்‌ட்கிளாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டுவரும் நிலையில், யூடியூப்பின் இந்த ‌சேவை ‌உற்ற பயனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
.

14.12.11

அடுத்த கல்வியாண்டில் இருந்து முப்பருவ கல்வித் திட்டம் அமல்

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, நேற்று அரசாணை வெளியிடப் பட்டது.

நடைமுறையில் உள்ள தேர்வு முறையால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை தருவதை தவிர்க்கவும், உடலியல் ரீதியாக ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், புதிய முறையிலான தேர்வு திட்டம் மற்றும் கல்வித் திட்டத்தை, கடந்த ஆக., 26ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் படி, "பாடப் புத்தகங்கள், மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு, மூன்று பருவங்களாக தனித்தனியே கற்பிக்கப் படும்; ஒவ்வொரு பருவத்தின் முடிவிலும் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை, தொடர் மதிப்பீட்டு முறை மூலம் மதிப்பீடு செய்யப் படும்,' என, அறிவித்து இருந்தார். மேலும், புதிய முறையில் மாணவர்களின் இதர திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்து இருந்தார்.


செயல் வடிவம் : 
இந்த அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில், கூறியிருப்பதாவது: 
சட்டசபையில், முதல்வர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த கல்வியாண்டில் (2012-13) இருந்து, 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என்று, பள்ளிக்கல்விக்கான மாநில பொது வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அமல்படுத்துவதற்காக, இயக்குனர் அனுப்பியுள்ள பரிந்துரையை அரசு பரிசீலனை செய்து, வாரியத்தின் முடிவை அமல்படுத்த அரசு உத்தரவிடுகிறது.

முப்பருவ முறையால், வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் கற்பதற்கான நேரம் கிடைக்கும். புத்தகங்களில் படிப்பதை, செயல்பூர்வமாக, நேரடியாக சம்பந்தபட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும் திட்டம், மாணவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும். மனப்பாடத்திற்கு அப்பாற்பட்டு, கல்வி சார்ந்த புரிதல்களுக்கு இத்திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்.


ஒவ்வொரு வகுப்பிலும், மாணவர்கள் கலந்துரையாடல் செய்வதற்காக, போதிய நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். மாணவர்களின் செயல் திறன்களின் வளர்ச்சி, அவ்வப்போது மதிப்பீடு செய்யப்படும்.ஒரு பருவத்திற்கான சிறிய பகுதிகளை மட்டும் ஆசிரியர்கள், பொறுமையாக கற்பிக்கலாம். ஆசிரியர்கள் - மாணவர்கள் ஒருங்கிணைந்து, நண்பர்கள் போன்று வகுப்பறைகளில் செயல்படவும் வகுக்கும்.முப்பருவ கல்வி திட்டம் மற்றும் தொடர் மதிப்பீட்டு தேர்வு முறை, 2013-14ம் கல்வியாண்டு முதல், 9,10 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். 

இவ்வாறு பள்ளிக்கல்வித் துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


முப்பருவ முறை:
* முதல் பருவம் - ஜூன் முதல் செப்டம்பர் வரை
* இரண்டாம் பருவம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரை
* மூன்றாம் பருவம் - ஜனவரி முதல் ஏப்ரல் வரை

.

12.12.11

பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவு

Scholarship for Students

5.12.11

திறந்த நிலை பல்கலை பட்டங்கள் மத்திய அரசு தேர்வுகளுக்கு அனுமதி; மாநில அரசு தேர்வுகளுக்கு இல்லை

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில் நேரடி பட்டம் பெறுவோர், மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்கப் படுகின்றனர். மாநில அரசு தேர்வுகளுக்கு, இவர்களை அனுமதிக்காதது, முரண்பாடாக உள்ளது.

சென்னைப் பல்கலை, மதுரை காமராஜர் பல்கலை, அண்ணாமலைப் பல்கலை உள்ளிட்டவை, திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வந்தன.
கடந்த, 2003 - 04 கல்வியாண்டில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை உருவாக்கப்பட்டது. தற்போது, மாநில அளவில் இந்த பல்கலை மட்டுமே, திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சராசரியாக, 20 ஆயிரம் பேர், இப்பல்கலையின் நேரடி முறையில் பட்டம் பெறுகின்றனர். அதாவது, பிளஸ் 2 முடிக்காமல், 18 வயதை மட்டும் தகுதியாகக் கொண்டு, இளநிலைப் படிப்புகளில் பட்டம் பெறுகின்றனர்.
இந்த முறையில் பட்டம் பெறுவோர், அரசு தேர்வில் பங்கேற்பு மற்றும் பதவி உயர்வு பெற தடைவிதித்து, முந்தைய தி.மு.க., அரசு, 2009 ஆகஸ்டில் அரசாணை பிறப்பித்தது.

பட்டதாரிகள் குமுறல் : 
"மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்தும் தேர்வுகள், "ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்' (எஸ்.எஸ்.சி.,) தேர்வுகளில் நாங்கள் பங்கேற்கும்போது, மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பங்குபெற தடைவிதிக்கப் பட்டிருப்பது முரணான செயலாக உள்ளது,' என, இப்பட்டதாரிகள் குமுறுகின்றனர்.

மிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையில், பி.ஏ., (வரலாறு) இறுதியாண்டு படிக்கும், புளியந்தோப்பைச் சேர்ந்த ஜிலானி கூறியதாவது
குடும்ப பொருளாதார சூழல் காரணமாக, ஒன்பதாம் வகுப்பிற்கு மேல் படிக்க இயலவில்லை. தற்போது பட்டப் படிப்பு பயில்வது மகிழ்ச்சி அளிக்கிறது. முந்தைய தி.மு.க., அரசு, எங்களுக்கு எதிராக பிறப்பித்த அரசாணையால், என்னைப் போன்ற பல்லாயிரக்கணக்கான பேர், அரசு தேர்வுகளில் பங்குபெறும் வாய்ப்பை இழந்து வருகிறோம்.

தேர்வுகளில், போட்டியாளர்களின் திறமையை மட்டுமே பார்த்தால் போதும். அவர்கள் எந்த முறையில் பட்டம் பெற்றனர் என்பதற்கு, அரசு முக்கியத்துவம் தரத் தேவையில்லை. அரசு பணிகளுக்கான தேர்வுகளில் எங்களையும் அனுமதிக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு ஜிலானி கூறினார்.

அரசிடம் கோரிக்கை: 
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலையின், பெயர் வெளியிட விரும்பாத, நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது
இந்தியாவில், இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை உள்ளிட்ட, 14 பல்கலைகள், திறந்தநிலைப் பட்டப் படிப்புகளை வழங்குகின்றன. இவற்றில், பிளஸ் 2 முடிக்காமல், நேரடியாக இளநிலைப் பட்டம் பெறுவோரும், மத்திய அரசு பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்கலாம் என, யு.சி.ஜி., விதிமுறைகளில் உள்ளது. இதை மத்திய அரசும் செயல்படுத்தி வருகிறது.
எனவே, எங்கள் பல்கலையின் பிற பட்டதாரிகளைப் போல, நேரடியாக பட்டம் பெறுவோரும், மாநில அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கு அனுமதிக்க வேண்டும். இதற்கு தடையாக உள்ள அரசாணை எண், 107யை திரும்பப் பெற, தமிழக அரசிடம் விரைவில் கோரிக்கை விடுக்க உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

4.12.11

மாவட்டக் கல்வி அலுவலர்கள் 69 பேர் மாற்றம்

தமிழகம் முழுவதும், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் அதிரடியாக மாற்றப்பட்டதோடு, மாவட்டக் கல்வி அலுவலர்களாக, 46 பேர், பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறையில், சமீபத்தில், இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்களும், இவர்களைத் தொடர்ந்து, 37 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 19 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, முதன்மைக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், 69 மாவட்டக் கல்வி அலுவலர்கள் மாற்றம் செய்யப் பட்டுள்ளனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 46 பேர், மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வி இயக்குனர் பிறப்பித்துள்ளார்.

நன்றி:

2.12.11

அரசு ஊழியர்களின் திருமணமாகாத மகள்களுக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

ஓய்வூதியம் பெறும், அரசு ஊழியர்களின் திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு, வாழ்நாள் முழுவதும், குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஓய்வூதியதாரர்களின், திருமணமாகாத, விதவை, விவாகரத்தான மகளுக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக அரசின் ஓய்வூதியர்களுக்கும் வழங்க வேண்டுமென, பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்தன. இதை பரிசீலித்த அரசு, 25 வயதை கடந்த, குடும்ப ஓய்வூதியதாரர்களின் திருமணமாகாத, விதவை, விவாகரத்துப் பெற்ற மகள் ஆகியோருக்கு, குடும்ப ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

இதற்கான நிபந்தனைகள்:

* ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின், 25 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத மகளும், விதவை மற்றும் விவாகரத்தான மகள்களும், வாழ்நாள் முழுமைக்கும் குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்.

* ஒரு குடும்பத்தில், 25 வயதுக்கு குறைவான, குடும்ப ஓய்வூதியம் பெற தகுதியுள்ள, குழந்தைகளின் தகுதி காலம் முடிந்த பின்போ, அந்த குடும்பத்தில், வேறு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகள் இல்லாவிட்டாலோ, 25 வயதுக்கு மேற்பட்ட மகள்கள் பெறலாம்.

* திருமணமோ, மறுமணமோ புரிந்தால், அவர்களின் ஓய்வூதியம் உடனே நிறுத்தப்படும். இதை உறுதி செய்யும் வகையில், ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும், திருமணம் அல்லது மறுமணம் புரியாமை சான்றிதழை வழங்க வேண்டும்.

* வயது அடிப்படையில் மூத்தவருக்கு முதலில், வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். மூத்தவர் மறுமணம் புரிந்தாலோ, இறக்க நேரிட்டால் மட்டுமே, அடுத்த இளைய மகள், குடும்ப ஓய்வூதியம் பெற தகுதி பெறுவார்.

* மாத வருமானம், 2,550 ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் மட்டுமே, ஓய்வூதியம் பெறலாம். இது தொடர்பான வருமானச் சான்றிதழை ஆண்டுதோறும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு, நவ., 28ம் தேதியிலிருந்து, அமலுக்கு வந்துள்ளது.

.

பகுதி நேர கலை ஆசிரியர் நியமனம் - விதிமுறைகள் & அரசாணை

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை உத்தரவுப்படி 6 முதல் 8ம் வகுப்புகளில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் பள்ளிகளில் அரசு உத்தரவுப்படி பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

இதற்கான விண்ணப்பத்தை முதன்மை கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இந்த பணி நியமனம் முற்றிலுமாக தற்காலிகமானது. திட்ட காலம் முடியும் வரை மட்டுமே இந்த ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டியிருக்கும். எவ்வித முன்னறிவிப்பு இன்றி, எந்த நேரத்திலும் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்வதற்கும் வழி வகை உள்ளது.

.

1.12.11

முதன்மைக் கல்வி அலுவலர் பணி மாறுதல் & பதவியுயர்வு விவரம் - அரசாணை

CEO Promotions, Transfers and Incharge

ஆசிரியர் பணிக்கான தகுதியாக மட்டுமே, "டிஇடி' தேர்வு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம்

"ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப் பணியிடங்களுமே, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார். தகுதித் தேர்வில் உள்ள பல்வேறு சந்தேகங்கள், குழப்பங்கள் தீர்க்கப்பட்டு, முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது குறித்து, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:
ஆசிரியர் பணிக்கு வர விரும்பும் அனைவரும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்லூரி ஆசிரியர் பணியில் சேர விரும்புவோருக்கு, "நெட்' அல்லது, "ஸ்லெட்' எப்படி ஒரு தகுதித் தேர்வாக இருக்கிறதோ, அதேபோல் தான், "டிஇடி' தேர்வும். ஆசிரியர் பணிக்குச் செல்ல, இது ஒரு தகுதித் தேர்வு; அவ்வளவு தான். 

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு வழங்கப்படும் சான்றிதழ், 7 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். இத்தேர்வு ஆண்டுதோறும் நடக்கும். ஆசிரியர் பணிக்கு படித்த அனைவரும், இந்த தகுதித் தேர்வை எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற, குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்த மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு, பணி நியமனம் நடைபெறாது. எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தான், பணி நியமனம் இருக்கும்.

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கு முடியும் வரை, மாநில பதிவுமூப்பு அடிப்படையில், பணி நியமனம் செய்யப்படும். வழக்கு முடிவுக்கு வந்தபின், இடைநிலை ஆசிரியர்களை எந்த வகையில் நியமனம் செய்வது என்பது குறித்து, தமிழக அரசு முடிவு செய்யும். அதே நேரத்தில், அவர்கள் தகுதித் தேர்வில் பங்கேற்று, தகுதி ஏற்படுத்திக்கொள்ள எந்தத் தடையும் இல்லை.

பட்டதாரி ஆசிரியர், முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் ஆகிய பணியிடங்கள், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படும். விரைவில் தேர்வு செய்யப்பட உள்ள முதுகலை ஆசிரியர் உட்பட அனைத்து வகை ஆசிரியர்களும், எழுத்துத் தேர்வு மூலமே நியமனம் செய்யப்படுவார்கள். இனிமேல், பதிவுமூப்பு அடிப்படையில், எவ்வித பணி நியமனங்களும் இருக்காது. இந்த வகை ஆசிரியர்கள், எழுத்துத் தேர்வில் பங்கேற்பதற்கு முன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.

பட்டதாரி தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில், கணிதம்-அறிவியல் அல்லது சமூகக் கல்வி ஆகிய ஏதாவது ஒன்றின் கீழ், 60 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்க வேண்டும் என இருப்பதை மாற்றி, தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் இருந்தே, 60 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கேட்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதிலும் எவ்வித பிரச்னையும் இருக்காது.

இவ்வாறு, அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

முதல் தேர்வு எப்போது?
மே அல்லது ஜூன் மாதத்தில், முதல் தகுதித் தேர்வு நடைபெறும் என கூறப்படுகிறது. அதன்பின், ஆண்டுதோறும் குறிப்பிட்ட தேதியில் இத்தேர்வை நடத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உட்பட அனைத்து வகை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும், ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களும், இத்தேர்வை எழுத உள்ளனர்.

நன்றி:






.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்