தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.12.11

மாணவர்களை சந்தோஷப்படுத்துமா முப்பருவ கல்வித்திட்டம்?

தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. 

சமச்சீர் கல்வி திட்டத்தின் மூலம், தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, சமச்சீர் பாடத்திட்டமாக மாற்றப்பட்டதால், அனைத்து மாணவர்களும் ஏற்றத்தாழ்வின்றி, ஒரே பாடங்களை படிக்க முடிகிறது. ஜூனில் துவங்கும் முதல் பாடத்திலிருந்து, பொதுத்தேர்வு வரையான கடைசி பாடம் வரை,
அரையாண்டிலிருந்து அனைத்துப் பாடங்களையும் தொடர்ந்து படிக்க வேண்டும். ஓராண்டுக்கான பெரிய புத்தகங்களையும், ஒவ்வொரு பாடத்திற்கான நான்கு நோட்டுக்களையும், தேர்வு முடியும் வரை சுமக்க வேண்டும்.ஒவ்வொரு தேர்வுக்கும் சராசரியாக 20 பாடம் என்றால் கூட, கடைசி ஒரு மாதத்தில் 100 பாடங்களை மனப்பாடம் செய்வது, அனைத்து மாணவர்களுக்கும் இயலாது. மேலும் பள்ளி வளாகத்தில் படிப்பதும், எழுதுவதும் தவிர, மாணவர்களுக்கு சிந்தனை செய்வதற்கு நேரமும், வாய்ப்பும் இல்லை. இது தான் இப்போதுள்ள தேர்வு முறை.

இப்போது அறிவித்துள்ள முப்பருவ முறை, மாணவர்களின் உற்சாகத்தை இருமடங்காக்கி உள்ளது. முதுகில் பையை சுமந்து கொண்டு, கஷ்டப்பட்டு செல்லும் மாணவர்களின் நிலையில் இருந்து பார்த்தால், இது சந்தோஷமான விஷயம். பாடச்சுமையும், எடையும் ஒரே நேரத்தில் குறைவதால், மனதின் பாரமும் சட்டென்று குறைந்து விடும். 

ஜூன் முதல் செப்., வரையும், அக்., முதல் டிச., வரையும், ஜன., முதல் ஏப்., வரையும் மூன்று பருவங்களாக பிரித்து, புதுப்புது பாடங்களை படிக்கும் போது, ஆர்வம் அதிகரிக்கும். வெறும் வார்த்தைகளை கவனிப்பதை விட, காட்சிகளாக, செயல்விளக்கமாக இருந்தால், எளிதாக பாடங்கள் மனதில் பதிந்துவிடும். ஆக மொத்தம்... மாணவர்களின் அக்கறையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட, முப்பருவ கல்வி திட்டம்... கல்வியாளர்களின் பார்வையில் எப்படி இருக்கிறது? இதோ... உங்கள் பார்வைக்கு இங்கே...

டபிள்யூ. தயா சியாமளா(முதல்வர், எஸ்.பி.ஓ.ஏ., மேல்நிலைப் பள்ளி, மதுரை)
இத்திட்டத்தின் மூலம் மாணவர்கள் தினமும் படிக்கும் பழக்கத்தை வளர்க்க முடியும். மூன்று முறை தேர்வுகள் நடத்தப்படுவதால், ஒவ்வொரு தேர்வுக்கும் தனியாக படிக்க வேண்டும். இது மாணவர்களுக்கு எளிதாக இருக்கும். கணிதத்தை பொறுத்தவரை, இத்திட்டம் சரியாக வருமா என சொல்ல முடியாது. கணிதத்தின் அடிப்படை கோட்பாடுகளை தொடர்ந்து படித்தால் தான், மனதில் நிற்கும். எனவே கணிதத்தில் பாடத்தை வகுக்கும் போது, முந்தைய பாடங்களின் நினைவுபடுத்தல் இருக்க வேண்டும். இலக்கணப் பாடங்களையும் தொடர்ந்து படித்தால் மட்டுமே, மாணவர்கள் மொழிப்புலமை பெறமுடியும். 

எஸ்.வி.டி. ராஜன் (தலைமை யாசிரியர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, எழுமலை ):
இம்முறை மாணவர்களை உற்சாகப்படுத்தும். ஆனால் ஆசிரியர்களுக்கு தான் வேலை கடினம். சில பள்ளிகளில் ஜன., துவக்கத்தில் இருந்து தான், மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வர். இனிமேல் அது இயலாது.

ஆசிரியர்கள் அந்தந்த பாடங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தி கற்றுத் தந்தால், மாணவர்கள் மதிப்பெண் பெறும் விகிதமும் அதிகரிக்கும். கணிதம், இலக்கணம் இதெல்லாம் காலத்துக்கும் தொடரும் விஷயம். எங்களைப் போன்ற கிராமப்புற பள்ளி மாணவர்களை கையாளுபவர்களுக்கு, இந்த முறை பெரிய வரம் என்பேன். எங்கள் மாணவர்களும் அந்தந்த பாடங்களை மட்டும் படித்து, அதிக மதிப்பெண் பெறுவர்.

எஸ்.அப் துல் ரஹ்மான் (எட்டாம் வகுப்பு மாணவர், மதுரைக் கல்லூரி பள்ளி, மதுரை)
நான் நன்றாக படிக்கும் மாணவனாக இருந்தாலும், அனைத்து பாடங்களையும் திரும்ப திரும்ப படித்தால் தான் நினைவில் நிற்கிறது. முப்பருவ முறையாக இருந்தால், குறைந்த பாடங்களில் அதிக கவனம் செலுத்தலாம். மதிப்பெண்களும் அதிகமாக பெறலாம். மூடை போல புத்தக சுமையை தூக்க வேண்டாம். மாணவர்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.

எஸ். ரத்தினபாண்டியன் (தாளாளர், எம்.எஸ்.பி., பள்ளி, திண்டுக்கல்)
நடைமுறை கல்வியில் மனப்பாடமே பிரதானமாக உள்ளது. மாணவர்கள் புத்தகங்களை தூக்கி சுமப்பதால், உடல் பாதிப்பு, மன அழுத்தம் ஏற்படுகிறது. புதியமுறையில், வகுப்பறையில் மாணவர்களுக்கு அதிகம் நேரம் கிடைக்கும். ஆசிரியர்களும் செய்முறை, சோதனை, நேரடி
ஆய்வுகள் மூலம் மாணவர்களை சோதிக்க முடியும்; தனித்திறமை வெளிப்படும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் மட்டுமே, திட்டத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடையும்.

கே.கலைவாணி (எட்டாம் வகுப்பு ஆசிரியை, குமரன் நடுநிலைப்பள்ளி, ராமநாதபுரம்)
தற்போதுள்ள முறையில் மாணவர்கள் அதிகமான பாடங்களை படிப்பதால் சோர்வடைகின்றனர். சாதாரணமாக வீட்டுப்பாடங்களை செய்வதில் திணறி, மறுநாள் பாடங்களை கவனிக்க முடியாத நிலையை நேரில் காணமுடிகிறது. பருவமுறையில் படிப்பதும், கற்றுத்தருவதும் எளிது. மாணவர்கள் புரிந்து கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெறமுடியும். தற்போதைய முறையில், சுமாரான மாணவர்களால் திருப்புதல் தேர்வை எதிர்கொள்ள முடியவில்லை. பருவமுறை தேர்வில் குறைந்த பாடங்களே இருப்பதால், கல்வியின் மீது ஆர்வத்தை அதிகரிக்க செய்யும்.

வி.சியாமளா(கல்வியாளர், ஆக்ஸ்போர்டு மேல்நிலைப் பள்ளி, சிவகங்கை)
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, முப்பருவ முறை சரியாக இருக்கும். ஏனென்றால் ஒரே ஆசிரியரே அனைத்து பாடங்களையும் நடத்திவிடுவர். ஆறாம் வகுப்பிற்கு மேல் இத்திட்டத்தை அமல்படுத்தினால், மாணவர்களின் நினைவுத்திறன் குறைந்துவிடும். தற்போது மொபைல் போன் பயன்பாட்டால், உறவினர்களின் போன் எண்களை கூட நினைவில் வைப்பதில்லை. இதேநிலை தான் கல்வியிலும் ஏற்படும். படித்து முடித்தவுடன், புத்தகங்களை தூக்கி எறிந்துவிடுவர். அந்தப்பாடம் அப்படியே மறந்துவிடும். அறிவியல் துறையை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு, இது பிரச்னையாகிவிடும். ஆசிரியர்களுக்கும் அனைத்து பாடங்களும் நினைவில் இருக்காது.

அறிவுத் திறனை வளர்க்கலாம்:(முதன்மை கல்வி அலுவலர், மதுரை): அரசு திட்டத்தில் இது சிறந்த அணுகுமுறை. புத்தக சுமை இல்லாததால், மாணவர்களின் மனஅழுத்தம் குறையும். இதனால் ஆசிரியர்களின் மனஅழுத்தமும் குறையும். வெறும் பாடங்களை மட்டும் படிக்காமல், பாடம் சார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. சிந்திக்கும் திறனை இது மேம்படுத்தும். கேரளா, கர்நாடகாவில் இம்முறை செயல்படுகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் பாரபட்ச மின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கிறோம். இதனால் முப்பருவ முறையால், இளம் மாணவர்களின் அறிவுத்திறன் குறையாது. கிரேடிங் முறை மூலம், மாணவர்களின் திறமையை வெளிப்படுத்த முடியும். முப்பருவ தேர்வு முறையில், வெற்றி பெறுவதற்கான மதிப்பெண் பற்றி இன்னும் முழுமையாக கூறவில்லை. அரசு அறிவித்த பின் தான், வெற்றிபெறுவதற்கான மதிப்பெண்ணை அதிகரிக்க வேண்டுமா என்பதை பற்றி கூறமுடியும்.

 நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்