தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

21.2.14

உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி இடைநிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் - பதவி உயர்வு கலந்தாய்வு

 இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பாசிரியர்கள் தரத்திலிருந்து பட்டதாரி ஆசிரியர் (அனைத்து பாடங்கள்) பதவி உயர்வு கலந்தாய்வு 22.02.2014 அன்று காலை 10.00 மணியளவில் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும். முன்னுரிமைப்பட்டியல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னுரிமைப் பெயர்ப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்கள் எவரேனும் பதவி உயர்வினை (நிரந்தரமாக / தற்காலிகமாக) துறப்பு செய்வதாக இருந்தால் கலந்தாய்வு அன்றே பதவி உயர்வு உரிமைவிடல் விருப்பக் கடிதத்தினை வழங்க வேண்டும்
.
பதவி உயர்வு ஆணை பெற்றவர்கள் அடுத்த வேலை நாளில் கண்டிப்பாக பணியில் சேரவேண்டும்.

பதவி உயர்வு வழங்கப்படும் எண்ணிக்கை:

தமிழ் - 179

ஆங்கிலம் -  82

கணிதம் -  87

அறிவியல் - 65

சமூக அறிவியல் - 85

மொத்தம் - 498

.

5.2.14

வேலூரில் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 02.02.2014, ஞாயிறு காலை 11.00 மணிக்கு வேலூர், ஆசிரியர் இல்லத்தில் மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமையில் நடைபெற்றது.

வேலூர் மாவட்டச் செயலாளர் பெ. இளங்கோ அனைவரையும் வரவேற்றார். மாநில துணைத் தலைவர்கள் நவநீத சுந்தர், க.மு. பாக்கியராஜ் மற்றும் மாநிலச் செயலாளர் அ. ஜெயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் வேலை அறிக்கையை சமர்பித்து உரையாற்றினார். மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து புதுக்கோட்டை செயற்குழுவிற்கு பிறகு உள்ள வரவு-செலவு அறிக்கையை வாசித்தார். இடைநிலை ஆசிரியர் குரல் இதழ் ஆசிரியரும் மாநில துணைப் பொதுச் செயலாளருமான ம. எட்வின் பிரகாஷ் இதழ் வரவு-செலவு பற்றி கூறினார்.

பொருள் மீது விவாதத்தில், கன்னியாகுமரி ஹெர்பர்ட் ராஜா சிங், திருநெல்வேலி சரவணன், மாநில இணைச் செயலாளர் விருதுநகர் அப்பாத்துரை, நீலகிரி சிவராமன், சென்னை கமலகண்ணன், வேலூர் பால்ராஜ், திருவண்ணாமலை வெங்கட்ராமன், திருச்சி தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று பேசினர். வேலூர் மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்:

1. பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டில் அரசு / நகராட்சி / மாநகராட்சி/அரசு உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பணியாற்றும் 25,000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2. மத்திய அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதிய விகிதத்தை Pay Band 1இல் இருந்து (5200 + 2800 - 20200) Pay Band 2க்கு மாற்றி (9300 + 4200 - 34800) அமைத்திட மாண்புமிகு தமிழக முதல்வரை வலியுறுத்தி தீhமானம் நிறைவேற்றப்பட்டது.

3. 2013-14ம் கல்வியாண்டில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள இடைநிலை ஆசிரியர் அனைவருக்கும் அவர்களது பணியிடத்தினை அரசாணை எண் 100, பள்ளிக்கல்வித்துறை, நாள் 27.06.2003ன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி அப்பள்ளியிலேயே பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுத்திட மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. தமிழக முதல்வரின் தேர்தல் வாக்குறுதியை அமல்படுத்தும் விதமாக தன் பங்கேற்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5. அரசாணை எண் 216ஐ அனைவருக்கும் பொருந்துமாறு உயர், மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் அனைவரும் பயன்பெறும் வகையில் பொது ஆணையாக வெளியிட மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

6. M.Com., B.Ed., M.A.(Eco), B.Ed., முடித்த இடைநிலை ஆசிரியர்களுக்கு நேரடி பதவி உயர்வாக முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட நடவடிக்கை எடுத்திட பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7. சிறுபான்மை இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

8. தேர்வு பணிகளில் இடைநிலை ஆசிரியர்களை பயன்படுத்திடுவதை தவிர்த்திடுமாறு மதிப்புமிகு தேர்வு துறை இயக்குனரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

9. உபரி ஆசிரியர் பணியிட மாறுதலில் முடிவுறு பணித் தொகுதியாகி வரும் உயர், மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு விலக்கு தந்திட பள்ளிக்கல்வி செயலரை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

10. வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களை ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் முடித்து, மாணவர் நலன் காத்திட அரசு நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

11. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25ம் தேதி மாநிலம் தழுவிய மாலை நேர ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.

12. கோரிக்கையை அரசு நிறைவேற்ற தவறும் பட்சத்தில் உட்படுத்துதல், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, அரசாணை 216ஐ அமல்படுத்திட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில அமைப்பின் சார்பில் மார்ச் தொடக்கத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டது.
.

ஆசிரியர் தகுதி தேர்வில்(TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை

ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இனி 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

இது குறித்து சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

ஆசிரியர் தகுதித் தேர்வு, அதாவது (Teachers Elegibility Test) தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளினை சில உறுப்பினர்கள் இங்கே தெரிவித்தனர்.

2009-ம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்தச் சட்டத்தின் அடிப்படையில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 1 முதல் 8-ம் ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வினை கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அறிவிக்கைகளின்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002-ன் படி ஆசிரியர் பயிற்சியில் இரண்டாண்டு பட்டயப்படிப்பும்; மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2002-ம் ஆண்டு ஒழுங்கு விதிமுறைகளுக்கு முன் இரண்டாண்டு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

அதேபோன்று, 6 முதல் 8 ஆம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002-ன் படி, ஒர் ஆண்டு பி.எட். பட்டமும், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

2002 ஆம் ஆண்டுக்கு முன் பி.எட். பட்டம் பெற்றிருந்தால், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

இதன் பின்னர், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் 1.4.2011 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில், அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்ப, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் மேல்நிலைத் தேர்வு மற்றும் பட்டப் படிப்பு தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

இதன்படி, 2002-ம் ஆண்டுக்கு பின் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மேல்நிலை தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணும்; அதற்கு முன்னர் தேர்வு பெற்றவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், தற்போது தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், அதாவது 35 சதவீதம் பெற்றவர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ளதை விட அதிகச் சலுகை தமிழ் நாட்டில் அளிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, 2002-ம் ஆண்டுக்கு பின் பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும், அதற்கு முன்னால் பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே பட்டம் வழங்குவதால், மத்திய அரசு அறிவித்துள்ளதை விட தமிழகத்தில் அதிகச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கிடப் பரிசீலிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி, இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்கும்போது தான் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுகிறது.

எனினும், இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

அதாவது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்

வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வைத்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 02-02-2014 ஞாயிறு அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் கயத்தாறு தலைமை தாங்கினார். மாநிலத் துணைத் தலைவர்கள் பக்கியராஜ், நவநீதசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட செயலாளர் இளங்கோ வரவேற்றார். பொது செயலாளர் இசக்கியப்பன், பொருளாளர் மதலைமுத்து, துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ், மாநில செயலாளர் ஜெயராணி, மாநில இணைச் செயலாளர் அப்பாத்துரை  உட்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.

இதில் தமிழ்நாட்டில் உள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு நிதிஉதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் 25 ஆயிரத்து 500 இடைநிலை ஆசிரியர்களை 01-06-2006க்கு முன் இருந்து பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்திட வேண்டும். தற்போது பின்பற்றப்படும் ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சங்க பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்