தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.2.13

25000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திடக் கோரி மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


அரசு, அரசு உதவிபெறும், நகராட்சி, மாநகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி, அப்பணியிடங்களில் பணியாற்றும் 25 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கயத்தாறு சிறப்புரையாற்றினார். திருநெல்வேலியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் இசக்கியப்பன் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநிலப் பொருளாளர் மதலைமுத்து புதுக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரை நிகழ்த்தினார்.மாநில அமைப்புச் செயலாளர் அருணகிரியார் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு விளக்க உரையாற்றினார். நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் கோரிக்கையை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார். தலைமையிடச் செயலாளர் வெங்கடேசன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5000க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
.

23.2.13

மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


நாள்: 26.02.2013 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி

இடம்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில்.

கோரிக்கை: அரசு /அரசு உதவிபெறும் / நகராட்சி / மாநகராட்சி உயர், மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக தரம் உயர்த்தி, அப்பணியிடங்களில் பணியாற்றும் 25000 இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும்.

தலைமை : அந்தந்த மாவட்டத் தலைவர்கள்

சிறப்புரை : மாநில பொறுப்பாளர்கள்

வாழ்த்துரை : தோழமை சங்க நிர்வாகிகள்

கோரிக்கை நியாயங்கள்

அரசு / அரசு உதவிபெறும / நகராட்சி / மாநகராட்சி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 6,7,8 வகுப்புகளில் பாடம் கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு, பணி ஓய்வு பெறும் பொழுது அரசாணை(நிலை) எண். 100 பள்ளிக்கல்வி(பட்ஜெட்)த் துறை நாள்: 27.06.2003-இன் படி அந்த இடங்களில் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் இனி உயர், மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெறாத நிலையில், இடைநிலை ஆசிரியர் பணித்தொகுதி முழுவதும் முடிவுறு பணித்தொகுதியாக மாறியுள்ளது.

தற்போது 6,7,8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் பாடம் கற்பிக்கும் சூழலில் ஒரே பணி - இரு வேறு ஊதியம் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இருபது, முப்பது ஆண்டுகளாக எந்தவித பதவியுயர்வு வாய்ப்புகளும் இன்றி தவித்துவரும் இடைநிலை ஆசிரியர்கள் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை தாங்கள் பணிபுரியும் பணியிடத்திலேயே பட்டதாரி ஆசிரியராக நிலை உயர்த்தி பணி மாற்றம் செய்திட வேண்டும் என்ற நமது உயர் கோரிக்கைக்காக கடந்த ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
  • ‘சம வேலைக்கு சம ஊதியம்’ கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் முரண்பாடுகளை களைந்து முறையான ஊதியம் வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அரசு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்குவதாக வழக்கை திசை திருப்பிவிட்ட நிலையில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
  • இடைநிலை ஆசிரியர்களை பணி நியமனம் செய்யக்கூடாது எனத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 
  • 2007 பிப்ரவரியில் வள்ளுவர் கோட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை ஒன்று திரட்டி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 
  • 2007 நவம்பரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் அப்போதைய கல்வி அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தார். 
  • 2008 டிசம்பரில் 13-இல் கோட்டை நோக்கி பேரணி எனத் திட்டமிடப்பட்டு பின்னர் ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்ட நிலையில் காவல்துறையே அஞ்சும் வகையில் ஆர்ப்பாட்டமா? மறியலா? என வியக்கும் வண்ணம் 5000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 
  • கோரிக்கை விளக்க கருத்தரங்குகள், கருப்பு பேட்ஜ் அணிதல், ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், என பல்வேறு போராட்டங்கள் மாவட்ட, மண்டல அளவில் நடத்தப்பட்டுள்ளன. 
  • பல்வேறு முறை பள்ளிக்கல்வி இயக்குநர், இணை இயக்குநர், கல்விச் செயலர், இணைச் செயலர், கல்வி அமைச்சர், அனைத்து கட்சிகளின் தலைவர்கள் எனச் சந்தித்து நமது கோரிக்கையை எடுத்துக் கூறியுள்ளோம்.
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நமது மாநில பொதுக்குழுவின் முடிவின்படி மாநிலம் தழுவிய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 26.02.2013 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறுகிறது.

அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொண்டு நமது நியாயமான கோரிக்கையை வென்றெடுப்போம்.

இடைநிலை ஆசிரியர் பேரினமே! அணி திரள்வீர்!! 

போராடுவோம்!!! கோரிக்கையை வென்றெடுப்போம்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், மாநில அமைப்பு.
.

ஊதிய முரண்பாடுகள் களைதல் மூவர் குழு அறிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது

PAY Three Man Com by

17.2.13

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) - 01.12.2011 முதல் 8.6% வட்டி வழங்க ஆணை

ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS)- ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 30.11.2011 வரை 8%, 01.12.2011 முதல் 8.6 சதவீதம் வட்டி விகிதம் வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

அரசாணை எண்: 38 நாள்: 11-02-2013
.

பிப். 20, 21 பொது வேலை நிறுத்தம்: இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்க முடிவு

தமிழ்நாட்டில் பிப். 20, 21 பொது வேலை நிறுத்தத்தில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற் பார்கள் என்று இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஆர்.விஜய குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் தமிழ்நாட்டில் அங்கம் வகிக்கும் சங்கங்களின் ஆசிரியர் களைப் பங்கேற்கச் செய்வது என்றும், வேலை நிறுத்த நாட்களில் அரசு ஊழியர் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்தும் இயக்க நடவடிக்கைகளில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது. மே மாத இறுதியில் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாட்டில் உள்ள சங் கங்களின் விரிவான கூட்டத்தைக் கூட்டி மாவட்ட அளவில் கூட்டமைப்பை பலப் படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் டி. கண்ணன், தமிழ்நாடு உயர்நிலை மேனிலைப் பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் அ.மாயவன், எஸ்.பக்தவச்சலம், தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கயத்தாறு, இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் கே.பூபாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.

மதுரை நிர்வாகிகள் முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மதுரை மாவட்ட கிளை நிர்வாகிகள் 07-02-2013 வியாழக்கிழமை முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. அமுதவல்லி அவர் களைச் சந்தித்தனர். மரியாதை நிமித்தமான இந்தச் சந்திப்பின் போது நமது முழக்கம் மாத இதழ் முதன்மைக் கல்வி அலுவல ருக்கு வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டச் செயலாளர் பால முருகன் தஇஆச புதிய நிர்வாகிகளை முதன்மைக் கல்வி அலுவலருக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட் டப் பொருளாளர் மணிமுருகன், துணைத் தலைவர் அமல்ராஜ், இணைச் செயலாளர் கள் நாகராஜன், லிங்கம் காமாட்சிநாதன், சங்க உறுப்பினர்கள் கார்த்திக், சண்முக நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

சந்திப்பின் போது நிர்வாகிகள் முன் வைத்த கோரிக்கைகளை கனிவோடு பரி சீலிப்பதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
.

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு கூட்டம்


தஇஆச புதுக்கோட்டை மாவட்டக் கிளை யின் செயற்குழு பிப். 07 அன்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஜெய ராமன் தலைமை வகித்தார். மாவட்ட செய லாளர் செந்தில்குமார் வேலை அறிக்கை மற்றும் பிப். 26 அன்று நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தைப் பற்றி உரையாற்றினார்.

மாநிலப் பொருளாளர் மதலைமுத்து மாநிலப் பொதுக்குழு முடிவுகள் பற்றி விளக்கினார். இக்கூட்டத்தில் சுதா, செல் வம், ஆறுமுகம், கோபால கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி பிப். 26 அன்று நடைபெற உள்ள மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் பெரும் பாலான ஆசிரியர்களை கலந்து கொள்ளச் செய்வது, பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தப் போராட்டத்தில் அனை வரும் கலந்து கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
.

அரசு உதவி பெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் உபரி என அறிவித்துள்ளதை ரத்து செய்ய கோரிக்கை


கன்னியாகுமரி மாவட்டம் அரசு உதவி பெறும் உயர், மேல் நிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பணியிட நிர்ணய ஆணை களில் இடைநிலை ஆசிரியர்கள் உபரி என அறிவிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வலி யுறுத்தி முதன்மை கல்வி அலுவலரை சந் தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தஇஆச கன்னியாகுமரி மாவட்டக் கிளை சார்பில் முதன்மை கல்வி அலுவலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

அரசு உதவி பெறும் உயர், மேல் நிலைப் பள்ளிகளுக்கு 2012 & 13ஆம் கல்வியாண் டுக்கான பணியிட நிர்ணய ஆணை வழங் கப்பட்டுள்ளது. அதில் அரசு விதிகளுக்கு மாறாக இடைநிலை ஆசிரியர் பணியிடங் கள் உபரி என அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் - 2009 மற்றும் அனைவருக்கும் கல்வி இயக்க விதிகளை பின்பற்றாமல் பணி நிர்ணய ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

6, 7, 8 வகுப்பு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் களின் தேவையை கருத்தில் கொள்ளாமல் உபரி என அறிவிக்கப்பட்டிருப்பது இடை நிலை ஆசிரியர் பணித் தொகுதிக்கு பெருத்த இழப்பாக உள்ளது.

6 முதல் 10 வகுப்புகள் வரை ஒரே அலகா கக் கொண்டு பணியிட நிர்ணயம் செய்யப் படுகிறது.அவ்வாறு பணியிட நிர்ணயம் செய்யும்போது பணிமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்காமையால் இடைநிலை ஆசிரியர்கள் உபரி என வரையறுக்கப்பட்டுள்ளனர்.

தற்போது உயர் நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நிய மனம் நடைபெறாத நிலையில் முடிவுறு பணித் தொகுதியாக மாறிவிட்ட இடை நிலை ஆசிரியர்களை உபரி என அறிவித் திருப்பதை ரத்து செய்திட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ், மாவட்ட தலைவர் ஹெர்பர்ட் ராஜாசிங், துணைத் தலைவர் டெல்லஸ், தலைமையிடச் செய லாளர் பால் செபாஸ்டின், நாகர்கோவில் கல்வி மாவட்டச் செயலாளர் சசி, பொருளா ளர் ஞான செல்வ திரவியம், தக்கலை கல்வி மாவட்ட இணைச் செயலாளர் ராஜகுமார், டோமினிக் சாவியோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக மாநில அமைப்பு சார் பில் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்(இடைநிலைக் கல்வி) திருமதி. இராஜ இரா ஜேஸ்வரி அவர்களை சந்தித்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இணை இயக்குநர் உபரி மாறுதல் நடைபெறாது எனக் கூறி யுள்ளார். எனவே உதவிபெறும் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சத் தேவை யில்லை. தொடர்ந்து மாநில அமைப்பு இதனை கண்காணித்து வருகிறது.
.

11.2.13

அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி

தமிழக அரசின் அனைத்து அலுவலகங்கள், அரசு நிறுவன அலுவலகங்கள், பள்ளிகளில் இணையதள வசதி செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில், தொலைத் தொடர்பு, பிராட்பேண்ட் இணைப்பை பெற, எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. 50 கோடி ரூபாய் மதிப்பிலான இப்பணிகள், மூன்று மாதங்களில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசின் நிர்வாகப் பணிகள் அனைத்தும், மின்னணு முறையில் மாற்றப்பட்டு வருகிறது. இதனால், அரசின் தகவல் பரிமாற்றங்களைக்கூட, மின்னணு முறையில் மேற்கொள்ள நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தமிழக ஏரியா நெட்வொர்க், தமிழக டேட்டா மையம், மின்னணு மாவட்டத் திட்டம், மாநிலசேவைகளை வழங்கும் வழித் தடம் ஆகிய திட்டங்களை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டங்களை, மாநில அரசு அலுவலர்கள் பயன்படுத்த வேண்டும் என்றால், அலுவலகங்களை இணையதளத்தில் இணைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தின் அன்றாடப் பணிகளை, மின்னணு முறைக்கு மாற்ற வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. பல சேவைகளை, ஆன்-லைனில் செய்ய வேண்டி இருப்பதால், இணையதள இணைப்புகள் அவசியமாகின்றன. எனவே, தமிழக அரசின் அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவற்றோடு, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், இணையதள வசதி ஏற்படுத்தப்படுகிறது. இணையதள வசதியோடு, ஒவ்வொரு துறை அலுவலகங்களும், வங்கிகளைப் போல, கணினி நெட்வொர்க்கில் இணைக்கப்படுகின்றன.

இதற்காக, அரசு மற்றும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கும், ஒப்பந்தப் புள்ளியை, எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. ஒவ்வொரு அலுவலகத்துக்கும், தரை வழி தொலைபேசி இணைப்புடன், பிராட்பேண்ட் இணைப்புகள் வழங்குதல், தரை வழி தொலைபேசிக்கு, இலவச உள் அழைப்பு வசதி மட்டும் இருக்கும் வகையில், இணைப்புகள் அளிக்கப்படுகின்றன.

இதுகுறித்து, தமிழக அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அனைத்து அலுவலகங்களும், இணையதள வசதி பெறும் போது, தகவல் பரிமாற்றம் எளிதாவதோடு, அரசின் அனைத்து செயல் மற்றும் தகவல்களை, இணைய தளம் மூலம், உடனுக்குடன் அறிய முடியும். நாட்டின் கடை கோடியில் இருக்கும் அலுவலகங்கள் கூட, மக்களுக்கு உடனுக்குடன் சேவையை அளிக்கமுடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தப் புள்ளிகள் முடிவு செய்யப்பட்டு, மூன்று மாதங்களில்,அனைத்து அலுவலகங்களிலும், இணையதள வசதி அளிக்கப்படும் என, எல்காட் வட்டாரங்கள் கூறுகின்றன.

நன்றி:

 

5.2.13

பட்டதாரி ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி பிப்ரவரி 26ல் மாவட்டத் தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி பிப்ரவரி 26ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் மதுரை அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் 20-01-2013 அன்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் சு. கயத்தாறு தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் அ. அருணகிரியார், துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் தலைமைச் நிலையச் செயலாளர் ச. வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்டச் செயலாளர் பால முருகன் வரவேற்றார். சென்ற கூட்ட முடிவுகளை அறிக்கையாக பொதுச் செயலாளர் க. இசக்கியப்பன் விவாதத்திற்கு வைத்தார். திருத்தம் இன்றி அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. அமைப்புச் செயலாளர் இணை பொறுப்பாளர் தேர்வை நடத்தினார். நாமக்கல் பெரியசாமி, சிவகங்கை சங்கர் மாநிலதுணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து வரவு செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • அரசு / அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் 25,000 இடைநிலை ஆசிரியர்களை அவர்கள் பணியிடங்களை அரசாணை எண் 100, பள்ளிக்கல்வித்துறை, நாள்: 27.06.2003ன் அடிப்படையில் தரம் உயர்த்தி பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட தமிழக அரசை வலியுறுத்துவது என தீர்மானிக்ப்பட்டது.
  • இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி வரும் பிப்ரவரி 26ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
  • வரும் பிப்ரவரி 20, 21 தேதிகளில் விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வு, மானியங்களை வங்கி கணக்கில் செலுத்துவது, தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் இவற்றை கண்டித்து அகில இந்திய அளவில் நடைபெறும் வேலைநிலைறுத்த போராட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் முழுமையாக பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.
  • தமிழ் உட்பட அனைத்து பாடங்களுக்குமான பதவி உயர்வு 31.12.2012 வரை கோரப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே காலியாக உள்ள 40,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் விகிதாச்சார அடிப்படையில் (தமிழ் 66.66%, பிறபாடங்கள் 50%) பதவி உயர்வு வழங்கிட பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களை கேட்டு கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறும் இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக தரம் உயர்த்தி அதே பள்ளியிலேயே அந்த பணியிடத்திலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட பள்ளிக்கல்வி இயக்குனரை, இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்களை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்ப்பட்டது.
  • 1987க்கு முன்பு ஆசிரியர் பட்டயப் படிப்பின் கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு, எனவே அவ்வாறு பத்தாம் வகுப்பு படித்து பின்பு மேல்நிலைக்கல்வியுடன் இணைந்த ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை பதவி உயர்வில் சேர்த்து கொண்டது போல், SSLC முடித்து D.T.Ed. எனப்படும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்று பின்பு பட்டம் பெற்றவர்களின் பட்டியலை பதவி உயர்விற்கு அனுமதிக்க சென்னை உயர்நீதி மன்றம் செப்டம்பரில் இட்ட ஆணையை அமல்படுத்திட பள்ளிக்கல்வி செயலரை கேட்டுக் கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
  • 2012-13 உறுப்பினர் சந்தா சேர்ப்பை முழுவீச்சில் மேற்கொண்டு மார்ச் 31க்குள் முடித்திட தீர்மானிக்கப்பட்டது.
  • "நமது முழக்கம்" இதழ் சந்தா ரூ.100 விதம் பெற்று முதலில் மாவட்டத்திற்கு 100 பேர் வீதம் மாநில மையத்திற்கு ஒப்படைப்பு செய்திட தீர்மானிக்கப்பட்டது.
  • இடைநிலை ஆசிரியர் ஊதிய விகிதத்தை PB1லிருந்து PB2க்கு மாற்றி 9,300 – 4,200 என மாற்றிடவும், தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கு ஊதிய விகிதம் தொடர்ந்திடவும் மூன்று நபர்குழு அறிக்கையை முழுமையாக வெளியிடவும் தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • அனைத்து மாவட்டங்களிலும் கிளையை உறுதிபடுத்திட மண்டல பொறுப்பாளர்களும் மாநில பொறுப்பாளர்களும் தீவிர முயற்சி எடுத்து இறுதிபடுத்திட தீர்மானிக்கப்பட்டது.
மாநிலப் பொருளாளர் ஆ. மதலைமுத்து நன்றி கூறினார்.

கூட்டத்தில் 65 பேர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் ஜெயராணி, மாநிலத் தணிக்கையாளர் பாபு, மாநில துணைத்தலைவர் பாக்கியராஜ், நவநீதந்தர், இணைச் செயலாளர்கள் அப்பாத்துரை, ஸ்டீபன், கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங், நெல்லை மாவட்டத் தலைவர் ராஜமார்த்தாண்டம், விருதுநகர் மாவட்டச் செயலாளர் முருகேசன், மதுரை மாவட்டச் செயலாளர் பாலமுருகன், நாமக்கல் மாவட்டத் தலைவர் பெரியசாமி, திருவண்ணாமலை கல்வி மாவட்டத் தலைவர், வேலூர் மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் விவாதத்தில் பங்கேற்றனர்.
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்