தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.8.18

சென்னையில் நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப்.1இல் நடைபெறும்

சென்னையில் சனிக்கிழமை (ஆக.11) நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம், செப்.1ஆம் நாள் நடைபெறும்.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் அ. சங்கர்  வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

திருச்சியில் கடந்த ஆக.5 இல் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை (ஆக.11) சென்னை சேப்பாக்கத்தில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து ஆக.11 இல் நடைபெற இருந்த பெருந்திரள் ஆர்ப்பாட்டம்  ரத்து செய்யப்படுகிறது. மேலும், அதற்கு பதிலாக வரும் செப்டம்பர் 1ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்  என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

8.8.18

முத்தமிழ் அறிஞருக்கு வீர வணக்கம்



பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்.
 
தமிழ்நாட்டிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும், தமிழுக்கும் தன்னிகரற்ற தொண்டாற்றிய மாபெரும் மக்கள் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியையும், பெருந்துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய காந்தக் குரலால் இலக்கியத்திறனால் இணையற்ற பேச்சாற்றலால், நிகரற்ற நிர்வாகத்திறனால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது அவர் கொண்டு வந்த திட்டங்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தரப்பு மக்களையும் ஏதாவது ஒரு வகையில் சென்றடைந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. 

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

முதன்முதலாக தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மாநில
அரசின் 5வது ஊதியக்குழு மூலமாக 11.06.1988 முதல் மத்திய அரசுக்கு
இணையான ஊதியத்தை வழங்கி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

வாக்குறுதி அளித்த படி தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு 2006-இல் ஆட்சிக்கு வந்தவுடன் காலமுறை ஊதியம் வழங்க ஆணை பிறப்பித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பக முன்னுரிமையின் படி ஆசிரியர் பணி நியமனங்கள் பெற வழியேற்படுத்தி ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆசிரியர்களாக நியமனம் பெற வழி வகை செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

பொதுவாழ்க்கையில் 75 ஆண்டுகளுக்கும் மேலாக போர்க்குணத்துடன் செயலாற்றியதுடன் போராட்டக்களத்தை மதித்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.

அரசியல் தொண்டு, சமூகத்தொண்டுடன் அருந்தமிழ்த்தொண்டையும் ஆற்றிய தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் கலைஞர்.

அவர் இம்மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் எழுதிய சாகாவரம்
பெற்ற இலக்கியங்களான நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பியப் பூங்கா, குறளோவியம், சங்கத் தமிழ்க் கவிதை மழை போன்றவற்றின் மூலம் அவர் இங்கு என்றும் வாழ்ந்து கொண்டேயிருப்பார்.

உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களை உலுக்கிவிட்ட டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவுக்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அ. சங்கர்,
பொதுச் செயலாளர்.

5.8.18

ஆகஸ்ட் 11, சென்னை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பெருத்திரளாக பங்கேற்கச் செய்ய செயற்குழு முடிவு

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் இன்று (05/08/ 2018) காலை 10 மணி அளவில் திருச்சி செய்யது முர்துஸா மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது.

மாநிலத் தலைவர் ஆ. மதலை முத்து தலைமை தாங்கினார். திருச்சி மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வரவேற்புரை ஆற்றினார். வரவு செலவு அறிக்கையை மாநில பொருளாளர் கு. தியாகராஜன் சமர்ப்பித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் அ. சங்கர் வேலை அறிக்கையினை சமர்ப்பித்தார். செந்தில்குமார் நன்றி கூறினார்.




கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழக முதல்வர் அவர்கள் தமது கண்ணியமற்ற பேச்சால் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை தரக்குறைவாக இழிவாக பேசியதை வன்மையாக
இச்செயற்குழு கண்டிக்கிறது.

2. அரசு, அரசு உதவி பெறும், நகராட்சி, மாநகராட்சி, உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு எட்டாவது ஊதிய குழுவில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டும், இருபத்தோரு மாத ஊதிய மாற்ற நிலுவை தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், மறுக்கப்பட்ட பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த
வேண்டும், அரசாணை 56 அரசாணை 100 அரசால் 101 மூலம் அரசுப் பள்ளிகளை மூடுவது ரத்து செய்ய வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 11இல் சென்னை, சேப்பாக்கத்தில் நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களை பெருத்திரளாக பங்கேற்கச் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடியின் கண்ணியமற்ற பேச்சைக் கண்டித்து 09-08-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

தேங்காய் இனித்ததோ, மாங்காய் புளித்ததோ என்ற முதல்வர் எடப்பாடியின் கண்ணியமற்ற பேச்சும் செயல்பாடும்!

கேட்காத கடனும்...   தீர்க்காத பழியும்...   வீண், வீண், வீணே...!

மாற்றாந்தாய் மனப்பான்மை என்றொரு சொற்றொடர் மக்களுக்கு மட்டுமல்ல மன்னனுக்கும் அவன் ஆளும் மாநிலத்திற்கும் பொருந்தும். இதை நாம் அறிவின் வழி அல்ல, அனுபவத்தின் வழியாக உணரத் தலைப்பட்டிருக்கிறோம். என்னதான் கெட்டவனாக இருந்தாலும் கண்டிப்பானவனாக இருந்தாலும் பெற்றதாய் ஒருபோதும் தன் பிள்ளைகளுக்கு பச்சைத்துரோகம் எண்ணமாட்டாள். பெற்ற தாயை இழந்த மக்கட்கு வேறொரு தாய் வாய்த்தால் அவள் எப்படி எல்லாம் இருப்பாள் என்பதற்கு சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வரின் ஏழு நிமிடப் பேச்சு எடுத்துக்காட்டாகும். தமிழக மக்களின் முழு ஆதரவோடு முதல்வர் ஆகியிருந்தால் அவருக்கு உண்மையான தாய்மனம் இருந்திருக்கும். காமராஜர், அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் அலங்கரித்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சர்வாதிகாரதத் தொணியில் முதலமைச்சர் பேசியிருக்கிறார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் இம்மாநிலத்தை ஆண்ட காலங்களில் கூட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் உரிமைகளை பறிக்கப் பார்த்தாரே தவிர அவர்களைப் பழித்துப் பேசியதில்லை. தர மறுத்தாரே தவிர தரங்கெட்டுப் பேசியதில்லை. ஒருசில போராட்டங்களுக்குப் பின்னர் ஜெயலலிதா தாய் மனதோடு இறங்கி வந்து உரிமைகளை சிறிதேனும் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். 110 விதியின் கீழ் உறுதிமொழிகள் அளித்திருக்கிறார். ஆனால் இந்திய வரலாற்றில் முதன்முறையாக... ஒரு முதலமைச்சர் தன்கீழ் பணிபுரியும் ஊழியர்களை சகட்டு மேனிக்கு வார்த்தைகளால் தரம்தாழ்ந்து பேசியிருப்பது தமிழக வரலாற்றிலேயே இதுவே முதல்முறை.

இந்தியாவிலேயே போராட்டங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும், அதற்குக் காரணம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அரசியல் எதிர்கட்சிகள் என்று தன்னுடைய திறமையின்மையை ரொம்பப் பெருமையாக பறைசாற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி. ஜெயலலிதா ஆண்ட காலங்களில் போராட்டங்களே நடக்கவில்லையா? அதை அவர் எப்படி கையாண்டார்? முதல்வர் எப்படி கையாள்கிறார்? ஜெயலலிதா போராட்டத்தின் உக்கிரத்தைப் பார்த்து ஏதாவது அறிவிப்பு அல்லது அரசாணை வெளியிட்டு அனுசரித்துப் போனார். ஆனால் முதல்வர் பழனிச்சாமியோ நீ எத்தனை போராட்டம் வேண்டுமாமனாலும் நடத்திக்கோ நான் ஒன்றும் கேக்கமாட்டேன் என்றால், தாங்கள் தாங்கியிருக்கும் மன்னன் என்ற மணிமகுடம் வெகுவிரைவில் மண்ணில் உருளப் போகிறது என்று பொருள்.

போராடுபவர்கள் எல்லாம் அரசியல் கட்சியினரும், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மட்டுமே என்று சொல்லும் எடப்பாடிக்கு ஒரு கேள்வி. மக்கள் யாருமே உங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லையா? ஜல்லிக்கட்டு தொடங்கி ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, காவிரி போராட்டம், விவசாயிகள் போராட்டம், ஜாக்டோ-ஜியோ போராட்டம், மருத்துவ மாணவர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் திமுக, பாமக, மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்தியவையா எட்டுவழி நாயகரே?

தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ரூ.82000 ரூபாய் சம்பளம் வாங்குவதாகவும், பொறியியல் படித்த நம்ம பையன் ரூ.50,000/-ஐ பத்து வருஷம் ஆனாலும் தாண்டறதே கஷ்டம் என்றும் பேசிய முதல்வர் எடப்பாடி, நல்ல வேளை எல்லா பசங்களையும் வாத்தியார் வேலைக்கு போகச் சொல்லாமல் விட்டுவிட்டது ஆச்சர்யம்தான். ஆசிரியரை விட அதிக படிப்பு படித்த பொறியாளர்கள் அவர்களை விட குறைந்த ஊதியம் பெறுவதாக கூறிய முதல்வர், எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.1,10,000/-ஐ தொகுதி பக்கமே வராமல் ஐந்து ஆண்டுகளுக்கு சுளையா வாங்கறதையும், பல சலுகைகளை இலவசமாக அணுபவிப்பதையும் அடுத்தமுறை எம்எல்ஏ ஆனாலும் ஆகாவிட்டாலும் பென்ஷன் வாங்கப் போறதையும் சொல்லாமல் விட்டுவிட்டது ஆச்சர்யமும் இல்லை; அதிசயமும் இல்லை, ஆச்சரியமும் சொல்லும் முதல்வர் எடப்பாடி, அவ்வளவு கொடுத்தும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அதுவும் போதலைன்னு போராட்டம் நடத்துறாங்கன்னு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். ஐயா இல்லை, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ரூ.14,719/- கோடியை சம்பள உயர்வாக வாரி வழங்கியதாக முதல்வர் எடப்பாடி அவர்களே, நீங்க கொடுத்ததாக சொல்லும் ரூ.14,719 கோடி நீங்க கொடுத்தது இல்லை. அது நாங்க போராடி உங்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து வாங்கியது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் அன்று கைபிடித்து அ, ஆ சொல்லிக் கொடுக்கவில்லை என்றால், இன்று கோட்டையில் முதல்வரோ அவர்களுடன் உள்ள அமைச்சர்களோ கையெழுத்துக்கூட போடி முடியாது என்பதனை எடப்பாடி உணர வேண்டும். ஜெர்மனியில் நீதிபதிகளைவிட ஆசிரியர்களுக்கே ஊதியம் அதிகம் என்பதனையும் முதல்வர் உணர வேண்டும். 21 மாத கால போராட்டத்துக்குப் பிறகு நீதிமன்ற உத்தரவின் பேரில் உங்களை சம்பள உயர்வு கொடுக்க வைத்தது எங்கள் போராட்டமும், அதன் காரணமாக எழுந்த நீதிமன்றத் தலையீடும் தான். அதிலும் நீங்கள் ஆதாயம் தேடும் வகையில் ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி கொடுத்ததாகத் சொல்வது உலகமகா ஆணவமாகும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகையை வழங்க மறுத்தது கயமைத்தனம். அதேசமயம் எந்தப் போராட்டமும் நடத்தாத, இருக்கற பணத்தையே என்ன பண்றதுன்னு தெரியாம அல்லாடிக் கொண்டிருக்கும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை திருப்திப்படுத்த அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கேட்காமலேயே 110 சதவீத ஊதிய உயர்வு வழங்கியது சுத்த நயவஞ்சகத்தனம்.

"என்னென்னவோ போராட்டம் நடத்தி இந்த ஆட்சியை கலைக்கப் பார்த்தார்கள். களங்கம் கற்பிக்கப் பார்த்தார்கள். அத்தனையும் சரியான முறையில் கையாண்டு சரியான நிவாரணம் வழங்கி திருப்திப்படுத்தியிருக்கோம்" என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. சரியான முறையில் எதைக் கையாண்டார்? யாருக்கு என்ன நிவாரணம் வழங்கி திருப்திப்படுத்தினார் இவர்? அவருடைய பேச்சிலேயே அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார், எதன் காரணமாக இந்த ஆட்சி நீண்டு கொண்டிருக்கிறது என்பது பாரறிந்த ரகசியம். கோமா நிலையில் இருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு, மேலே இருந்து ஒருவர் ஆக்சிஜன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஆட்சி ஒரு வருடத்திற்கும் மேலாக வாசலாடிக்கொண்டிருக்கிறது. இதைத்தான் உலகமகாசாதனையாக எடப்பாடியும், அவரது சகாக்களும் கொண்டாடுகிறார்கள்.

சென்ற முறை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அமைச்சர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு சம்பளமாக அரசின் வருவாயிலிருந்து 70 சதவீதம் வரை செலவழிக்கப்படுவதாக பத்திரிகைகளில் காசு கொடுத்து விளம்பரம் கொடுத்திருந்தார். ஆனால் இப்போதோ எடப்பாடி அதை 61 சதவீதமாக குறைத்து கூறியுள்ளார். இந்த அமைச்சர்களின் பேச்சு 'இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தைத்தான் ஞாபகப்படுத்துகிறது. இவர்கள் எல்லாம் எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் கணக்குப் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக்கியே தீருவோம் என்று சூளுரைத்துப் பேசுகிறார்கள். நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு அதன்பேர் அதிமுக அமைச்சரவை என்றாகி வருவதை தமிழகம் தினந்தோறும் கண்டு வருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தைரியமிருக்குமேயானால், போராட்டம் நடத்துகிறவர்கள் எல்லாம் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் தான் பொதுமக்கள் இல்லை என்று சவால் விடுப்பாரேயானால், இந்த ஆட்சியில் மக்கள் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு அவர்கள் சுபிட்சமாக இருக்கிறார்கள் என்று அவர் உறுதி கூறுவாரேயானால், இந்த அமைச்சரவையைக் தேர்தலைக்கூட நடத்த திறமையற்றவர்களாக இருக்கிறீர்கள். எட்டுவழிச் சாலை போட காட்டும் கலைத்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வென்று காட்ட வேண்டும். குறைந்தபட்சம் உள்ளாட்சித் ஆர்வத்தை மற்ற விஷயங்களில் காட்டாததிலிருந்து நீங்கள் செய்யும் ஆட்சி என்னவென்று மக்களுக்கு கொள்ளை என ஏராளமான சுழல் மயம் கொண்டவர்கள், நேர்மையாக மக்கள் பணி செய்து நன்றாகவே புரிந்துள்ளது, மணல் கொள்ளை, அரிசி கொள்ளை, காண்டிராக்ட் கொள்ளை, அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு, தலைமைச் செயலாளர் வீட்டில் ரெய்டு என்று மக்கள் பணத்தை கோடிக்கணக்கில் நிர்வாகத்தை திறம்பட நடத்த ஏதுவாக இருக்கும் அரசு ஊழியர்கள் மீதும், பள்ளிக்கூட அறையில் நாளைய சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக உருவாக்க உழைக்கும் ஆசிரியர்கள் மீதும் சேற்றை வாரி இறைத்திருப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டதற்கு ஒப்பாகும்,

எடப்பாடி பழனிச்சாமி எப்படிப்பட்ட ஆசாமி என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவர் வகிக்கும் முதல்வர் என்ற உன்னதமான பதவியின் மாண்பை பாதுகாக்க, தான் பேசிய பேச்சுக்கு அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மன்னிபபு கேட்டாலும் கேட்காவிட்டாலும் அரசு ஊழியர்களும்- ஆசிரியர்களும் இனி அவரை மன்னிப்பதாக இல்லை. இருக்கும் நாற்காலியிலிருந்து அவரை அகற்றும் வரை பகை முடிக்கும் பணி முடிக்க அரசு ஊழியர்-ஆசிரியர் படை திரளும் மக்கள் புடைசூழ!

கேட்காத கடனும்... தீர்க்காத பழியும்... வீண், வீண், வீணே...!

முதல்வரின் கண்ணியமற்றப் பேச்சினை கண்டித்து 9-8-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.

- ஜாக்டோ ஜியோ.

4.8.18

27-11-2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் 4-8-2018 அன்று திருவல்லிக்கேணியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் நடைபெற்றது,

கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சுப்பிரமணியன், திரு. மோசஸ் மற்றும் திரு. தாமோதரன் ஆகியோர் தலைமையேற்றனர்,

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் குறித்து முதல்வரின் கண்ணியமற்ற பேச்சிற்குக் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது, மேலும் முதல்வரின் கண்ணியமற்றப் பேச்சினைக் கண்டித்து வரும் 9-8-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கலந்துகொள்ளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது,

திருவண்ணமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. வெ. ஜெயக்குமார், மீள் ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்களை தரக்குறைவாகவும் ஒருமையில் பேசுவதைக் கண்டித்தும் My Child My Care என்ற பெயரில் ஆசிரியர்களிடமிருந்து இரசீது எதுவும் வழங்காமல் இலட்சக்கணக்கில் பணம் வசூல் செய்வதனையும் 2016 - 17ஆம் கல்வி ஆண்டில் மாணவர்களின் பருவத் தேர்வு விடைத்தாள்களை பல இலட்சம் ரூபாய்க்கு முறைகேடாக விற்றதனைக் கண்டித்தும் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட CEO portal app என்ற செயலியினைக் கொண்டு ஆசிரியர்களின் சுய விவரங்களைத் திருட வழிவகை செய்யும் பாதுகாப்பற்றச் செயலியை ஆசிரியர்கள் பின்பற்றத் திணிக்கும் நடவடிக்கைக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினை தவறாகப் பயன்படுத்தும் ஜெயக்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கையினை விரைவில் அரசு மேற்கொள்ளாவிட்டால், அவரைக் கண்டித்தும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் பிற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்களைக் கண்டிக்கிற வகையில் வரும் 16-8-2018 அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவரால் பழிவாங்கும் நோக்கத்துடன் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் உடனடியாக அவரவர் பள்ளிகளிலேயே பணியமர்த்த வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி பின்வரும் போராட்டங்களை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
 
04-9-2018 அன்று ஒருநாள் ஒட்டு மொத்த தற்செயல் போராட்டத்தினை நடத்துவது.
 

13-10-2018 அன்று சேலத்தில் வேலைநிறுத்தப் போராட்ட ஆயத்த மாநாட்டினை நடத்திடுவது.
 

27-11-2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை மேற்கொள்வது.
 

19-10-2018 முதல் 23-10-2018 வரை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான பிரச்சாரத்தினை மேற்கொள்வது.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கன்னியாகுமரியில் தேசியஅளவிலான மகளிர் மாநாடு - STFI முடிவு

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியத் தலைமை நிர்வாகிகள் கூட்டமும், தேசியச் செயற்குழு கூட்டமும் ஜூலை 28, 29 ஆகிய நாள்களில் புதுதில்லியில் நடைபெற்றது.

தேசிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தேசியத் தலைவர் அபித்முகர்ஜி தலைமை தாங்கினார். தேசிய பொதுச் செயலாளர் சந்திர நவ்திப் பார்தி, தேசிய செயல்பாடுகளை விளக்கி பேசினார். இணை பொதுச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளார் பிரகாஷ் சந்திரமோகன்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய துணைத் தலைவர்கள் கே. ராஜேந்திரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் எஸ். மயில் மற்றும் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் உள்பட பலர் கருத்துரையாற்றினர்.

தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில கௌரவ தலைவர் அ. மாயவன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ. சங்கர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி. பேட்ரிக் ரைமண்ட், தனியார் பள்ளி ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிவஸ்ரீ ரமேஷ், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி. உதயசூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் எம். ரவிச்சந்திரன், தமிழ்நாடு வட்டார வள மைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் சி. முருகன் உள்பட பல்வேறு மாநிலங்களை சார்ந்த உறுப்பினர்கள் பேசினர்.

தேசியச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறும் திட்டத்தினை திரும்ப பெறுவது என்ற முடிவினை இக்கூட்டமைப்பு எதிர்க்கிறது. மேலும் இத்திட்டம் தொடரவும் தொடர் மதிப்பீட்டு முறையினை சிறப்பாக செயல்படுத்திட மத்திய அரசினை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உயர்கல்விக்கென தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைகழக மானியகுழுவினை திருத்தியமைக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்கின்றோம்.

தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றத்தின் (National Forum for Women Teachers) சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாடு தமிழகத்தில் கன்னியாகுமரியில் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடத்துவது. அதற்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் மாநில பெண் ஆசிரியர் மாநாடுகளை நடத்துவது.

இந்திய மொத்த வருவாயில்(GDP) 6 சதவிகிதமும் மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவிகிதமும் பள்ளிக் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட கோருகின்றோம்.

தனிநபர் வருமான வரி வரம்பினை ஐந்து இலட்சமாக உயர்த்திட வேண்டுகின்றோம். மேலும் ரூபாய் 5 இலட்சம் முதல் 8 இலட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10% வரியும் 8 முதல் 13 இலட்சம் ரூபாய் வரை 20% வரியும் ரூபாய் 13 இலட்சத்திற்கு மேல் 30% சதவிகித வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவிக்க கோருகின்றோம்.

வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction) குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைக்க வேண்டும். வீட்டு வாடகைப்படி, மருத்துவபடி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீள பெறுதல் ஆகியவை செலவினங்களுக்காக தரப்படும் படி ஆகையால் இதனை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டுகின்றோம்.

80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழித்தொகை ரூபாய் மூன்று இலட்சமாக உயர்த்த வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தொகுப்பூதியம் ஒப்பந்த ஊதிய முறையினை முழுமையாக ரத்து செய்து அனைவரும் முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருகின்றோம்.

தேசம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடவும் ஆசிரியர் மாணவர் விகிதம் முன்னேற்றவும் வேண்டுகின்றோம்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 6 மாத இயக்கம் செயலாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்டு 12ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31 வரை வட்டார அளவில் பிரச்சார இயக்கம் நடத்துவது. செப்டம்பர் மாதம் மாவட்ட அளவிலும் அக்டோபர் மாதம் மாநில் அளவிலும் நவம்பர் மாதம் புதுடெல்லியில் தேசிய அளவில் மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

ஜனவரி 2019இல் தேசிய அளவில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி பெருந்திரள் முறையீடு
போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

பொதுவான கோரிக்கைகளுக்கு போராடும் தோழமை இயக்க போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது!

இந்த கூட்டத்தில் டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், பாண்டிச்சேரி, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான், திரிபுரா, மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, பஞ்சாப், பிகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்ககங்களின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.

1.8.18

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்பான முதல்வர் பேச்சுக்கு ஜாக்டோ-ஜியோ 4ஆம் தேதி பதில்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு ஜாக்டோ-ஜியோ 4ஆம்  தேதி கூட்டத்தை கூட்டி பதிலளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

சேலத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்தும் பேசினார். அப்போது அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளவுக்கு அதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது. அதை வாங்கிக் கொண்டு பணியை செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும், ஆசிரியர்களின் ஊதியத்தை பொறியியல் பட்டதாரிகளின் ஊதியத்துடன் ஒப்பிட்டுக் காட்டி பேசியுள்ளார்.

இது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சித் தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்தும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ இதுகுறித்து தங்களின் நிலையை வெளிப்படுத்த 4ஆம் தேதி ஜாக்டோ-ஜியோ கூட்டம் கூடி முதல்வரின் பேச்சுக்கு முறையான விளக்கம் மற்றும் பதிலை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்