தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.5.12

ஊதிய முரண்பாடு களைதல் குழு கவனிக்குமா? 3 ஆண்டு கோரிக்கைக்கு முடிவு வருமா?


6வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.4,200 தர ஊதியம் கிடைக்குமா? மூன்று ஆண்டு கால கோரிக்கை முடிவுக்கு வருமா என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்களுமாக மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், 9 ஆயிரத்து 969 பேர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள். 65 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். மீதமுள்ள 91 ஆயிரத்து 36 பேர் இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.இடைநிலை ஆசிரியர்களில் சாதாரண நிலையில் 40 ஆயிரம் பேரும், தேர்வு நிலையில் 30 ஆயிரம் பேரும், சிறப்பு நிலையில் 21 ஆயிரத்து 36 பேரும் பணியாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் 6வது ஊதியக் குழு பரிந்துரைகள் கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டன. அதன் படி இடைநிலை ஆசிரியர்களில் சாதாரண நிலையில் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200& 20,200, தர ஊதியம் ரூ.2,800, தேர்வு நிலையில் உள்ளவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300&34,800, தர ஊதியம் ரூ.4,300, சிறப்பு நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.9,300 & 34,800 அடிப்படை ஊதியம், ரூ.4,500 தர ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊதிய விகிதத்தை மாற்றி சாதாரண நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 9,300 & 34,800, தர ஊதியம் ரூ.4,200ம், தேர்வு நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் ரூ.4,600ம், சிறப்பு நிலையில் உள்ளவர்களுக்கு தர ஊதியம் ரூ.4,800ம் வழங்க வேண்டுமென்று கடந்த மூன்று ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஊதியக் குழு முரண்பாடுகளை களைய ஒரு நபர் குழு அமைக்கப்பட்ட போதும் இடைநிலை ஆசிரியர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை.
தற்போது தமிழக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணனை தலைவராகக் கொண்டு உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணை செயலாளர் உமாநாத் ஆகிய மூவரை கொண்ட புதிய குழு ஊதியக் குழு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிடம் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், "ஒரு நபர் குழு பரிந்துரைப்படி இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் ரூ.750ம், தேர்வு மற்றும் சிறப்பு நிலையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.500ம் வழங்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர்கள் தவிர அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் தேர்வு நிலை, சிறப்பு நிலை தர ஊதியம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்