தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

9.7.12

சமனில்லாத சமன்!

கடந்த ஆண்டு இதே காலத்தில் சமச்சீர் கல்வி பற்றி மிகப்பெரிய குழப்பம் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் இருந்தது. இது தொடர்பாக போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. தில்லி உச்ச நீதிமன்றம்வரை சென்ற அந்தப் பிரச்னை ஒரு வழியாக சுமுகமாக்கப்பட்டது. கல்வி அனைவருக்கும் சமமாக்கப்பட வேண்டும் என்ற பெயரில் சமச்சீர் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான்.

"ஒரு கட்டடத்தை இரு தூண்கள் தாங்கிக் கொண்டுள்ளன. அதில் ஒரு தூணின் மேற்பகுதி சிறிது உடைந்துவிட்டது. இப்போது மேல்தளம் சமனில்லாமல் ஒரு புறம் சரிந்துள்ளது. இதனை சமன்செய்வதற்கான பல வழிகள் தொடர்பாகக் கூறப்பட்ட ஒரு யோசனை செயல்படுத்தப்பட்டது. அது என்னவென்றால், நன்றாக உள்ள மற்றொரு தூணையும் உடைந்த தூணின் அளவுக்கு உடைப்பதென்பது. அது அவ்வாறே மேற்கொள்ளப்பட்டு மேல் தளத்தைச் சமன்படுத்தியாயிற்று''.

இதுபோன்று எளிதில் புரியக்கூடிய, அழகான எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருக்கும் சமச்சீர் புத்தகம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதைக்குப் பிரச்னை அதுவல்ல.

8-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள, மாணவர்களும் ஆசிரியர்களும் செயல்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகளைப் பற்றித்தான். செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்கும் முறை இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தினமும் அதிகநேரம் படிப்பது என்பது மாறி அதிகநேரம் செயல்வழிக் கற்றல் என்றாகிறது. இது பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்த செயல் வழிக்கற்றலுக்காக மாணவர்களுக்கு சில மூலப்பொருள்கள் (சார்ட், அதில் ஒட்டுவதற்குப் படங்கள்..,) தேவைப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவனுக்கும் தினமும் குறைந்தது 20 ரூபாய் தேவைப்படுகிறது. 20 ரூபாய் என்பது உயர் வருவாய் பிரிவினருக்கு பெரும் தொகையல்ல. அரசுப் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு டாஸ்மாக்கில் நாள்தோறும் வருகையைப் பதிவு செய்யும் தந்தைக்கும், இலவசமாக அளிக்கக்கூடிய அரிசியைக்கூட கிலோ ரூ.3-க்கு வாங்கும் தாய்க்கும் இது பெருந்தொகையே! இது மாணவர்களுடைய பிரச்னை.

இந்தமுறையில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை?
இங்குதான் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் மாணவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் அலுவலர்களாக மாறியிருக்கின்றனர்.

ஒவ்வொரு மாணவனுக்கும் 5 அல்லது 6 பக்கம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களைத் தனித்தனியே கவனித்து அவர்களைப் பற்றி வளர் மதிப்பீடு, தொகுப்பு மதிப்பீடு என்று ஆவணப்படுத்தும் வேலை ஆசிரியர்களுக்கு. இதனால் கற்றுத்தரும் நேரம் குறைவாகவும் ஆவணப்படுத்தும் நேரம் அதிகமாகவும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு மாணவனிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டால், மாணவனிடம் என்ன கேள்வியைக் கேட்டோம் என்று ஆவணப்படுத்த வேண்டும். மாணவன் புத்தகத்தை கையில் தொட்டால், அதற்கு தனி மதிப்பெண் என்று அதனையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்த வேலைகளையெல்லாம் செய்துதான் மாணவன் எந்த இடத்தில் தேங்குகிறான், தொய்வடைகிறான் என்று ஆசிரியர் அறிய வேண்டியதில்லை. மாணவர்களின் சில செயல்பாடுகளை வைத்தே அவனைப் பற்றி கணிக்கக் கூடிய திறமை ஆசிரியர்களிடத்தில் உண்டு. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை ஆவணப்படுத்தும் முறை எப்படி சாத்தியமாகும்?

இந்நிலையில் இத்தனை வழிமுறைகளை அமல்படுத்தினால் மாணவர்களுக்குக் கல்வி சுமையாகின்றதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு சுமையாகிவிடாதா?

ஆசிரியர்களைப் பொருத்தவரையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மேலானவர்கள். புதிதாகக் கொண்டு வந்துள்ள முறை தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதா?

வண்டியில் சாட்டையைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர் பாரத்தை இழுக்கும் எருதின் கஷ்டத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கல்வி முறைகளில் உள்ள குறைகளைக் கூறினால், ""சம்பளம் அதிகம்; அதனால் வேலை அதிகம்; இதைக் கூட அவர்கள் செய்ய முடியாதா?'' என்று கேள்விக்கணைகள். வேலை செய்ய ஆசிரியர்கள் தயார். ஆனால், ஓட்டைப் பானையை வைத்து செடிகளுக்கு எப்படி நீர் ஊற்றுவது? இங்கு மாற்ற வேண்டியது பானையையா, நீர் ஊற்றுபவர்களையா?

கால்குலேட்டர் வந்தவுடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் திறன் குறைந்தது; செல்போன் வந்தவுடன் நினைவுத்திறன் குறைந்தது; இவைகளை இழந்து நாம் எதைப்பெற்றோம் என்று தெரியவில்லை.

அதேபோல் தொழில்நுட்பம் வந்தபின் எழுதுவது குறைந்தது. அட்டை வழி, செயல்வழி கற்றல்கள் மூலம் மாணவனின் வாசிப்புத் திறன் மறைந்து கொண்டிருக்கிறது. எழுத்து, வாசிப்பு இவையிரண்டும் இல்லாமல் எப்படி ஒரு மொழியைக் காப்பாற்றுவது?

மாற்றங்கள் வரும்போது ஒன்றை நாம் இழக்கத்தான் வேண்டும். மாற்றத்தை மறுப்பவர்கள் பிற்போக்காளர்கள், இந்த காலத்துக்கு உதவ மாட்டார்கள் என்று மாற்றத்தை ஏற்பவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.

அசோகர் மரம் நட்ட வரலாற்றுக் கல்வியைத் தூக்கிப்போடுங்கள். இந்த காலத்துக்கு ஏற்ற கல்வியை உருவாக்குங்கள் என்று முற்போக்கு சிந்தனைவாதிகளின் (?) குரல்கள் முன்பு கேட்டன.

ஆனால் இன்றோ, உலக வெப்பமயமாதலைத் தடுக்க ஜி-20 மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. மரத்தின் அருமை குறித்து அரசு பல விளம்பரங்களைச் செய்து வருகிறது. மரங்களை வளர்க்க பல இயக்கங்கள் தோன்றிவிட்டன.

இப்போதாவது புரிகிறதா, பழைய கல்வி முறை எவ்வளவு உகந்ததென்று? எந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டுமென்று யார் கூறுவது? மாற்றங்களை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டுமா? அவ்வாறாயின், உருவில் சிறியதாக இருந்து அறை முழுவதும் மணத்தை பரப்பக்கூடிய மல்லிகை போல்தானே அது இருக்க வேண்டும். அதைவிடுத்து காற்றிலே பட்டவுடன் சுருங்கி விடும் பஞ்சு மிட்டாய் போன்று இருந்து என்ன பயன்?

இந்த வகையான கற்றல் முறைகள் எல்லாம் சிபிஎஸ்இ-க்கு ஈடாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது அதிகாரிகளின் கருத்து. ஒருவேளை இந்த முறையும் அதற்கு ஈடாகவில்லையென்றால் என்ன செய்வது என்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினால், "நாம் என்ன செய்ய, அரசன் எவ்வழியோ நாம் அவ்வழி' என்ற பழமொழியை நினைவூட்டுகிறார்கள்.

நீரில் நனைந்த காகிதமோ, அட்டையோ ஈரம் காய்ந்தபின் முன்பைவிட விறைப்பாகத்தான் இருக்கும். அதற்காக அது உறுதியாகத்தான் உள்ளது என்று கூறிவிட முடியுமா?

முன்னர் பார்த்த கட்டட உதாரணத்தில், எதிர்கால சிந்தனையின்றி மேல்தளம் சமன்செய்யப்பட்டது. பாருங்கள், நாளைக்கு ஏற்கெனவே பாதிப்படைந்த தூண் பளு தாங்காமல் மேலும் பாதிப்படைந்தால் மேல்தளத்தை எப்படி சமன் செய்வது? மீண்டும் நன்றாக உள்ள தூணை வெட்டி சமன் செய்வதா? இதைத் தவிர்க்க முன்னரே என்ன செய்திருக்க வேண்டும்?

- கட்டுரையாளர்  ம. பண்டரிநாதன்

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்