தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.7.12

சத்துணவு திட்டத்தை நவீனப்படுத்த பயிற்சி: அரசு பள்ளிகளில் தயாராகுது அசத்தல் "மெனு"

அரசு பள்ளிகளில், தினமும் ஒவ்வொரு மெனு, 13 வகை சாப்பாடு, ஐந்து வகை முட்டை "ஸ்பெஷல்' என, அசத்தல் திட்டத்தில், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு பயிற்சியளிக்கிறார், சமையல் ஸ்பெஷல், "செப்' தாமு.

புகை, கரி படிந்த இருளான சமையல் அறை, ஒடுங்கி கறை பிடித்த பாத்திரங்கள், சுகாதாரமில்லா சாப்பாடு, பள்ளத்தை நோக்கி பாயும் சாம்பார்... இவையெல்லாம், அரசு பள்ளி சத்துணவுக் கூடங்களின் அடையாளம். தற்போது, பள்ளி சத்துணவு திட்டத்தை, அரசு கொஞ்சம் கொஞ்சமாக, நவீனப்படுத்தி வருகிறது. முதல் கட்டமாக, ஆண்டுதோறும் புதிய பாத்திரங்கள், விறகுக்கு பதிலாக காஸ் இணைப்பு என, பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வருகிறது. ஆனால், பள்ளி சத்துணவு சமைக்கும் முறையில், பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.

அரசு வழங்கும் நிதியை கொண்டு, பள்ளிகளில் உயர் தரமாக தினமும் விதவிதமான, "மெனு' கொடுத்து, அசத்த முடியும் என்பதை, "செப்' தாமு நிரூபித்துள்ளார். சென்னை சைதாபேட்டை, மாந்தோப்பு அரசு பள்ளியில், உணவுத் துறை அமைச்சர் சம்பத் முன்னிலையில், "செப்' தாமு மாணவர்களுக்கு கமகம மணத்துடன், சத்துணவு தயாரித்து கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, 16 மாவட்டத்திலுள்ள சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களுக்கு சுவையான ஆரோக்கியமான சத்துணவு சமைப்பது, சுகாதார முறைகளை கடைபிடிப்பது குறித்து, பயிற்சி அளித்துள்ளார்.

 "செப்' தாமு, கோவையில், நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில், 47 ஆயிரத்து 171 சத்துணவு மையங்கள் உள்ளன. சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், 1.50 லட்சம் பேர் உள்ளனர். தினமும், 55 லட்சம் பேருக்கு, பள்ளிகளில் சத்துணவு சமைக்கப்படுகிறது. ஒரு மாணவனுக்கு சத்துணவு சமைக்க, அரசு ரூ.4.09 செலவிடுகிறது. பள்ளிகளில் சத்துணவு சுவையாக இல்லாததால், மாணவர்கள் சாப்பாட்டை முழுமையாக சாப்பிடாமல், வீணாக கொட்டுவதை பார்த்ததால், மாணவர்களுக்கு சுவையான சாப்பாடு வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது, சத்துணவில் சாப்பாடு, சாம்பார், வாரத்தில் ஐந்து நாள் அவித்த முட்டை, ஒரு நாள் கொண்டைக் கடலை அல்லது பாசிப்பயறு அல்லது உருளைக் கிழங்கு வேகவைத்து கொடுக்கப்படுகிறது. அதே பொருட்களை கொண்டு, உயர் தரத்துடன், ஆரோக்கியமான முறையில், சுவையான சாப்பாடு தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டேன். அரசு வழங்கும் நிதிக்குள், இந்த திட்டத்தை அமைத்தேன்.

சத்துணவில்,
  • கொண்டைக் கடலை பிரியாணி, 
  • தக்காளி புலாவ், 
  • வெஜிடபிள் பிரியாணி, 
  • தக்காளி சாதம், 
  • புதினா சாதம், 
  • கறிவேப்பிலை சாதம்,
  • கொத்தமல்லி சாதம்,
  • கீரை சாதம், 
  • பிஸ்மலாபாத், 
  • கடலை குழப்பு சாதம், 
  • சாம்பார் சாதம், 
  • பிரைடு ரைஸ், 
  • காய்கறி கலந்து மசால் சாதம் 
ஆகிய, 13 வகையான நாவுக்கு ருசியான சாப்பாடு தயாரிக்க முடியும்.

முட்டையை அப்படியே அவித்து கொடுக்காமல்,
  • பெப்பர் முட்டை, 
  • தக்காளி முட்டை, 
  • முட்டை தொக்கு, 
  • முட்டை குருமா, 
  • மசாலா முட்டை 
என, ஐந்து வகை, "சைடு டிஷ்' தயாரிக்க முடியும்.

வெள்ளிக் கிழமைகளில், உருளைக் கிழங்கு, சுண்டல், பாசிப்பயறு போன்றவற்றில், வறுவல் செய்து கொடுக்கலாம்.

இந்த "மெனு' அரசு வழங்கும் நிதிக்குள் தயாரித்து, தினமும், ஒரு "மெனு' வீதம் கொடுக்க முடியும். இந்த திட்டத்தை "டெமோ' பார்க்க, சென்னையில், ஸ்பெஷல் மெனு அடிப்படையில், சத்துணவு தயாரித்து கொடுத்தேன். குழந்தைகள் உணவை வீணடிக்காமல், மறுபடியும் விரும்பி வாங்கி சாப்பிட்டனர்.

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில், விதவிதமான உணவு வகைகள் சமைக்க, பயிற்சி அளித்து வருகிறேன். இதன் மூலம், சத்துணவு திட்டத்தில் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையுள்ளது.

இவ்வாறு, "செப்' தாமு தெரிவித்தார்.

பாடத் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தி வரும் அரசு, சத்துணவு திட்டத்திலும் புதுமையை புகுத்தினால், பள்ளிகளில், இனி கம...கம... மணம் வீசும்.

சுகாதாரத்துக்கும் "டிப்ஸ்'

சத்துணவு பணியாளர்களுக்கான பயிற்சியின் போது, சுகாதாரத்துக்கும் "டிப்ஸ்' கொடுக்கிறார், "செப்' தாமு.
  • சத்துணவு அறையை சுத்தமாகவும், குப்பை இல்லாமலும் வைத்திருக்க வேண்டும். சமைக்க பயன்படுத்திய பாத்திரங்களை, நன்கு கழுவி, தண்ணீர் உலரும் வகையில், கவிழ்த்து வைக்க வேண்டும். தினமும், பாத்திரங்களை கழுவி பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் சாப்பிடும் தட்டுகளை கழுவி, ஈரத்தை துணியால் துடைத்து வைக்க வேண்டும்.
  • சமையல் பொருட்களை இருப்பு வைத்திருக்கும் ஸ்டோர் ரூம்களை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பொருட்கள் எடுத்த பின், மூட்டைகளை நன்றாக கட்டி வைக்க வேண்டும்.
  • முட்டையை தண்ணீரில் போட்டு கழுவும்போது, அவை தண்ணீரில் மிதந்தால், அழுகிய முட்டை என்பதை கண்டறிந்து, அகற்ற வேண்டும். கத்தரி, வெண்டைக் காய்கள் தண்ணீரில் மிதந்தால், அழுகியவை என அகற்ற வேண்டும்.
  • சமையல் பணியில் ஈடுபடுவோர், தினமும் குளித்து, தலைமுடி உதிராத அளவுக்கு, சுகாதாரமாக இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவி, சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்