தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

3.7.12

இந்தப் பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என உத்தரவிட முடியாது: சட்டமும் இல்லை

"குறிப்பிட்ட பள்ளியில் தான் குழந்தையை சேர்க்க வேண்டும் என்கிற உரிமை, சட்டத்தில் உறுதி செய்யப்படவில்லை" என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. தங்கள் குழந்தைகளை அரசு உதவி பெறாத பள்ளிகளில் சேர்க்கக் கோரி பெற்றோர் தாக்கல் செய்த மனுக்களை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

பள்ளி பெயருடன் மனு
சென்னையில் உள்ள வேலம்மாள் வித்யாலயா, டி.ஏ.வி., வாணி வித்யாலயா, சின்மயா வித்யாலயா, நடேசன் வித்யாலயா ஆகிய பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை வெவ்வேறு வகுப்புகளில் (எல்.கே.ஜி., முதல், இரண்டு, ஐந்து) சேர்க்க உத்தரவிடக் கோரி, பெற்றோர் தரப்பில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இலவச கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், 25 சதவீத இடங்களை ஏழை எளியவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என மனுக்களில் கூறப்பட்டது.

இம்மனுக்களை நீதிபதி சந்துரு விசாரித்தார். பள்ளி கல்வித் துறை சார்பில் கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய்காந்தி, வேலம்மாள் பள்ளி சார்பில் வழக்கறிஞர் என்.ராஜாசெந்தூர்பாண்டியன், மற்றும் தனியார் பள்ளிகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன், வழக்கறிஞர்கள் வெங்கட்ராமன், ரபுமனோகர், மெய்கண்டான் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

மனுக்களை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவு
:

யாருக்கு பொறுப்பு?
இவ்வழக்கில் உள்ள பள்ளிகள் அனைத்தும், அரசு உதவி பெறாத சிறுபான்மை அல்லாத பள்ளிகள். ஏழை எளிய மாணவர்களுக்கான 25 சதவீத ஒதுக்கீடு என்பது, எல்.கே.ஜி., அல்லது முதல் வகுப்பில் இருந்து தொடங்குகிறது.
அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில் இலவச கல்வி தானாக வந்து விடும் என மனுதாரர்கள் தவறாக கருதியுள்ளனர். அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளில், ஒரு குழந்தைக்கு முதல் வகுப்பில் அனுமதி கிடைக்கவில்லை என்றால், சட்டத்தின்படி, 14 வயது வரை குழந்தைகளுக்கு இலவச, கட்டாய கல்வி வழங்கும் பொறுப்பு, உள்ளூர் அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நலிந்த பிரிவினர் அல்லது வசதி படைத்தோராக இருந்தாலும், அந்தப் பெற்றோருக்கு அவர்கள் விரும்பிய பள்ளியில் தங்கள் குழந்தைகளை சேர்க்க உரிமையுள்ளதா என்பது தெளிவாக இல்லை. நலிந்த பிரிவினருக்கு 25 சதவீத இடங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது தவிர, மீதி 75 சதவீத இடங்களில், சட்டப்படி கோரும் கட்டணங்களை செலுத்தி தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும்.

சட்டத்தில் தெளிவு இல்லை
அருகாமை பள்ளி என எது நிர்ணயிக்கிறது, ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தால், எந்தப் பள்ளியில் பெற்றோருக்கு உரிமையுள்ளது, எந்த அதிகாரி அந்தப் பள்ளிக்கு உத்தரவிட முடியும், அரசு உதவி பெறாத தனியார் பள்ளி என்றால், மாணவர்கள் சேர்க்கையை யார் கண்காணிப்பார், என்பது தெளிவாக்கப்படவில்லை.

தற்போதைய திட்டத்தின்படி, நலிந்த பிரிவு மாணவர்களுக்கு, 25 சதவீத இடங்களை நிரப்பி விட்டதாக ஒரு பள்ளி நியாயப்படுத்தினால், சட்டத்தை பின்பற்றியிருப்பதற்கு அதுவே போதுமானது. மாணவர்கள் சேர்க்கை வெளிப்படையானதாக இருக்க வேண்டும். ஆனால், குறிப்பிட்ட பள்ளியில் தான் குழந்தையை சேர்க்க வேண்டும் என்கிற உரிமை, சட்டத்தில் உறுதி செய்யப்படவில்லை.

விசாரணைக்கு உகந்த மனு இல்லை
முதல் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளில், மனுதாரர்கள் சிலர் சேர்க்கக் கோருவது, விசாரணைக்கு உகந்ததல்ல. சில பள்ளிகளில் ஜனவரியில் துவங்கி ஏப்ரல் முதல் வாரத்தில், மாணவர்கள் சேர்க்கை முடிந்துள்ளது. ஏப்ரல் 12ம் தேதியில் இருந்து சட்டம் அமலுக்கு வந்ததால், இந்தப் பள்ளிகளுக்கு விலக்கு உள்ளது.

இணைய தளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு தெரிவித்தும், மனுதாரர்கள் விண்ணப்பிக்கவில்லை என பள்ளிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், முதலில் வருபவர்களுக்கு இடங்கள் அல்லது ராண்டம் முறையை பின்பற்றி மாணவர்களை சேர்த்ததாக அந்தப் பள்ளிகள் தரப்பில் கூறப்பட்டது. மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டதால், அந்த நடைமுறையில் குறுக்கிட ஒன்றுமில்லை.

அதிகாரிகளை அணுகுங்கள்
உள்ளூர் அதிகாரிகளை அணுகுவதை தவிர மனுதாரர்களுக்கு வேறு வாய்ப்பில்லை. சட்டம், விதிகளில் மீறல் இருந்தால், அதற்கு பொறுப்பான அதிகாரிகளை அணுகி தீர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை முடிந்து, பள்ளிகளில் குழந்தைகள் படித்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முறைகேடான சேர்க்கை நடந்துள்ளதா என்பது குறித்து உறுதியான விவரங்களை மனுதாரர்கள் தெரிவிக்கவில்லை.
பள்ளிகள் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே மாதிரியான குற்றச்சாட்டுக்களை கூறி, ஒரே மாதிரியான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். எனவே, அந்தப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்த தேவையில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி சந்துரு உத்தரவிட்டுள்ளார்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்