தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.3.11

வாக்குச்சாவடி அலுவலர் பணிநியமன ஆணைகளில் குளறுபடி: குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குழப்பம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச் சாவடி அலுவலர் பணிநியமன ஆணைகளில் காணப்படும் குளறுபடியால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.  

இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1410 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்த வாக்குச் சாவடிகளில், வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணிபுரிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று மொத்தம் 6981 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பணிநியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அனுப்பப்பட்டுள்ளது.  

இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) மாவட்டத்தில் 9 மையங்களில் தேர்தல் சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையைப் பெற்று ஒப்புதல் அளிப்பதுடன், தேர்தல் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜேந்திர ரத்னூ எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், வாக்குச் சாவடி அலுவலர்களாக பணிநியமன ஆணைகளைப் பெற்றுள்ள பல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், பல பணிநியமன ஆணைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டுள்ள இடத்தில் கன்னியாகுமரி என்பதற்குப் பதிலாக மதுரை, ராமநாதபுரம், தேனி என்று பிறமாவட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இதனால் பிறமாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்குச் செல்லவேண்டுமோ என்ற குழப்பம் உருவாகியுள்ளது. இது குறித்து விசாரித்தால் உறுதியான பதில் எதுவும் உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை.  

சம்பந்தப்பட்ட ஆணைகளில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜேந்திர ரத்னூதான் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் மாவட்டங்களின் பெயர்கள் மாறியுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக் குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கை.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்