தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.12.12

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஆற்றிய உரை

இந்த இனிய விழாவில் முன்னிலையுரை ஆற்றிய மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. என்.ஆர். சிவபதி அவர்களே,

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே,

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே,

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே,

வரவேற்புரை ஆற்றிய தலைமைச் செயலாளர் திரு. தேபேந்திரநாத் சாரங்கி அவர்களே,

நன்றியுரை ஆற்றவுள்ள பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திருமதி டி. சபிதா அவர்களே,

எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய, மாணவச் செல்வங்களே,

அந்தத் தூண்களை நிர்மாணிக்கும் ஆசிரியப் பெருமக்களே,

வணக்கத்திற்குரிய பெரியோர்களே,

என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே,

இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனது அருமை உடன்பிறப்புகளே,

உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கற்றவனை கண்ணுடையர் என்றும், கல்லாதவனை புண்ணுடையர் என்றும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். மெய்யறிவைத் தரக் கூடியது கல்வி என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன. சங்க காலம் தொடங்கி இது நாள் வரை தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதால் “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று தமிழ்நாட்டை சிறப்பித்து பாடியுள்ளார் மகாகவி பாரதியார். கற்றலால் சிறப்பும், கல்லாமையால் இழிவும் வந்தெய்தும் என்று புலவர் இளங்கீரனார் பாடியுள்ளார். ஒருவன் கல்வி கற்றால் அவனிடம் உள்ளத்தால் துணிவும், உடலளவில் பணிவும் வந்து சேரும் என்பது சான்றோர் வாக்கு. “கீர்த்தியும் பெருமையும் கிடைப்பது கல்வி” என்று கல்வியைப் பற்றி ஒளவையார் எடுத்துரைத்துள்ளார். அனைத்து அணிகலனையும் விட கல்வி அழகே அழகு என நாலடியார் பாடல் தெளிவாக்குகிறது. நன்மையும், தீமையும் விளையக் கூடிய நிலமாக இருப்பது மனம். ஆதலால் ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வியையே மக்களுக்கு போதிக்க வேண்டும் என்றார் அறிஞர் பிளாட்டோ.

“பூசை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்துக் கட்டும் நம் மக்கள் படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்று தான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம்” என்று கூறினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை அனைவரும் கற்க வேண்டும்; கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு சலுகைகளை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

ஓன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது.

மாணவ-மாணவியர் பசியின்றி கல்வி கற்க வசதியாக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுத் திட்டத்தில் மாணவ-மாணவியரின் விருப்பத்திற்கேற்ப உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 ஜோடி சீருடை, காலணிகள், கணித உபகரணப் பெட்டி, வண்ண பென்சில்கள், புத்தகப் பை, புவியியல் வரைபடம் ஆகியவை ஆண்டுதோறும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புற மக்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆரம்பப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாகவும், இடை நிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

மேல் நிலை வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு விலை ஏதுமின்றி மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேல் நிலைக் கல்வியில் இடை நிற்றலை தடுக்கும் வகையில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கணினி வழிக் கல்வி அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1,660 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன் எப்போதும் இல்லாத உயர் அளவாக இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கென 14,553 கோடி ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஒன்றரை ஆண்டுகளில் 26,220 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வு இரண்டு முறை நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நீங்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நியமன ஆணைகளை இன்று பெற்றுக் கொள்ள இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் பணி என்பது அறப் பணி. ஆசிரியர் பணி என்பது தன்னலமற்ற சேவைப் பணி. ஆசிரியர் பணியை விடச் சீரிய பணி ஏதுமில்லை.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ மாணவியரிடையே எடுத்துச் சொல்லும் பணி ஆசிரியர் பணி. வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள். கரையாக் கல்விச் செல்வத்தை கற்றுக் கொடுக்க இருக்கிறீர்கள். எந்த ஒரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ் பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியப் பெருமக்கள் கண்டு இன்புறுவர். அப்படிப்பட்ட உன்னதமானப் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்கள் எல்லாம் திறம்பட மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்த சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடத்திலே உருவாக்க வேண்டும். மாணவ, மாணவியரிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.


ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார். தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. எனவே, சந்தோஷமாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு பாலிதின் கவரில் போட்டு, அதை ஒரு துணி கவரில் சீல் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார். ஆனால் அதனை வெளியில் எடுக்க மாட்டார்.

அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார். பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார். பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலைமை. எல்லாம் அந்த துளையிட்ட காசோட மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர்.

இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது.

அப்போது தன் மனைவியைக் கூப்பிட்டு, “ரொம்ப நாளைக்குப் பிறகு என்னுடைய அதிர்ஷ்ட நாணயத்தை இன்றைக்கு வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன்” என்று கூறினார் அந்த மனிதர்.

உடனே மனைவி, “இப்ப அதைப் பார்க்க வேண்டாமே” என்று மெதுவாக கூறினார்.

“இல்லை, இல்லை! பார்த்தே தீர வேண்டும்!” என்று சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு கவரை திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார்.

அப்பொழுது அவரது மனைவி, “உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவில்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று ஜன்னலுக்கு வெளியே உதறினேன். அது தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக வேறு ஒரு நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன்” என்று கூறினாள்.

“இது எப்ப நடந்தது?” என்று கேட்டார் அந்த மனிதர்.

“உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது” என்றாள் மனைவி.

இதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

அந்த மனிதருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி. வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.

ஆசிரியர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, மாணவ-மாணவியரிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தால், அவர்களது ஆற்றல் நிச்சயம் வெளிப்படும். ஓவ்வொருவருக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை வெளிக் கொணர வேண்டிய கடமை ஆசிரியர்களாகிய உங்களுக்கு இருக்கிறது.

ஓர் ஆசிரியர் பாடத்தை கற்பிக்கும் விதம் மாணவ-மாணவியரை ஈர்க்கும் வகையில், அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செய்முறை விளக்கத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.

“ஒரு பொருளின் வெப்பம் இழக்கும் வீதமானது, அப்பொருளின் வெப்ப நிலைக்கும், சுற்றுப்புறத்தின் வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாட்டின் நேர்விகிதத்தில் இருக்கும்” என்பது நியூட்டனின் வெப்ப விதி. இதை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நடைமுறை உதாரணத்துடன் ஓர் ஆசிரியர் எடுத்துரைத்தார். அதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இரு நண்பர்கள் ஓர் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பால், காபி டிக்காஷன், சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக கொண்டு வந்து வைத்தார் பணியாளர். பால் கொதிநிலை சூட்டிலும், டிக்காஷன் அந்த அறையின் வெப்ப நிலையிலும் இருந்தது. அந்த சமயத்தில், அந்த நண்பர்களில் ஒருவருக்கு அவரது அலுவலக உயரதிகாரி கைபேசியில் தொடர்பு கொண்டு சில விவரங்களைக் கேட்டார். அந்த விவரங்களை தன்னிடம் உள்ள மடிக்கணினி மூலம் தேடி அந்த உயர் அதிகாரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக காபியை அருந்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலையில், பாலுடன் டிகாஷனை கலந்து வைத்தால் காபி சூடாக இருக்குமா? அல்லது காபியையும், டிகாஷனையும் தனித்தனியே குடுவையில் வைத்திருந்தால் சூடாக இருக்குமா? என்ற கேள்வியை மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். இதற்கு இரண்டு விதமான பதில்களும் மாணவர்களிடம் இருந்து வந்தன. ஆனால், காரணத்தை அவர்களால் விளக்க இயலவில்லை.

இதன் பின்னர், பால் அறையின் வெப்பநிலையை விட அதிக சூடாகவும், டிக்காஷன் அறையின் வெப்ப நிலையிலும் இருப்பதால், காபி சூடாக இருக்க வேண்டுமென்றால் பாலையும் டிக்காஷனையும் கலந்து காபியாக வைப்பது தான் சிறந்தது என்று ஆசிரியர் எடுத்துக் கூறி, நியூட்டனின் வெப்ப விதியை விளக்கினார். இவ்வாறு அன்றாட நிகழ்வுகளின் படி பாடத்தை விளக்கும் போது அது மாணாக்கரின் மனதில் எளிதில் பதிந்து விடும் என்பதோடு, வாழ்நாள் முழுமைக்கும் பயன் உள்ளதாகவும் அமைந்து விடும். இதைத் தான் William A. Ward என்ற அறிஞர் “The mediocre teacher tells. The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires.” என்று கூறியிருக்கிறார்.

ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்பது ஒரு முக்கோண வடிவம். இதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதே சமயத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி விட்டதாலேயே தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது.

பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்த்த உறுதுணையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்தப் படிப்பு தான் படிக்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆர்வமாக படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பில் அடைய முடியாது.

பல்லாண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் என்கிற சிறுவன் மேல்படிப்பு படிப்பது குறித்து அவன் வீட்டில் ஒரு விவாதம் நடைபெற்றது. அந்தக் குடும்பத்து பெரியவர் அந்தச் சிறுவனைப் பார்த்து, “ஒன்று சமஸ்கிருதம் படி அல்லது ஆங்கிலம் படி. ஆங்கிலம் படித்தால் இந்த உலகத்தில் ஆனந்தமாக வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேல் லோகத்திலே ஆனந்தமாக இருக்கலாம். நீ என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சிறுவன், “நான் தமிழ் படிக்கப் போகிறேன்” என்று கூறினான்.

சிறுவனின் பதிலைக் கேட்டதும் கோபப்பட்டார் அந்தப் பெரியவர்.

“ஆங்கிலம் படித்தால் இங்கு நன்றாக இருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் அங்கு நன்றாக இருக்கலாம். தமிழ் படித்தால் இரண்டு இடத்திலும் நன்றாக இருக்கலாம்” என்று தெளிவாக மீண்டும் எடுத்துரைத்தான் அந்தச் சிறுவன். அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை. அவர் தான் தமிழ்த் தாத்தா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர். பழந்தமிழ் இலக்கியங்களை நமக்கு அளித்தவர். அவர் தமிழ் படித்ததால் தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது.

படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளிடையே ஏற்படுத்தும் அதே சமயத்தில், அவர்களின் விருப்பத்திற்கேற்ற பாடத்தை படிக்க அனுமதித்தால் அனைத்து மாணவ – மாணவியருக்கும் வெற்றி உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இனிய விழாவில், 92 லட்சம் மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில் விலையில்லா காலணிகள், சீருடைகள், கணித உபகரணப் பெட்டிகள், வண்ண பென்சில்கள், க்ரயான்கள், புத்தகப் பைகள், புவியியல் வரைபடங்கள் ஆகியவை வழங்கப்படுவதை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இதன் அடையாளமாக 16 மாணவ-மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளையும், 36 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் நான் இந்த மேடையிலேயே வழங்க உள்ளேன்.

இதர ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இந்த விழாவிலேயே வழங்குவார்கள்.

அரசின் நலத் திட்ட உதவிகளை பெறும் மாணவ-மாணவியர், மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று இன்புற வாழ வேண்டும் என்றும் வாழ்த்தி,

ஏழ்மையும், கல்வியறிவின்மையும் தமிழ்நாட்டை விட்டு முற்றிலும் அகலும் வகையில் முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டு,

அண்ணா நாமம் வாழ்க!

புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!

என்று கூறி, விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்