தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.12.12

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி பயணித்தால் டிஸ்மிஸ்!: கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

"பஸ் படிக்கட்டுகளில், மாணவர்கள் பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும்; அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெருங்குடி அருகில், கந்தன்சாவடி உள்ளது. மாநகர போக்குவரத்து பஸ், சாலையில் வந்து கொண்டிருந்த போது, செங்கல் லாரி, பின்னோக்கி வந்து மோதியது. இதில், பஸ்சின் பின்புற படிக்கட்டில் பயணித்த மாணவர்கள், நான்கு பேர், உடல் நசுங்கி இறந்தனர். கடந்த, 10ம் தேதி, இச்சம்பவம் நடந்தது. இது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதையடுத்து, சம்பவம் குறித்து, தானாக முன்வந்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி பாஷா அடங்கிய, "முதல் பெஞ்ச்' வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மதுரை, ஐகோர்ட் கிளையில், இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப் பட்டது. இத்தகைய சோக சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்க, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என, அரசு, போக்குவரத்துத் துறை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற வேண்டும் என, அட்வகேட் ஜெனரலுக்கு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு, சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணை நடந்தது. அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர்.போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர், போக்குவரத்து துறையின், முதன்மை செயலரின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.

அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்குப் பின், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கப் போகிற நடவடிக்கைகள், போக்குவரத்து முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிப்பவர்களுக்கு நேரும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் இருக்கும். இந்த நடைமுறைகள் பற்றி, பத்திரிகைகளிலும், "டிவி' சேனல்களிலும், விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என, நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பஸ் படிக்கட்டுகளில், பயணிக்கும் பள்ளி மாணவர்கள், சிறுவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி, கல்லூரிகள் செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, இன்று (நேற்று) முதலே அமல்படுத்த, கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த மாணவராவது, படிக்கட்டில் பயணித்தது தெரிந்தால், அந்த மாணவனின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், அவர் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த மாணவன், இரண்டாவது, மூன்றாவது முறையும், அவ்வாறு படிக்கட்டில் பயணித்தால், அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு, பள்ளியில் இருந்து நீக்க, நடவடிக்கை எடுக்கலாம்.

 இந்த வழக்கு, ஜன., 2ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி, அன்று, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், அரசின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

என்ன பாதுகாப்பு?
விபத்துகளைத் தவிர்க்க, அமல்படுத்த திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னை கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர் கூறியுள்ளதாவது:

* பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிக்கக் கூடாது என, அறிவுறுத்தும் வகையில், பஸ் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள் அருகில், அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும்.

* பாதுகாப்பு அம்சங்கள் பற்றி, துண்டுப் பிரசுரங்களைமாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வினியோகிப்பது, கல்வி நிறுவனங்களிலும் வினியோகிப்பது.

* படிக்கட்டு பயணத்தால், விளையும் ஆபத்து பற்றியும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மீடியாக்களில், விரிவான விளம்பரங்கள் வெளியிடப்படும்.

போக்குவரத்துத் துறையின், முதன்மைச் செயலர் அறிக்கை:

* கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ள வழித்தடங்களில், சிறப்பு பஸ்கள் அதிகமாக இயக்கப்படும்.

* போக்குவரத்து போலீஸ் உதவியுடன், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விதிகள், கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்.

* போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார், மாணவர்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, மாணவர்களுக்கு ஆலோசனை, அறிவுரைகள் வழங்கப்படும்.

* படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் பற்றி, அவர்களின் பெற்றோர், கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், படிக்கட்டு பயணங்களை தடுக்கலாம்.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்