தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.10.12

பள்ளிகளில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான அரசாணை வெளியீடு

அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

பள்ளிகள், பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துகள், அசம்பாவித சம்பவங்கள் அண்மையில் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதையடுத்து, இந்தச் சம்பவங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தார்.

அதனையேற்று, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அரசாணையைப் பிறப்பித்துள்ளது.

அதன் விவரம்:

அரசு அதிகாரிகள் தவிர, தங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் உள்ள வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் குறித்து பள்ளியின் நுகர்வோரான பெற்றோரே நேரில் சென்று சமூக ஆய்வு(Community Inspection) நடத்த அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வகையில், மாணவ, மாணவியரின் தாய்மார்கள், வாரத்தில் ஒரு நாள், 5 பேர் கொண்ட குழுவாகச் சென்று பள்ளிகளில் உள்ள அனைத்து வசதிகளையும் பள்ளி வேலை நாள்களில் பார்வையிட அனுமதிக்க வேண்டும். இவர்களின் பார்வைக் குறிப்புகள் ஒரு பார்வைப் புத்தகத்தில் தொடர்ந்து பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்தக் குழுவின் பார்வைக் குறிப்புகளை ஒவ்வொரு வாரமும் பார்வையிட்டு குறைபாடுகள் உள்ள இடங்களில் அதனைச் சரி செய்ய தாளாளர், செயலர், முதல்வர் தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகள் குறித்த குறிப்பு எழுதப்பட்டு, அதில் தாளாளர், செயலர் ஒப்பமிட வேண்டும்.

மாணவ, மாணவியரின் நலனைக் காக்கும் வகையில் அனைத்துப் பள்ளிகளும் பின்பற்ற வேண்டிய பிற நடைமுறைகள் விவரம்:

* பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 1,500-க்கும் அதிகமாக இருந்தால் முறையான முழுநேர மருத்துவ சேவை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

* பள்ளிகளில் முதலுதவி பெட்டிகள் அனைத்து மருந்துப் பொருள்களுடன் அமைக்கப்பட வேண்டும்.

* பள்ளி மாணவர்களின் ரத்தவகை, நீண்ட நாள் நோய் சார்ந்த குறிப்புகள், மருந்து ஒவ்வாமை மற்றும் குடும்ப மருத்துவர் போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை வைத்திருக்க வேண்டும்.

* பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி கிணறு, கீழ்நிலை, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கழிவுநீர்த் தொட்டி ஆகியன நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு மூடப்பட்டிருக்க வேண்டும்.

* 20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பிடம், 50 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை என்ற அளவில் போதிய இடைவெளியில் கழிப்பறைகள் காற்றோட்டம், போதிய வெளிச்சத்துடன் இருக்க வேண்டும். அவை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ஆரோக்கியமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

* அனைத்து இடங்களிலும் மின் இணைப்புகள், ஸ்விட்ச் போன்றவை பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். மின் சாதனங்களில் உள்ள பழுதை நீக்கி பாதுகாப்புத் தன்மை குறித்து அங்கீகரிக்கப்பட்ட மின் அலுவலரின் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

* உடைந்த கட்டடங்கள், சுவர்கள், அறுந்த, துண்டித்த நிலையில் உள்ள மின்சார ஒயர்கள் போன்றவற்றை உடனடியாக நீக்க வேண்டும்.

* வீர விளையாட்டுகள் பள்ளி நிலையில் அவசியம் இல்லை. பாடத்திட்டத்தில் வரையறுக்கப்பட்ட விளையாட்டுகள் விளையாடும் சமயம் தகுந்த பாதுகாப்பு மற்றும் முதலுதவி வசதியுடன் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்.

* வகுப்பில் உள்ள வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் பள்ளியைவிட்டுச் சென்றுள்ளனர் என்பதை அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் உறுதிசெய்த பிறகே பள்ளியைவிட்டுச் செல்ல வேண்டும்.

இவ்வாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசாணை எண்: 270 நாள்: 22-10-2012  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்