தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
சி.பி.எஸ்.இ.,
 தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக 
கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக 
சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை 
வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு 
முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) 
அமல்படுத்தப்படும். 9, 10ம் வகுப்புகளுக்கு, 2013-14 கல்வியாண்டில் 
அறிமுகப்படுத்தப்படும்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:
கல்வி கற்கும் முறை 
மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக 
தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர்களை 
மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தும் வகையில் பல மாறுதல்கள் 
செய்யப்பட்டு வருகின்றன.தற்போதுள்ள தேர்வு முறை, மானப்பாடம் செய்து எழுதும்
 வகையில் உள்ளது. வகுப்புகளில் படிப்பதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து 
செயல்படும் வகையில் இல்லை. கேள்வித்தாள்களும், பாடங்களுக்கும் அப்பாற்பட்டு
 அவர்களை சிந்திக்கவிடுவதில்லை.
எனவே, தேசிய கல்விக் கொள்கைபடி, பாடங்கள் மற்றும் பாடங்கள் அல்லாத 
உடற்கல்வி, ஓவியம் போன்றவற்றையும் ஒருங்கிணைத்து மதிப்பிடும் முழுமையான 
தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய தேர்வு 
மதிப்பீட்டு முறையால், குழந்தைகளுக்கு அழுத்தத்தை குறைப்பதோடு அவர்களது 
தனித் திறனை வளர்க்க உதவும். இந்த மதிப்பீட்டு முறை, ஏற்கனவே சி.பி.எஸ்.இ.,
 பாடத்திட்டத்திலும் கேரளம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் 
அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்திலும் தற்போதுள்ள தேர்வு மதிப்பீட்டு
 முறையை மாற்றி, முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது 
அவசர, அவசியமாகிறது.
புதிய தேர்வு முறைப்படி, கல்வியாண்டு மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு 
தேர்வு நடத்தப்படும். ஜூன் முதல் செப்டம்பர் முதல் பருவம், அக்டோபர் முதல் 
டிசம்பர் வரை இரண்டாவது பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலம் மூன்றாவது
 பருவமாகும்.
ஒரு பருவம் முழுவதும் வகுப்பறைகளில் தேர்வு நடத்தி உடனடியாக மதிப்பீடு 
செய்வது . இது உடனடி மதிப்பீடு. பருவ இறுதியில் தேர்வு நடத்தி மதிப்பீடு 
செய்வது, மொத்த மதிப்பீடு என்ற வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் 
வகுப்பறை உடனடி தேர்வுகளுக்கு மொத்த மதிப்பெண் 40, பருவ இறுதியில் 
நடைபெறும் மொத்த தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 60. இரண்டு மதிப்பெண்களை 
கூட்டினால் கிடைக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். 
மொத்தம் 6 வகுப்பறை தேர்வுகள் நடத்தப்பட்டு, இதில் அதிக மதிப்பெண்கள் 
எடுத்துள்ள 4 தேர்வுகள் கணக்கில் கொள்ளப்படும்.பாடங்களுக்கும், பாடங்கள் 
அல்லாத உடற் பயிற்சி கல்வி உள்ளிட்டவற்றுக்கும் மதிப்பெண்கள் 
கணக்கிடப்படும்.
பருவ இறுதியில் நடைபெறும் தேர்வில் 55 முதல் 60 மதிப்பெண்கள் எடுக்கும் 
மாணவர்களுக்கு ஏ1 கிரேடு அளிக்கப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதுபோல்
 49-54 (ஏ2), 43-48 (பி1), 37-42 (பி2), 31-36 (சி1), 25-30 (சி2) என்ற 
வரிசையில் கிரேடு அளிக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்படும். இதில், 12 
மதிப்பெண்களுக்கு கீழே எடுத்திருந்தால் இ2 கிரேடு மட்டும் வழங்கப்படும். 
புள்ளிகள் அளிக்கப்படாது. இதே முறை, பருவம் முழுவதும் நடைபெறும் வகுப்பறை 
தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும்.
வகுப்பறை தேர்வு மற்றும் பருவ இறுதி தேர்வு இரண்டையும் சேர்த்து மொத்த 
மதிப்பெண் 100 என நிர்ணயித்து, அதன் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். 
இதுபோன்று, ஒவ்வொரு பருவத்துக்கும் தேர்வு நடத்தப்பட்டு, கிரேடு 
வழங்கப்படும்.
இதில், ஏ கிரேடு எடுத்தால் மிக மிக சிறந்த மாணவன், (பி) கிரேடு மிக 
சிறந்த மாணவன், (சி) கிரேடு சிறந்த மாணவன், (டி) கிரேடு திருப்திகரம், (இ) 
கிரேடு திருப்தி இல்லை. இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என 
நிர்ணயிக்கப்படும். ஒரு பருவத்தில் படிக்கும் பாடங்களை அடுத்த பருவத்தில் 
படிக்க தேவையில்லை.
கல்லூரிகளை போல, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு செமஸ்டர் முறை 
அமல்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசு உத்தரவில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.