தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

20.7.11

சமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய அரசு காத்திருப்பு : அப்பீல் மனு மீது நாளை விசாரணை?

சமச்சீர் கல்வி குறித்து முடிவுசெய்ய, இரண்டு நாள் காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கிடையே, ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிகிறது. 

சமச்சீர் கல்வி வழக்கு தொடர்பாக, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆராய தலைமைச் செயலர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழு, சமச்சீர் கல்வி திட்டத்தை ஆய்வு செய்து, அதன் அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில், கடந்த 5ம் தேதி தாக்கல் செய்தது. இதன் மீது விசாரணை நடந்து முடிந்ததும், நேற்று முன்தினம் சென்னை ஐகோர்ட் முதல் பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது. "ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, நடப்பு கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 22ம் தேதிக்குள் பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தமிழக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி சட்ட திருத்தத்தை ரத்து செய்வதாகவும் அறிவித்தனர். 

ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்காக, நேற்று முன்தினம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், துறை செயலர் சபீதா, தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர், டில்லி புறப்பட்டுச் சென்றனர். ஐகோர்ட் தீர்ப்பு குறித்தும், இதை எதிர்த்து அப்பீல் மனு தாக்கல் செய்தால், தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்தும், நேற்று காலை முதல், மூத்த சட்ட நிபுணர்களுடன் அமைச்சரும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். இறுதியில், அப்பீல் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

நேற்று மாலை சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை அவசர மனுவாக ஏற்று, விரைவாக விசாரணை நடத்தி, தீர்ப்பு வழங்குமாறு, தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அப்பீல் மனு மீது நாளை விசாரணை நடக்கும் என தெரிகிறது. 

இதற்கிடையே, இந்த வழக்கில் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட ஐந்து பேர், "கேவியட்' மனு தாக்கல் செய்தனர். தங்களின் கருத்துக்களை கேட்காமல், அப்பீல் மனு மீது தீர்ப்பு வழங்கக் கூடாது என, அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். எனவே, விசாரணையின்போது, அவர்கள் தரப்பு கருத்துக்களும் கேட்கப்படும். 

இதற்கிடையே, ஐகோர்ட் உத்தரவின்படி பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டு உள்ளது. பாடப் புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக, தமிழக அரசிடம் இருந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு நேற்று எந்தவித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதனால், நேற்று பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை. 

அப்பீல் மனு மீது விரைவாக தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், சமச்சீர் கல்வி குறித்து முடிவு செய்ய இரண்டு நாள் வரை காத்திருக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்