தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.7.11

நேரடி 8ம் வகுப்பு தனித்தேர்வு திட்டம் ரத்து: ஆர்.டி.இ., சட்டம் காரணமாக அரசு நடவடிக்கை

கட்டாயக்கல்வி சட்டம் காரணமாக, நடப்பாண்டு முதல் நேரடியாக, 8ம் வகுப்பிற்கான தனித்தேர்வு திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இனி, 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் படித்தால் மட்டுமே, நேரடியாக, 10ம் வகுப்பு தனித்தேர்வை எழுதமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

பள்ளிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்களுக்கும், படிப்பை பாதியில் விட்டுவிட்டவர்களுக்கு படிக்கும் வாய்ப்பை தரும் வகையிலும், ஆண்டு தோறும் நேரடியாக, 8ம் வகுப்பு தனித்தேர்வை, அரசு தேர்வுத்துறை நடத்தி வந்தது.

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடக்கும் இத்தேர்வை, 10 ஆயிரம் பேர் எழுதுவர். ரயில்வே துறையில், "கலாசி" வேலையில் சேர வேண்டுமெனில், குறைந்தபட்சம், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல், துப்புரவு பணியாளர்களாக இருப்பவர்கள், பதிவு எழுத்தர் (ரெக்கார்டு கிளார்க்) நிலைக்கு உயர வேண்டுமெனில், 8ம் வகுப்பு தேர்ச்சி முக்கியம். டிரைவர் லைசென்ஸ் எடுப்பதற்கும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்படி, பல நிலைகளில், 8ம் வகுப்பு தேர்ச்சி அவசியமாக உள்ளது. இதற்காகவே, ஆயிரக்கணக்கானோர் இத்தேர்வை எழுதுகின்றனர்.

 இந்நிலையில், 2009ம் ஆண்டு மத்திய அரசு கட்டாயக்கல்வி சட்டத்தை கொண்டுவந்து, நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில், "அனைத்து வகையான பள்ளிகளிலும், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை எக்காரணம் கொண்டும் தோல்வியடையச் செய்யக்கூடாது. அனைவரையும், 8ம் வகுப்பு வரை, தேர்ச்சி அடையச் செய்ய வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது, பள்ளிகளில், 8ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்வதில்லை.

நேரடியாக, 8ம் வகுப்பு தனித்தேர்வு நடத்தினால், தேர்ச்சி, தோல்வி என தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டியிருக்கும். எனவே, கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, நேரடி, 8ம் வகுப்பு தனித்தேர்வை நடப்பாண்டு முதல் ரத்து செய்துள்ளதாக, துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, "கடந்த ஆண்டே தேர்வு நடத்தியிருக்கக் கூடாது. ஆனால், நடத்திவிட்டதால் வேறு வழியின்றி அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக, சான்றிதழ் கொடுத்துவிட்டோம். இந்த ஆண்டு முதல், 8ம் வகுப்பிற்கு நேரடி தனித்தேர்வு நடைபெறாது' என்றார்.

அரசு தற்போது எடுத்துள்ள முடிவு காரணமாக, நேரடியாக, 8ம் வகுப்பு தேர்வை எழுத திட்டமிட்டிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நேரடியாக, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத வழியில்லை. எனவே, 8ம் வகுப்பு படிக்க வேண்டும் என நினைப்பவர்கள், 8ம் வகுப்பு வரை பள்ளிகளில் படிக்க வேண்டும்; வேறு வழியில்லை. அப்படி, பள்ளிகளில், 8ம் வகுப்பு படித்து முடித்துவிட்டால், அதன்பின் நேரடியாக, 10ம் வகுப்பு தேர்வையும், பிளஸ் 2 தேர்வையும் எழுதலாம்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்