"மாணவர்களை டீ, பிஸ்கெட் வாங்கி வரச் சொல்வது; கழிவறைகளை சுத்தம்  செய்யச் சொல்வது போன்ற விரும்பத்தகாத செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தினால்,  சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கடும்  நடவடிக்கை எடுக்கப்படும்'' என, தொடக்க கல்வித்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து, தொடக்க கல்வித்துறை இயக்குனர் மணி, மாவட்ட தொடக்கக்  கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 
திருவண்ணாமலை மாவட்டம்,  ஆரணி ஒன்றியம் விளை கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர், விளை  கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும்  ஆசிரியர்கள் தங்களது தேவைக்காக, அப்பள்ளியில் பயிலும் மாணவர்களை வெளியில்  அனுப்பி டீ, பிஸ்கெட் மற்றும் தின்பண்டங்களை வாங்கிவரச் செய்வதாகவும்,  ஆசிரியர்களின் வாகனங்களை சுத்தம் செய்தல், ஆசிரியர்களின் கழிவறைக்கு  தண்ணீர் கொண்டு வைத்தல், கழிவறையை சுத்தம் செய்தல் போன்ற பணிகளுக்கு  மாணவர்களை ஈடுபடுத்துவதாகவும், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், "இது மிகவும் சீரியசான விவகாரம். இது தொடர்பாக,  தொடக்க கல்வி இயக்குனர், விரிவாக விசாரணை நடத்தவும், இதுபோன்ற  அருவருக்கத்தக்க செயல்கள் எதிர்காலங்களில் நடக்காத அளவிற்கு தடை செய்யவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க  வேண்டும்" என, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
இதையடுத்து, சம்பந்தபட்ட பள்ளியில், கடந்த மாதம் 24ம்தேதி உதவி  தொடக்கக் கல்வி அலுவலர் நடத்திய நேரடி விசாரணையில், மனுதாரர் புகார்  உண்மையென தெரிய வந்தது. விரும்பத்தகாத செயல்களில், மாணவர்களை  ஈடுபடுத்தக்கூடாது என்று இயக்குனர் அறிவுறுத்தியுள்ளபோதிலும், இதுபோன்ற  செயல் நடந்திருப்பது, தொடக்க கல்வித்துறைக்கு பெரிய களங்கத்தை  ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஆசிரியர்கள் மரியாதைக்கும் குந்தகம்  விளைவித்துள்ளது.
எனவே, வரும் காலங்களில் விரும்பத்தகாத செயல்களில் மாணவர்களை  ஈடுபடுத்தினால், சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு  செய்வது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். 
இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் வகையில், ஒன்றிய, மாவட்ட  அளவில் உள்ள கல்விக் குழுக்களை, ஒவ்வொரு மாதமும் கூட்டி ஆலோசிக்க வேண்டும்.  குழுவில் இடம்பெற்றுள்ள பெற்றோர் மற்றும் மற்ற உறுப்பினர்களின்  ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, அதன்மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும்.
துப்புரவு பணிகளை மேற்கொள்ள, அந்தந்த ஊராட்சி மற்றும் நகராட்சி  தலைவர்களை அணுகி, துப்புரவு பணியாளர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என,  பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். அனைத்து விதிமுறைகள்  மற்றும் வழிகாட்டுதல்கள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை, ஒவ்வொரு உதவி  தொடக்கக் கல்வி அலுவலர்களும் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு இயக்குனர்  கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக