தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

4.8.18

கன்னியாகுமரியில் தேசியஅளவிலான மகளிர் மாநாடு - STFI முடிவு

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசியத் தலைமை நிர்வாகிகள் கூட்டமும், தேசியச் செயற்குழு கூட்டமும் ஜூலை 28, 29 ஆகிய நாள்களில் புதுதில்லியில் நடைபெற்றது.

தேசிய நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தேசியத் தலைவர் அபித்முகர்ஜி தலைமை தாங்கினார். தேசிய பொதுச் செயலாளர் சந்திர நவ்திப் பார்தி, தேசிய செயல்பாடுகளை விளக்கி பேசினார். இணை பொதுச் செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளார் பிரகாஷ் சந்திரமோகன்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய துணைத் தலைவர்கள் கே. ராஜேந்திரன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் எஸ். மயில் மற்றும் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் கே.பி.ஓ.சுரேஷ் உள்பட பலர் கருத்துரையாற்றினர்.

தேசிய செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில கௌரவ தலைவர் அ. மாயவன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் அ. சங்கர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி. பேட்ரிக் ரைமண்ட், தனியார் பள்ளி ஆசிரியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சிவஸ்ரீ ரமேஷ், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் டி. உதயசூரியன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் எம். ரவிச்சந்திரன், தமிழ்நாடு வட்டார வள மைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் சி. முருகன் உள்பட பல்வேறு மாநிலங்களை சார்ந்த உறுப்பினர்கள் பேசினர்.

தேசியச் செயற்குழுவில் பின்வரும் தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி பெறும் திட்டத்தினை திரும்ப பெறுவது என்ற முடிவினை இக்கூட்டமைப்பு எதிர்க்கிறது. மேலும் இத்திட்டம் தொடரவும் தொடர் மதிப்பீட்டு முறையினை சிறப்பாக செயல்படுத்திட மத்திய அரசினை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உயர்கல்விக்கென தற்போது நடைமுறையில் உள்ள பல்கலைகழக மானியகுழுவினை திருத்தியமைக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்கின்றோம்.

தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றத்தின் (National Forum for Women Teachers) சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாடு தமிழகத்தில் கன்னியாகுமரியில் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் நடத்துவது. அதற்கு முன்னர் அனைத்து மாநிலங்களிலும் மாநில பெண் ஆசிரியர் மாநாடுகளை நடத்துவது.

இந்திய மொத்த வருவாயில்(GDP) 6 சதவிகிதமும் மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவிகிதமும் பள்ளிக் கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட கோருகின்றோம்.

தனிநபர் வருமான வரி வரம்பினை ஐந்து இலட்சமாக உயர்த்திட வேண்டுகின்றோம். மேலும் ரூபாய் 5 இலட்சம் முதல் 8 இலட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10% வரியும் 8 முதல் 13 இலட்சம் ரூபாய் வரை 20% வரியும் ரூபாய் 13 இலட்சத்திற்கு மேல் 30% சதவிகித வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவிக்க கோருகின்றோம்.

வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction) குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைக்க வேண்டும். வீட்டு வாடகைப்படி, மருத்துவபடி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீள பெறுதல் ஆகியவை செலவினங்களுக்காக தரப்படும் படி ஆகையால் இதனை வருமானமாக கருதாமல் செலவினமாக கருத வேண்டுகின்றோம்.

80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழித்தொகை ரூபாய் மூன்று இலட்சமாக உயர்த்த வேண்டும்.

புதிய ஓய்வூதிய திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைபடுத்திட வேண்டுகின்றோம்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தொகுப்பூதியம் ஒப்பந்த ஊதிய முறையினை முழுமையாக ரத்து செய்து அனைவரும் முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருகின்றோம்.

தேசம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடவும் ஆசிரியர் மாணவர் விகிதம் முன்னேற்றவும் வேண்டுகின்றோம்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி 6 மாத இயக்கம் செயலாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது. ஆகஸ்டு 12ஆம் தேதி முதல் ஆகஸ்டு 31 வரை வட்டார அளவில் பிரச்சார இயக்கம் நடத்துவது. செப்டம்பர் மாதம் மாவட்ட அளவிலும் அக்டோபர் மாதம் மாநில் அளவிலும் நவம்பர் மாதம் புதுடெல்லியில் தேசிய அளவில் மாநாடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

ஜனவரி 2019இல் தேசிய அளவில் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி புதுதில்லியில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி பெருந்திரள் முறையீடு
போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

பொதுவான கோரிக்கைகளுக்கு போராடும் தோழமை இயக்க போராட்டங்களுக்கு ஆதரவளிப்பது என தீர்மானிக்கப்பட்டது!

இந்த கூட்டத்தில் டெல்லி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, அஸ்ஸாம், பாண்டிச்சேரி, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான், திரிபுரா, மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா, பஞ்சாப், பிகார், ஜம்மு காஷ்மீர், மேகாலயா, உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்ககங்களின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்