தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.8.19

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்ட முடிவுகள்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், இன்று (24.08.2019) சென்னை, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகத்தில் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, (தமிழ்நாடு) மாநில அமைப்பாளர் திரு.ச.மயில் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  
தீர்மானம் எண் 1: 
தே.க.கொ வரைவையே நடைமுறைப்படுத்தி வரும் தமிழக அரசிற்குக் கண்டனம்

தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை மீது 15.08.2019 வரை கருத்துக் கேட்பு நடத்தியுள்ள மத்திய அரசு இதுவரை ஏற்பு செய்யப்பட்ட இறுதி அறிக்கையை வெளியிடாத நிலையில், தமிழக அரசு தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ள பொதுக்கல்வியை பாதிக்கக்கூடிய, கிராமப்புற ஏழை, எளிய குழந்தைகளின் இலவச தமிழ்வழிக் கல்வியைப் பாதிக்கக்கூடிய வகையிலான தொடர் நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு வருவதை இம்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு, அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளை கல்வி நிலையிலும், நிர்வாக நிலையிலும் பாதிக்கக்கூடிய அரசாணை (நிலை) எண் : 145(பள்ளிக்கல்வித்(தொக)3(2)துறை) நாள் : 20.08.2019 -ஜ உடனடியாகத் திரும்பப்பெற இம்மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண் 2: 
கருத்தரங்குகள் நடத்திய மாவட்ட அமைப்புகளுக்கு வாழ்த்துகள்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 21.07.2019 தமிழ்நாடு மாநிலக்குழுவின் முடிவின்படி தேசியக் கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகள் நடத்திய இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புகளுக்கு இம்மாநிலக்குழு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவுத்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 3: 
STFI & AIFUCTO மதுரையில் மாநில மாநாடு

தேசியக்கல்விக்கொள்கை – 2019 தொடர்பாக AIFUCTO(All India Federation of University & College teachers organisations) அமைப்புடன் இணைந்து STFI & AIFUCTO சார்பில்  செப்டம்பர் - 2019-ல் மதுரையில் மாநில அளவிலான மாநாடு ஒன்றை மிகச்சிறப்பாக நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 4: 
பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிக் கட்டணம்

இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 01.10.2019 மற்றும் 02.10.2019 ஆகிய இரு நாட்கள் திண்டுக்கல்லில் நடைபெறும் பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பவர்களிடம் பிரதிநிதிக் கட்டணமாக தலா ரூ500-(ரூபாய் ஐநூறு மட்டும்) பெறுவது என இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 5: 
ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப்பெற பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் தொடர்ச்சியாக, தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகத்  தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்புச் சங்கமான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.மா.இரவிச்சந்திரன் அவர்களின் தற்காலிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்துசெய்யக் கோரியும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீதான அனைத்து பழிவாங்கும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் ரத்து செய்திடக்கோரியும் இந்தியப்பள்ளி  ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 09.09.2019 அன்று மாலை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்கள் முன்பும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட இம்மாநிலக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.

கூட்டத்தில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாநிலத் தலைவர் செ.அப்பாத்துரை, பொதுச்செயலாளர் மற்றும் STFI அகில இந்திய மத்திய குழு உறுப்பினர் அ. சங்கர், மாநிலப் பொருளாளர் க.சு.பிரகாசம், மாநில தனிக்கையாளர் திருமதி அ. ஜெயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்