தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 முடிய இரண்டாவது கட்டமாக நடைபெற உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது, பொதுமக்கள் தட்டிக்கழிக்காமல் சரியான தகவல்களைத் தெரிவிக்குமாறு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இயக்குநர் (சென்னை) எஸ். கோபாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி குறித்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் அவர் பேசியதாவது:
கடந்த ஜூன்-ஜூலை மாதங்களில் முதல் கட்டமாக வீடு மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இப்போது அதை அடிப்படை தகவலாகக் கொண்டு 2-வது கட்டமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 முதல் 28 ஆம் தேதி முடிய மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. இந்தக் கணக்கெடுப்பின்போது தெரியவரும் மக்கள்தொகையானது அதிகாரபூர்வ மக்கள்தொகையாக அறிவிக்கப்படும்.
இந்தக் கணக்கெடுப்பின்போது சமுதாயத்தில் உள்ள எவரும் விடுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கணக்கெடுப்புக் காலத்தில் விடுதிகள், இல்லங்கள் உள்ளிட்ட தங்கும் இடங்களில் உள்ளவர்களையும், சாலையோரம் வசிப்போரையும் அவர்கள் அங்கேயே ஒரு மாத காலம் தங்கி இருப்பார்களானால் அவர்களையும் கணக்கெடுக்க வேண்டும். துறைமுக நகரங்களில் பிப்ரவரி 28 அன்று இரவு கப்பலில் தங்கி இருக்கும் வெளிநாட்டவர்களையும் கணக்கெடுக்க வேண்டும். அவர்கள் வேறு ஏதேனும் இடத்தில் நடந்த கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களை விட்டுவிடலாம். இந்தக் கணக்கெடுப்பில் ஆண், பெண் மட்டுமன்றி திருநங்கைகளையும் கணக்கெடுக்க வேண்டும். மேலும், மாற்றுத் திறனாளிகளையும் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைச்செயல்படுத்த இந்தக் கணக்கெடுப்பு அவசியமாகிறது. எனவே, கணக்கெடுப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும்.
மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்ட வீடுகளில் நீல வண்ண ஸ்டிக்கர் ஒட்டப்படும். இந்தப் பயிற்சிக்கு பின்னர் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் முதன்மை பயிற்சியாளர்களுக்கு டிசம்பர் மற்றும் ஜனவரியில் அந்தந்த வட்டம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
முதல் கட்ட கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு அதற்கான ஊக்கத்தொகை இன்னும் வழங்கப்படவில்லை. அதை வழங்குவதற்கான ஆணையை அரசு வழங்கியுள்ளது. எனவே, டிசம்பர் முதல் வாரத்திற்குள் அந்த தொகையை அனைவருக்கும் வழங்கிவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் இரண்டாவது கட்ட கணக்கெடுப்புப் பணியை உற்சாகமாக மேற்கொள்வார்கள்.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்காக நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பணிக்காலத்தில் அரை நாள் அனுமதி அளிக்கப்படும். ஆசிரியர்களை கணக்கெடுப்புப் பணிக்கு அனுப்பாத பள்ளிநிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியை மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சி ஆணையரும், நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையர்களும், கிராமப்புறங்களில் அந்தந்த வட்டாட்சியர்களும் மேற்பார்வை செய்வார்கள். மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ஊழியர்கள் வீடுகளுக்கு வரும்போது அவர்களை தட்டிக் கழிக்காமல் தேவையான அனைத்து தகவல்களையும் சரியான முறையில் தெரிவித்து பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் கணக்கெடுப்பு துல்லியமாக அமையும் என்றார்.
கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர்கள் மு. ஜெயராமன் (திருநெல்வேலி), சி.என். மகேஸ்வரன் (தூத்துக்குடி), ராஜேந்திர ரத்னூ (கன்னியாகுமரி), மாவட்ட வருவாய் அலுவலர்கள் துரை ரவிச்சந்திரன் (தூத்துக்குடி), கலைச்செல்வன் (கன்னியாகுமரி), சேரன்மகாதேவி சார்-ஆட்சியர் வீரராகவராவ், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் என். சுப்பையன், கோட்டாட்சியர்கள் தமிழ்ச்செல்வி (திருநெல்வேலி), சேதுராமன் (தென்காசி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக