சட்ட மேலவைத் தேர்தல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்புக்கு கால நீட்டிப்பு ஏதும் வழங்கப்படாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்ட மேலவைத் தேர்தலில் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் தங்களது பெயர்களைச் சேர்க்க நவம்பர் 6-ம் தேதி (சனிக்கிழமை) கடைசி நாளாகும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆசிரியர் மற்றும் பட்டதாரிகளிடையே பெரிய அளவில் ஆர்வம் காணப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் இரு தரப்பையும் சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மட்டுமே தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில், பெயர் சேர்ப்புக்கு கால நீட்டிப்பு வழங்கப்படுமா என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடமும் எழுந்துள்ளது. மேலவைக்கான விதிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து அரசியல் சட்டத்தில் கால நிர்ணயம் வகுக்கப்பட்டுள்ளன. அந்தக் கால நிர்ணயப்படி மேலவைக்கான ஒவ்வொரு பணிகளும் நடைபெற்று வருவதால் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறியது:
வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் பணி நவம்பர் 7-ம் தேதி முதல் தொடங்கும். இதுவரை பெயர்களைப் பதிவு செய்தவர்களைக் கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும். இந்தப் பட்டியல் நவம்பர் 22-ம் தேதி வெளியிடப்படும்.
பட்டியல் வெளியான காலத்திலிருந்து ஓரிரு வாரங்கள், கால அவகாசம் அளிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்காதவர்கள் அந்தக் காலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அந்தக் கால அவகாசம் அளிக்கப்படும். எனவே, பெயர் சேர்ப்புக்கு தனியாக கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் பிரவீன் குமார்.
டிசம்பர் 30-ம் தேதிக்குள் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளுக்கான, இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக