13.3.18

தேசிய பெண் ஆசிரியர்கள் மாநாடு தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெறுகிறது

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் 11-03-2018, ஞாயிற்றுக் கிழமையன்று புதுதில்லியில் உள்ள சாதிப்பூர், ஆசிரியர் பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேசிய தலைவர் அபித்முகர்ஜி தலைமை தாங்கினார். தேசிய பொருளாளர் தி.கண்ணன், தேசிய பொதுச்செயலாளர் சி.என்.பார்தி, இணை பொதுச்செயலாளர் கே.சி.ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழகத்தின் சார்பில் இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சங்கர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் ச.மோசஸ், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் கே.பி.ஓ.சுரேஷ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ்குமார், தமிழ்நாடு பதவிஉயர்வு பெற்ற முதுகலைப் பட்டதாரி சங்க பொதுச் செயலாளர் உதயசூரியன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநிலப் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மன்ட் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆசிரியர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.

செயற்குழுக் கூட்டத்தின் முடிவுகள் மற்றும் தீர்மானங்கள்:
  • தேசிய பெண் ஆசிரியர் பொது மன்றத்தின் (National Forum for Women Teachers) சார்பில் தேசிய அளவிலான மகளிர் மாநாடு ஜுலை மாதம் தமிழகத்தில் நடத்துவது. அதற்கு முன்னர் ஜுன் மாதத்திற்குள் அனைத்து மாநிலங்களிலும் மாநில பெண் ஆசிரியர் மாநாடுகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  • இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 7ஆவது தேசிய மாநாடு 2018 மே 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில், ஒரிசா மாநிலம் பூரி மாநகரில் மிக சிறப்பாக நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6 சதவீதமும், மத்திய அரசின் பொது பட்ஜெட்டில் 10 சதவீதமும் பள்ளிக்கல்விக்காக நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். 
  • தனிநபர் வருமான வரி வரம்பினை ஐந்து இலட்சமாக உயர்த்திட வேண்டும்.
  • மேலும் 5 இலட்சம் ரூபாய் முதல் 8 இலட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்திற்கு 10சதவீத வரியும் 8முதல் 13 இலட்சம் ரூபாய் வரை 20சதவீத வரியும் ரூபாய் 13 இலட்சத்திற்கு மேல் 30 சதவிகித வரியும் விதிக்கும் வகையில் திருத்தம் செய்து அறிவித்திட வேண்டும்.
  • வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் பொதுவான கழிவாக (Standard Deduction) குறைந்தபட்சம் ஆண்டிற்கு ரூபாய் ஐம்பதாயிரம் என திருத்தியமைத்திட வேண்டும்.
  • வீட்டு வாடகைப்படி, மருத்து வப்படி, அகவிலைப்படி, மருத்துவ செலவினம் மீண்டும் பெறுதல் ஆகி யவை மேற்கொள்ளும் செல வினங்களுக்காக தரப்படும் படிகள் என்பதால், இவற்றை வருமானமாகக் கருதாமல் செலவினமாக கருத வேண்டும்.
  • 80சி பிரிவில் மேற்கொள்ளப்படும் சேமிப்பிற்கான கழிவுத்தொகை ரூபாய் மூன்று இலட்சமாக உயர்த்த வேண்டும்.
  • புதிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் நடைமுறைப் படுத்திட வேண்டும்.
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
.

தேர்வு பணியில் விலக்கு கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

பிளஸ் 2 தேர்வு பணியில் இருந்து விலக்கு கேட்டு சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆறு முதல் எட்டாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்குவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. இதையடுத்து தங்களுக்கு பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென, ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர். அறை கண்காணிப்பாளர் பணியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென, தேர்வுத்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் 6 முதல் 8 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்வு பணி வழங்கி நேற்றுமுன்தினம் இரவு உத்தரவிடப்பட்டது.

இதை கண்டித்து நேற்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் சங்கர் தலைமையில் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் நரசிம்மன், செயலாளர் தவமணிச்செல்வம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவர் ரோஸ், மாவட்டப் பொருளாளர் குமரேசன், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் இளங்கோ பங்கேற்றனர்.

இரண்டு மணி நேரம் தொடர்ந்து போராட்டம் நடந்தது. அவர்களிடம் மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) சகிதா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் பெண் ஆசிரியர்களுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டது. ஆண் ஆசிரியர்களில் விரும்புவோர் தேர்வு பணியில் பங்கேற்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட்டனர்.