31.7.12

1,063 இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு


பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில், 1,063 இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு உத்தரவுகளை பெற்றனர்.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர்களில், தகுதி வாய்ந்தவர்களுக்கு, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு, சென்னை, அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. இணை இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி (பணியாளர் தொகுதி) தலைமையில், தமிழ் அல்லாத இதர பாட ஆசிரியருக்கு கலந்தாய்வு நடந்தது.

கலந்தாய்வுக்கு, 1,281 பேர் அழைக்கப்பட்டனர். இவர்களில், 103 பேர், கலந்தாய்வுக்கு வரவில்லை. கலந்தாய்வுக்கு வந்தவர்களில், 115 பேர், பதவி உயர்வை மறுத்து விட்டனர். இறுதியில், 1,063 பேர், பதவி உயர்வு உத்தரவுகளை பெற்றனர். இதனை, இணை இயக்குனர் வழங்கினார்.

நன்றி:


29.7.12

இலவச பஸ் பாஸ் தாமதம் சி.இ.ஓ.,க்கள் மீது நடவடிக்கை

"மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடைப்பதில், காலதாமதம் ஏற்பட்டால், முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என பள்ளி கல்வி இயக்குனர் மணி எச்சரித்துள்ளார்.

ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 27 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு (2012-2013) பாஸ்கள் "ஸ்மார்ட் கார்ட்' ஆக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு முறையாக இல்லாததால், மாணவர் விபரங்கள், போட்டோக்களை பெற்று, அரசு போக்குவரத்து கழக அலுவலகங்களில் ஒப்படைத்து, பாஸ்களை பெறுவதில், தலைமை ஆசிரியர்கள் கால தாமதம் செய்வதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி திறந்து 2 மாதங்களாகியும் பஸ் பாஸ் கிடைக்கவில்லை. இந்நிலையில் பள்ளி கல்வி இயக்குனர் மணி உத்தவில் குறிப்பிட்டுள்ளதாவது:
பஸ் பாஸ்சுக்கு தகுதியுள்ள மாணவர்கள் எண்ணிக்கை, எவ்வளவு விண்ணப்பங்கள் போக்குவரத்து கழகத்தில் கொடுக்கப்பட்டுள்ளன, நிலுவை விண்ணப்பங்கள், காலதாமதத்திற்கு காரணம் போன்ற விபரங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும், ஆக.,6 முதல் பஸ் பாஸ் பெற்ற மாணவர்கள், பெறாத மாணவர்கள் குறித்த விபரங்களை, தினமும் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரிவிக்காவிடில், முதன்மை கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

பள்ளி வாகனங்களுக்கு புதிய விதிகளை வரையறுக்க, ஆறு பேர் கொண்ட அதிகாரிகள் குழு நியமனம்

பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்க புதிய விதிகளை வரையறுக்க, போக்குவரத்து இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில், ஆறு பேர் கொண்ட குழு ஒன்றை போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது.

சென்னை, தாம்பரம் அடுத்த முடிச்சூர் அருகில், கடந்த இரு தினங்களுக்கு முன், சீயோன் பள்ளி பேருந்திற்குள் இருந்த, ஓட்டை வழியாக இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி, 7, கீழே விழுந்தாள். அதில், பின் சக்கரத்தில் சிக்கி ஸ்ருதி சம்பவ இடத்திலேயே பலியானாள். இந்த சம்பவத்தில், பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டது.

ஐந்து பேர் கைது: இது தொடர்பாக, ஸ்ருதி படித்த பள்ளியின் தாளாளர் விஜயன், பஸ் ஓட்டுனர் சீமான், கான்ட்ராக்டர் யோகேஷ், கிளீனர் சண்முகம், அந்த பஸ்சிற்கு கடந்த 20 தினங்களுக்கு முன் தகுதிச் சான்று வழங்கிய, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பாக, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரனுடன், வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பட்டப்பச்சாமியும், "சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

ஐகோர்ட் உத்தரவு
: இது குறித்து, பத்திரிகைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில், ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய முதல் பெஞ்ச், தானே முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. கல்வித் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளை ஆஜராகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம், பள்ளி கல்விச் செயலர் சபீதா, போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவ் தலைமையில் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். முடிவில், "பள்ளி பேருந்துகளில் செல்லும் குழந்தைகளைப் பாதுகாக்க, வாகனங்களின் பராமரிப்பு, தகுதி குறித்து புதிதாக விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று வழங்க, தனிப்பிரிவை ஏற்படுத்த வேண்டும்; 15 நாட்களுக்குள் வரைவு விதிகளை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குழு அமைப்பு: இந்த உத்தரவைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறையின் சார்பில் பள்ளி பேருந்துகளுக்கு, புதிய விதிகளை வரையறுப்பதற்கான குழுவை அமைப்பது குறித்து, ஆலோசனை நடத்தப்பட்டது. முடிவில், போக்குவரத்துத் துறை விதிகள் பிரிவு இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவை அமைத்து, போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இக்குழுவில், போக்குவரத்து துணை கமிஷனர் (திருநெல்வேலி) பாலன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் (சென்னை கிழக்கு) பாஸ்கரன், மாநில போக்குவரத்துக் குழும உதவி செயலர் பாஸ்கரன், அதே குழுமத்தின் அலுவலர் லட்சுமிபதி, பூந்தமல்லி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் சம்பத்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


விரைவில் புதிய விதிகள்
: இணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான இந்த குழு, பள்ளி வாகனங்கள் விஷயத்தில் நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், புதிய விதிகளை உருவாக்குவர். இதில், பள்ளி வாகனங்களின் ஆயுட்காலம், ஓட்டுனர்கள் தகுதி, வாகனங்களின் பராமரிப்பு இவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், பள்ளிகளுக்கு தகுதிச்சான்று வழங்கும் விதிகள் தொடர்பாகவும் பிரதான மாற்றங்கள் இருக்கும் எனவும் போக்குவரத்துத் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

புதிய விதிகள் உருவாக்கப்பட்டு, விரைவில் போக்குவரத்து கமிஷனர் பிரபாகர் ராவிடம், இக்குழுவினர் அளிப்பர். அதன் பின்னர் அறிக்கையை அரசு பரிசீலிக்கும். பின்னர், வரைவு விதிகள், ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு, நீதிபதிகள் உத்தரவின் பேரில் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

நன்றி:

 

பள்ளிச் சீருடை போட்டிருக்கீங்களா? பஸ் கட்டணம் கிடையாது!

"இலவச கையடக்க பேருந்து பயண அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாற்று ஏற்படாக, மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலோ அல்லது பழைய பஸ்பாஸ் வைத்திருந்தாலோ, கட்டணம் வசூலிக்க வேண்டாம்" என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், பழைய முறை மாற்றப்பட்டு, சென்னை மாநகரில் வழங்கப்படுவது போன்று, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும், கையடக்கப் பேருந்து பயண அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த மாதம், 19ம் தேதி, 30 லட்சம் மாணவ, மாணவியருக்கு, முதல் முறையாக கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், மாணவர்களுக்கு பயண அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், தினமும் கட்டணம் செலுத்தி, பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புதிய முறையில் பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பள்ளி நிர்வாகம் வழங்குவதில் காலதாமதம் போன்ற காரணங்களால், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால், பேருந்து பயண அட்டை கிடைக்காததால், கிராமப்புற ஏழை மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். தினமும், 20 ரூபாய் வரை பேருந்துக்கு கட்டணம் செலுத்தி, பள்ளிகளுக்கு வந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக, பேருந்து பயண அட்டைக்கு பதில், சீருடை அணிந்து வந்தாலே, கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும் போது, "பேருந்து பயண அட்டை வழங்கும் வரை, பழைய பேருந்து பயண அட்டையைக் கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம்; அல்லது பள்ளி சீருடையுடன் வந்தால் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, அறிவுறுத்தி உள்ளோம். இதுகுறித்து, அந்த கழக அதிகாரிகள் நடத்துனர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர்,'' என்றனர்.

தாமதத்திற்கு காரணம் என்ன?
புதிய முறையில் வழங்கப்படும் பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் அனுப்பியுள்ளன. கடந்தாண்டு, இந்த விண்ணப்பத்திற்கு, 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்தாண்டு, விண்ணப்பத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை. கட்டணம் ஏதுமில்லாததால், பள்ளி நிர்வாகத்தினர், இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரும் பணியை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டியுள்ளனர். அதனால், மாணவர்களே தங்களுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பள்ளி நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.

மேலும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப் படாமலேயே பள்ளி நிர்வாகங்கள் சார்பில், பயண அட்டை வழங்கும் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் உள்ள விவரங்களின் படி, பயண அட்டைகள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பெரும்பாலான பயண அட்டையில் தவறான விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருப்பதை கண்ட மாணவர்கள், அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இது போன்ற காரணங்களாலேயே பயண அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என, போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.

புதிய முறையில் ஒரு பயண அட்டையை அச்சடிக்க, 10 ரூபாய் வரை செலவாகிறது. பள்ளி நிர்வாகங்கள் காட்டிய அலட்சியத்தால், பயண அட்டை வழங்குவதில் காலதாமதமும், கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளன எனவும் அவர்கள் கூறினர்.இப்பிரச்னை தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் பயண அட்டை பெறுவதில் உரிய முறையை பின்பற்ற வேண்டும் என, போக்குவரத்துத் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

நன்றி:

28.7.12

இரட்டை பட்டம் பெற்ற ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டாம் : பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

01-01-2012 நாளிட்ட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான இறுதி முன்னுரிமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ் / ஆங்கிலம் / அறிவியல் / கணிதம் / வரலாறு / புவியியல் போன்ற இளங்கலை பட்டங்களை ஒரே ஆண்டில் பயின்று (இரட்டைப்பட்டம் / கூடுதல் பட்டம்) பட்டம் பெற்ற ஆசிரியர்கள் சென்னை - 83 அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 30 & 31.07.2012 தேதிகளில் நடைபெறவுள்ள பதவி உயர்விற்கான கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவிக்கவும் அவர்களின் பெயர் பட்டியலை இயக்ககத்திற்கு மின்னஞ்சல் செய்யவும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர்  அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.
.

25.7.12

தேர்வு வாரியம் வெளியிட்ட தகுதித் தேர்வு "கீ" ஆன்சரில் பிழைகள்

‘ஆசிரியர் தகுதித் தேர்வுக்காக தேர்வு வாரியம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட "கீ" ஆன்சரில் தவறான விடைகள் உள்ளன’ என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் கடந்த 12ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வை நடத்தியது. சுமார் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகளை வெளியிடும் பணியில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையில் தேர்வுக்கான "கீ"ஆன்சர் நேற்று முன்தினம் இரவு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. கேள்வித்தாள்கள் 4 பிரிவுகளாக அச்சிட்டு வழங்கப்பட்டன. அதன் படி ஏ,பி,சி,டி என்று வகைப்படுத்தி அதற்கு கீழே விடைகளையும் குறிப்பிட்டுள்ளது. இதில் பல விடைகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

94வது பொருத்துக கேள்விக்கான விடை 'ஏ' என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. 8ம் வகுப்பு சமூக அறிவியல் (தமிழ்வழி) பாடப்புத்தகம் 28 மற்றும் 29ம் பக்கங்களில் இடம் பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில் மேற்கண்ட 94ம் கேள்விக்கான விடை 'சி' என்று வருகிறது.

பார்த்தலோமியா டயஸ் என்பவர் இந்தியாவின் முதல் போர்ச்சுக்கல் அரசு பிரதிநிதி என்று ஆசிரியர் தேர்வு வாரிய விடையின் அடிப்படையில் வருகிறது. ஆனால், பாடப்புத்தகத்தில், 'போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த பார்த்த லோமியா டயஸ் என்பவர் கிபி 1487ம் ஆண்டு முதன்முதலில் கடல் பயணத்தை மேற்கொண்டார். அவர் ஆப்ரிக்காவின் தென்கோடி முனையை வந்தடைந்தார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேகேள்வியில் இடம் பெறும் (சி) பிரான்சிஸ் டிஅல்மெய்டா என்பவர் இந்தியாவின் இரண்டாவது போர்ச்சுக்கல் அரசு பிரதிநிதி என்றும், அல்போன்சே டி அல்புகர்க் தென் ஆப்ரிக்காவின் தென்முனையை அடைந்தவர் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய விடை கூறுகிறது. ஆனால் பாடப்புத்தகத்தில் பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா என்பவர் போர்ச்சுக்கல் நாட்டு வாணிபத்தை கவனிக்க முதல் ஆளுநராக இந்தியாவில் நியமிக்கப்பட்டார் என்றும், இரண்டாவது ஆளுநர் அல்போன்சே டிஅல்புகர்க் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல தமிழ்(தாள்&2) மொழி கேள்விகளில் 45வது கேள்வியில் கம்ப நாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்கு கூறப்படும் கணக்கீடு குறித்து கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி தொடர்பான பதில்கள் 6, 7, 8 பாடப்புத்தங்களிலேயே இல்லை. இது வெளியில் இருந்து கேட்கப்பட்ட கேள்வி.

கேள்வி எண்& 38ல் 'திரைக்கவித் திலகம் என்ற சிறப்பை பெற்றவர்' என்று கேட்டு, குருவிக்கரம்பை சண்முகம், மருதகாசி, வாலி, புலமைப்பித்தன் என்று நான்கு விடைகள் வாய்ப்பாக அளிக்கப்பட்டு இருந்தன. இதற்கான விடை 7ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் உள்ளது. அதில் திரைக்கவித் திலகம் என்ற சிறப்பு பெற்றவர் மருதகாசி என்று பக்கம் 87ல் உள்ளது. ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள விடையில் மேற்கண்ட கேள்விக்கு விடை, 'குருவிக்கரம்பை சண்முகம்’ என்று கொடுத்துள்ளனர்.

இதுபோல பல்வேறு பிழைகள், குழப்பங்கள், அவுட் ஆப் சிலபஸ் காரணமாக இதனால் பட்டதாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

‘பிழைகள் குறித்து தேர்வு எழுதியவர்கள் 30ம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை ஆதாரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தெரிவித்தால் அது குறித்து வல்லுநர் குழு அமைத்து ஆய்வு செய்யப்படும்’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

‘ஆசிரியர்களின் அறிவை பரிசோதிக்க நடத்தப்படுகிறது என்று கூறும் தேர்வுக்கான கேள்வித்தாளையே சரியாக தயாரிக்க தகுதியான நபர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் நியமிக்கவில்லையா?’ என்று பட்டதாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நன்றி:

 

24.7.12

எஸ்.எஸ்.ஏ. கல்வி திட்டத்தில் பல லட்சம் சுருட்டல்?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் நடந்த பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி முகாமிற்கு ஒதுக்கப்பட்ட நிதியில், முறைகேடு நடந்துள்ளதால், இதுகுறித்து விசாரிக்க தனி குழுவை கலெக்டர் அமைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், வட்டார வளமையங்கள் மூலம் துவக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு, கடந்த மார்ச் மாதம் பள்ளி மேலாண்மை பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அதே போல், ஒவ்வொரு ஒன்றியத்திலும், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான பகல் நேர சிறப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடந்தது.மூன்று நாள் பயிற்சி இந்த இரு பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு, மாவட்டம் முழுவதும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பில், பயிற்சி பெற்ற உறுப்பினர்கள், மூன்று நாள், குறுவள மையத்தில் தங்கி பயிற்சி பெற வேண்டும். ஆனால், எந்த உறுப்பினர்களும் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெறவில்லை. பலர் பயிற்சி வகுப்பிற்கு வரவே இல்லை.

பயிற்சி பெறும் ஒவ்வொரு உறுப்பினருக்கும் காலை சிற்றுண்டிக்கு 25 ரூபாயும், மதியம் சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், இரவு சாப்பாட்டிற்கு 40 ரூபாயும், காலை மற்றும் மாலையில் தேநீர் மற்றும் நொறுக்குத்தீனிக்காக 40 ரூபாயும் நிதி ஒதுக்கப்பட்டது. விதிகள் மீறல் மேலும், பயிற்சி வகுப்பில் ஜெனரேட்டர் வசதி, சாமியானா, ஒலிபெருக்கி உள்ளிட்ட ஏற்பாடு செய்வதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது.

அதே போல், பள்ளி செல்லா குழந்தைகளுக்கு நடந்த வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பிற்கும் ஒரு குழந்தைக்கு, 100 ரூபாய் வீதம் நான்கு நாள் பயிற்சி முகாமிற்கு, தலா 400 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டது. பயிற்சி முடித்த இந்த குழந்தைகளை, அவரவர் வயதிற்கு தகுந்தாற்போல், பள்ளிகளில் சேர்க்க வேண்டும். தொடர்ந்து ஒரு ஆண்டு, இந்த குழந்தைகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் கண்காணிக்க வேண்டும்.

ஆனால், அனைவருக்கும் கல்வி திட்ட உதவி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், இந்த இரு பயிற்சி முகாம்களுடைய விதிமுறையை பின்பற்றவில்லை. முறைகேடு புகார் இதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஒதுக்கீடு செய்த நிதியில், 60 சதவீதம் பணத்தை அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகள் கூட்டணி அமைத்து முறைகேடு செய்தனர்.

அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி முகாம் செலவினங்களை மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பெயர்களில் வங்கியில் இணைப்பு கணக்கு உள்ளது.

ஓசூர் அருகே தளி ஒன்றியத்தில் நடந்த, பள்ளி மேலாண்மை குழு பயிற்சி வகுப்பு, வாழ்வியல் திறன் பயிற்சி வகுப்பு நடத்தியதில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. கலெக்டர் மகேஷ்வரன், முறைகேட்டை விசாரிக்க தனிக்குழு அமைத்துள்ளதால், அதிகாரிகள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.

நன்றி:

 

மாணவரை துன்புறுத்தினால் நடவடிக்கை: பள்ளிக் கல்விச் செயலர் சபிதா கடும் எச்சரிக்கை

"மாணவருக்கு, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ ஆசிரியர் தண்டனை அளிக்கக் கூடாது. மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா எச்சரித்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில், தனியார் பள்ளி மாணவர் ஒருவரை சிறுநீர் குடிக்கச் சொல்லி, அடித்து, துன்புறுத்திய ஆசிரியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிறுநீர் கழிக்க ஆசிரியர் அனுமதிக்காத நிலையில், வகுப்பிலேயே மாணவர் சிறுநீர் கழித்தார். இதனால், ஆசிரியர் கொதிப்படைந்து, மாணவரை நையப் புடைத்தனர். இந்த விவகாரம், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல தனியார் பள்ளிகளில், சிறிய மாணவ, மாணவியரைக் கூட, வகுப்பு நேரத்தில் சிறுநீர் கழிக்க, ஆசிரியர் அனுமதிக்காத கொடூரம் நடக்கிறது. சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்தால், நாளடைவில் பெரிய பிரச்னையை ஏற்படுத்தும்.

இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதாவிடம் கேட்டபோது, "மாணவருக்கு, உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தண்டனை அளிக்கக் கூடாது. அப்படியிருந்தும், சில தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன. இதை ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தவிர்க்க வேண்டும். மீறினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

நன்றி:

 

மருத்துவ காப்பீடு "பிரீமியம்' தொகை அதிகரிப்பு: அரசு ஊழியர்கள் அதிருப்தி

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியத் தொகை, திடீரென ஆறு மடங்கு அதிகரிக்கப் பட்டு உள்ளது. இது, அரசு ஊழியர்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும், மருத்துவ காப்பீட்டுக்காக, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகை, சம்பளத்தில் பிடித்தம் செய்யப் படுகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியின்போது, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனம் மூலம், காப்பீடு செய்யப் பட்டு இருந்தது.காப்பீட்டு தொகைஇதற்காக, மாதம்தோறும், சம்பளத்தில் 25 ரூபாய் பிடித்தம் செய்யப் பட்டது. இதன்மூலம், ஒரு லட்சம் ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப் பட்டது.

தற்போது, அரசு ஊழியர்களுக்கான மருத்துவ இன்சூரன்ஸ் செய்ய, பல்வேறு நிறுவனங்களில் மாநில அரசு டெண்டர் கோரியது.அதன் அடிப்படையில், "யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ்' நிறுவனத்துக்கு, அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. காப்பீட்டுத் தொகை, இரண்டு முதல், நான்கு லட்சம் ரூபாய் என, உயர்த்தப் பட்டு உள் ளது.

கூடுதல் சிகிச்சை
:முந்தைய காப்பீட்டு நடைமுறைகளிலிருந்து, கூடுதலாக சிகிச்சை மற்றும் கூடுதலாக புதிய மருத்துவமனைகள், இந்தத் திட்டத்தில் சேர்க்கப் பட்டு உள்ளன. அந்த வகையில், 54 வகையான நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சையும்; ஏழு வகையான அறுவை சிகிச்சைகளும் மேற்கொள் ளலாம்.

மாத பிரீமியம்: மாத பிரீமியம், 150 ரூபாயாக உயர்த்தப் பட்டு உள்ளது. ஜூலை 2012 முதல், ஜூன் 2016ம் ஆண்டு வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு, பாலிசி அமலில் இருக்கும். இதற்காக, இந்த மாதம் முதல், அரசு ஊழியர் சம்பளத்தில், 150 ரூபாய் கட்டாயம் பிடித்தம் செய்யவும், அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, அனைத்து துறை அலுவலகங்களுக்கும் அனுப்பப் பட்டு உள்ளது. அரசின் இந்த உத்தரவு, அரசு ஊழியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஆறு மடங்கு
: அரசு ஊழியர்கள் கூறியதாவது: காப்பீட்டுத் தொகை, இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கேற்ப பிரீமியத் தொகை, 25ல் இருந்து, 50 அல்லது 75 ரூபாயாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், அதை ஆறு மடங்கு உயர்த்தி உள்ளனர்.தற்போது பிடித்தம் செய்யும் 150 ரூபாயிலும், குறிப்பிட்ட தொகையை அரசு பிடித்தம் செய்து கொண்டு தான், காப்பீட்டு நிறுவனத்துக்கு செலுத்த உள்ளது. புதிய மருத்துவமனை, கூடுதல் சிகிச்சை என்றெல்லாம் காரணம் தெரிவித்தாலும், அதிகபட்சமாக, 50 சதவீதம் பேர் கூட, பயன் பெறுவதில்லை.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நன்றி:

 

21.7.12

பதவி உயர்வுக்கு முன்பே மாறுதல் கலந்தாய்வு: இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சலிங் வரும் 30ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு முன்பே 23ம் தேதி பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிக் கல்வித் துறையில் 6, 7, 8ம் வகுப்புகளில் மட்டுமே இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த வகுப்புகளுக்கு புதிதாக இடைநிலை ஆசிரியர் பணியிடம் என்பது கிடையாது. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றாலோ, பதவி உயர்வு பெற்றாலோ மட்டுமே காலியிடம் உருவாகும் நிலை உள்ளது. தற்போது பணி நிரவலுக்காக பல இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலையில் பல மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது.

வரும் 30, 31ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கவுன்சலிங் நடக்கிறது. எனவே அதற்கு பின்னரே இடைநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் தமிழக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணி மேலாண்மை) ராஜராஜேஸ்வரியிடம் கடந்த 11ம் தேதி கோரிக்கை விடுத்தது. அவரும் பதவி உயர்வுக்கு பின்னர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்துவதாக கூறியிருந்தார். இதனால் ஆகஸ்ட் முதல் வாரம் தான் இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் வரும் 23ம் தேதி நடக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வின் போதே இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. காலியிடங்கள் இல்லாத நிலையில் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது இடைநிலை ஆசிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், "இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற பின்னர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் காலியிடங்கள் உருவாகும். ஆனால் பதவி உயர்வுக்கு முன்பே பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பள்ளிக் கல்வித் துறை மறு பரிசீலனை செய்ய வேண்டும்" என்றார்.

நன்றி:

2648 இடைநிலைஆசிரியர் / சிறப்பாசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கவுன்சலிங் சென்னையில் 30ம் தேதி நடைபெறும்

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் 2648 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் கவுன்சலிங் சென்னையில் 30ம் தேதி தொடங்குகிறது.

பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கு மாறுதல் வழங்கப்பட உள்ளது. இதற்கான கவுன்சலிங் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நடத்தப்படும்.

இது தவிர வட்டார வள மையங்களில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு பட்டதாரி ஆசிரியராக ப ணி மாறுதல் வழங்கப்படுகிறது. 25 உடற்கல்வி இயக்குநர்களுக்கு (நிலை&2) பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கான கவுன்சலிங் 27ம் தேதி சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது.

இடைநிலைஆசிரியர் / சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் கவுன்சலிங் 30ம் தேதி நடக்கிறது. அதில் பட்டதாரி ஆசிரியர்கள்(தமிழ்) 1191 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இதர பாடங்களை பொறுத்தவரை ஆங்கில ஆசிரியர்கள் 227, கணக்கு ஆசிரியர்கள் 224, அறிவியல் ஆசிரியர்கள் 65 பேர், சமூக அறிவியல் ஆசிரியர்கள் 416 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.

இவற்றுக்கான கவுன்சலிங்கும் சென்னை அசோக் நகர் பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடக்கிறது.

நன்றி:

 

மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான ஊதியம் இல்லை: ஊதிய முரண்பாட்டில் தவிக்கும் இடைநிலை ஆசிரியர்கள்

மத்திய அரசு ஆசிரியர்களு க்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இடை நிலை ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தொடக்க பள்ளிகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரம் ஆசிரியர்களும், நடுநிலை பள்ளிகளில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் என்று மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 44 ஆயிரத்து 905 பேர் ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர்களாக உள்ளனர். 9969 பேர் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள். சுமார் 65 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். இதர 91 ஆயிரத்து 36 பேர் இடைநிலை ஆசிரியர்களாக உள்ளனர். இவர்களில் சாதாரண நிலையில் 30 ஆயிரம் பேரும், சிறப்பு நிலையில் 21 ஆயிரத்து 36 பேரும் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அரசாணை 234ன்படி 6 வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. பின்னர் ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட ஒருநபர் குழு அமைக்கப்பட்டது. அதில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகள் களையப்படவில்லை.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 6 வது ஊதியக்குழுவில் இடை நிலை ஆசிரியர் சாதாரண ஊதிய விகிதம் 9300-34800 மற்றும் தர ஊதியம் ரூ.4200 என வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு 5200-20200 மற்றும் தர ஊதியம் ரூ.2800 என வழங்கியுள்ளது. இதில் தேர்வு நிலையில் மத்திய அரசில் தர ஊதியம் ரூ.4600 ஆக உள்ளது. தமிழகத்தில் ரூ.4300 ஆக உள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் சிறப்பு நிலை ஊதியத்தில் தர ஊதியம் ரூ.4800 ஆக உள்ளது. தமிழக அரசு ரூ.4500 வழங்குகிறது.


மத்திய அரசில் 10 முதல் 20 ஆண்டு வரை ஒரே பணியில் பணி செய்யும் ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை என தனி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழ் நாடு அரசு 1.1.2006 முன்பு தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே அதற்குரிய ஊதிய விகிதம் வழங்கி வருகிறது. 1.1.2006க்கு பின்பு 31.5.2009 வரை தேர்வு நிலை, சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு மட்டுமே நிலுவை தொகை வழங்காமல் விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் விகி தம் வழங்கப்பட்டு வருகிறது.

இதனை போன்று வீட்டு வாடகைப்படி, மருத்துவப் படி, பயணப்படி, கல்விப்படி ஆகியன உரிய முறையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டும் எழுந்துள் ளது.

இது தொடர்பாக தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்க குமரி மாவட்ட செயலாளர் எட்வின் பிரகாஷ் கூறியதாவது:
2012&13ம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவு அறிக்கையில் ஊழியர்களின் ஊதிய முரண்பாடு களைய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தலைவர் கிருஷ்ணன், உமாபதி, சாந்தி ஆகியோரை சென்னையில் சந்தித்து எங்களது சங்கம் சார்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.

தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய விகிதங்கள் 31.5.2009 வரை என்பதை மாற்றி தொடர்ந்து ஊதிய விகிதங்களின் அடிப்படையில் தேர்வு நிலை, சிறப்பு நிலை வழங்கிட வேண்டும். மத்திய அரசு வழங்கியுள்ள வீட்டு வாடகைப்படி உட்பட அனைத்து படிகளையும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

 

17.7.12

இணையதளம் மூலம் மாணவர் உதவித்தொகை

பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இணையதளம் மூலம் இந்தாண்டு உதவி தொகை வழங்கப்படும்.

அரசு, உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமலும், குடும்பத்தில் எவரும் பட்டதாரி இல்லை என்ற சான்றிதழும் தர வேண்டும். அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை ரூ.200ம், 9 மற்றும் 10ம் வகுப்பு வரை ரூ.250 ம், 11 மற்றும் பிளஸ் 2 வகுப்பிற்கு ரூ.500ம் உதவித்தொகை வழங்கப்படும். இலவச கல்வி பெறுபவர்களுக்கு அனைத்து கட்டணங்களும் விலக்கு அளிக்கப்படும். மருத்துவம், பொறியியல், சட்டம், வேளாண்மை, கால்நடை, மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிடமிருந்து பெறலாம். புதுப்பித்தல் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 31க்குள்ளும், புதிய உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஆக.,31க்குள்ளும் தர வேண்டும். கல்வி உதவித்தொகை இணையதளம் மூலம் வழங்கப்படும். கூடுதல் விபரங்களை மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலரிடம் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி:

 

கட்டணம் செலுத்தி மாணவர்கள் பேருந்தில் செல்லும் அவலம்: இலவச பயண அட்டை தர தாமதம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் இலவச பயண அட்டை இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலைக்கு, அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அறிவிப்பு: சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில், அனைத்து மாணவர்களுக்கும், கட்டணமில்லா கையடக்கப் பேருந்து பயண அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படுகிறது. இதேபோன்று, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி, 30 லட்சம் மாணவ, மாணவியருக்கு, முதல் முறையாக கட்டணமில்லா கையடக்கப் பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார்.

பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், மாணவர்களுக்கு பயண அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், தினமும் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகளில், கையடக்கப் பேருந்து பயண அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணியே, இன்னும் துவக்கப்படவில்லை. பயண அட்டை கிடைக்காததால், தொலை தூரத்தில் இருந்து பள்ளி செல்லும் மாணவர்கள், தினமும், 20 ரூபாய் வரை கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

தாமதம்: இதுகுறித்து, அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறும்போது, ""பேருந்து பயண அட்டைக்கான புகைப்படம் எடுக்க, குறிப்பிட்ட தேதியை அறிவிக்கின்றனர். ஆனால், அந்த தேதியன்று புகைப்படம் எடுப்பவர்கள் வருவதில்லை. இதனால், தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.

32 லட்சம் அட்டைகள்: பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கடந்த கல்வியாண்டில், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம், 31.98 லட்சம் கட்டணமில்லா மற்றும் சலுகைக் கட்டணப் பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டன. சென்னையில், கடந்தாண்டு, 3.47 லட்சம் மாணவர்கள், இதனால் பயனடைந்தனர். இந்தாண்டு, 3.60 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு, பயண அட்டை வழங்க உத்தேசித்துள்ளதாக, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:

 

குடந்தை பள்ளி "தீ' விபத்து நினைவு தினம்: பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த, 94 குழந்தைகளின் எட்டாம் ஆண்டு நினைவு தினமான நேற்று, குழந்தைகளை இழந்த பெற்றோர், உறவினர்கள், அரசியல் கட்சியினர், பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த, 2004ம் ஆண்டு ஜூலை, 16ம்தேதி கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த, ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில், 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனர். இத்தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின், எட்டாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர் சார்பில், நினைவஞ்சலி கூட்டம் நடந்தது. தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் போர்டு, பள்ளி முன் வைக்கப்பட்டிருந்தது. அந்த டிஜிட்டல் போர்டு, குழந்தைகளை இழந்த பெற்றோர் சங்கம் சார்பில், மலர்கள் அலங்கரிக்கப்பட்டது. படத்தின் முன் மலர் வளையம் வைத்து, பெற்றோரும், உறவினர்களும் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை, ஏராளமான மாணவர்கள் பள்ளி செல்வதற்கு முன், தீயில் கருகி இறந்த குழந்தைகளுக்கு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக, குழந்தைகளை இழந்த பெற்றோர் அவரவர் வீட்டில், குழந்தைகளுக்கு பிடித்த தின்பண்டங்களையும், புத்தாடைகளையும், குழந்தைகளின் போட்டோ முன் வைத்தும், கல்லறைகளிலும் படையல் செய்தனர். தொடர்ந்து, குழந்தைகளை இழந்த பெற்றோர், பள்ளியிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்திற்கு சென்று, அங்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நேற்று காலை முதல், மாலை வரை தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை, 6 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு மடத்துதெரு, காந்திபூங்கா வழியாக மகாமக குளத்திற்கு அகல் தீபம் ஏந்தி வந்து குளத்தில் மோட்சதீபம் ஏற்றினர்.

நன்றி:

 

ஊதிய முரண்பாடுகளை களைதல் குழு ஆயுட்காலம் மேலும் மூன்று மாதம் நீட்டிப்பு

ஊதிய முரண்பாடுகளை களைதல் குழுவின்  ஆயுட்காலம்  மேலும் மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணனை தலைவராகக் கொண்டு உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணை செயலாளர் உமாநாத் ஆகிய மூவரை கொண்ட குழு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டது. தற்போது இக்குழுவின் ஆயுட்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 அரசு கூடுதல் செயலாளர் பத்மநாபன் ஒய்வு பெறுவதால் திருமதி சாந்தி புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.


.

அனைத்து வகை அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம் மற்றும் விதிகள்: வல்லுநர் குழு (Expert Committee) அமைத்தல் - அரசாணை

அனைத்து வகை அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான பொதுவான சட்டம் மற்றும் விதிகளை வகுப்பதற்கு ஆலோசனை வழங்க வல்லுநர் குழு (Expert Committee) அமைத்து தமிழக அரசு ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை எண்: 258 நாள்: 04 - 07 - 2012
.

பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் கலந்தாய்வு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் தொடக்க கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதம் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கலந்தாய்விற்கான விண்ணப்பங்கள் கடந்த மே மாதம் பெறப்பட்டது. பின்னர் விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது முதுநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு ஆகியவை முடிந்துள்ளது. தொடக்க கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் முடிந்தது. பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 23, 24ம் தேதிகளில் நடக்கும் நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது.

பள்ளிக் கல்வித் துறையை பொறுத்தவரை தற்போது 6, 7, 8ம் வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர் புதிய நியமனம் கிடையாது. பட்டதாரி ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே 6, 7, 8 வகுப்புகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களே தற்போது பணியிட மாறுதல் கலந்தாய்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கடந்த 31.05.2012 நிலவரப்படி காலியாக இருந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்காக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களாக மாற்றப்பட்டன.

இதனால் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலவரப்படி இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இல்லாத நிலை உள்ளது. எனவே வரும் ஜூலை 30ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வின் போது ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலியிடங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுகுறித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் இசக்கியப்பன் கூறுகையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் தற்போதைய நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் காலியிடங்கள் எதுவும் இல்லாத நிலையில் பதவி உயர்வால் ஏற்படும் காலியிடங்களின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டுமென்று பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (பணியாளர் நலன்) ராஜ ராஜேஸ்வரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவுடன் ஏற்படும் காலியிடங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நன்றி:

15.7.12

இன்று "படிக்காத மேதை" காமராஜரின் 109வது பிறந்த நாள்


இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த தினம். இவரது காலத்தில் தான், கல்வியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றது.

காமராஜர், விருதுநகரில் 1903ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் குமாரசாமி நாடார், சிவகாமி அம்மாள். காமராஜருக்கு ஆறு வயது இருக்கும் போது தந்தை காலமானார். இதனால் பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்போடு முடித்தார். தாயின் அரவணைப்பில் வளர்ந்த அவருக்கு, சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் ஏற்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர்: 16வது வயதில் காங்கிரசில் சேர்ந்தார். ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்து, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். 1930ம் ஆண்டு வேதாரண்யத்தில், ராஜாஜியின் தலைமையில் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டார். கோல்கட்டா, அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டதால், தமிழக சிறைகளிலும் இருந்தார். சிறை வாழ்க்கையின் போது, சுயமாக புத்தகங்களை படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்.

அரசியல் வாழ்க்கை: சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த பேச்சாளருமான சத்தியமூர்த்தியை, அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். 1936ம் ஆண்டு சத்தியமூர்த்தி, காமராஜரை காங்., கட்சியின் செயலளராக நியமித்தார். 1940ம் ஆண்டு சிறையிலிருக்கும் போதே, விருதுநகர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-52 வரை சென்னை மாகாண காங்., தலைவராக இருந்தார். 1953ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றார். அவர் முதல்வராக இருந்த காலத்தில், மதிய உணவுத்திட்டம், நீர்பாசன திட்டங்கள், தொழிற்துறை திட்டங்கள் ஆகியவற்றை நிறைவேற்றினார். மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட காமராஜர், 9 ஆண்டுகள் பதவி வகித்தார்.

“கே-பிளான்”: அகில இந்திய காங்கிரசிற்கு தலைமை வகித்த காமராஜர், பதவியை விட மக்கள் பணியும், கட்சிப் பணியுமே முக்கியம் என கருதி ஒரு திட்டத்தை வெளியிட்டார். இதன்படி கட்சியில் இளைஞர்களுக்கு பதவியை அளித்து விட்டு, மூத்த தலைவர்கள் கட்சி பணி மட்டுமே ஆற்றுவது என தெரிவித்தார். 1963ம் ஆண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கட்சிப்பணியாற்ற முன் வந்தார். நேருவின் மறைவுக்குப் பிறகு, லால் பகதூர் சாஸ்திரியை பிரதமராக காமராஜர் முன்மொழிந்தார். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். சாஸ்திரியின் திடீர் மரணத்துக்குப் பிறகு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இவரது முயற்சியால் இந்திரா பிரதமராக்கப்பட்டார்.

மறைவு: 1975ம் ஆண்டு அக்.2ம் தேதி மகாத்மா காந்தி பிறந்த தினத்தில், காமராஜரின் உயிர் உறக்கத்திலேயே பிரிந்தது. அவரது இறப்பின் போது பையில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்தது. வங்கிக் கணக்கோ, சொத்தோ அவர் பெயரில் இல்லை. இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

இவரது மறைவுக்குபின் 1976ம் ஆண்டு இந்திய நாட்டின் மிக உயரிய "பாரத ரத்னா' விருது காமராஜருக்கு வழங்கப்பட்டது. புனிதமான, எளிமையான வாழ்க்கையை வாழ்ந்த காமராஜருக்கு மக்கள், படிக்காத மேதை, ஏழைப்பங்காளன், கர்ம வீரர், தென்னாட்டு காந்தி, கிங் மேக்கர், பெருந்தலைவர் என்ற பட்டங்களை சூட்டி அவரை போற்றி வருகின்றனர்.
.

காந்திக்கு தேசப்பிதா பட்டம் மத்திய அரசு வழங்கவில்லை

மகாத்மா காந்திக்கு, தேசப்பிதா என்ற பட்டத்தை, மத்திய அரசு ஒருபோதும் வழங்கவில்லை என, உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மகாத்மா காந்தி தேசப்பிதாவாக அறிவிக்கப்பட்டது தொடர்பான விவரங்களை தரும்படி, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், சமூக ஆர்வலர் அபிஷேத் கத்யான் என்பவர், உள்துறை அமைச்சகத்திடம், மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு, மத்திய பொது தகவல் அதிகாரி, கடந்த மாதம் அளித்த பதிலில், " மகாத்மா காந்தியை தேசப்பிதாவாக பொதுமக்கள் அழைத்தாலும், அதுபோன்ற ஒரு பட்டத்தை, மத்திய அரசு ஒரு போதும் வழங்கவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், லக்னோவைச் சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பராஷர், "மகாத்மா காந்தி, தேசப்பிதாவாக அறிவிக்கப்பட்டது தொடர்பான உத்தரவின் நகலைத் தர வேண்டும்' என கோரியிருந்தார். இதற்கு பதில் அளித்த அமைச்சகம், அது போன்ற குறிப்பிடத்தக்க ஆவணம் எதுவும், தங்களிடம் இல்லை என பதில் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் - டி.ஆர்.பி

டி.இ.டி., தேர்வு எழுதியவர்களில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என எதிர்பார்ப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

டி.இ.டி., (ஆசிரியர் தகுதித் தேர்வு) முதல் மற்றும் இரண்டாம் தாள்தேர்வு, நேற்று முன்தினம் நடந்தது. 6.56 லட்சம் பேர், இத்தேர்வைஎழுதினர். இரு தாள் தேர்வுகளுமே கடினமாக இருந்ததாகவும்,நேரமின்மை பெரிய பிரச்னையாக இருந்தது எனவும், தேர்வர்புகாராகத்தெரிவித்தனர்.

டி.இ.டி., தேர்வு கேள்வித்தாள், தமிழகம் மட்டுமல்லாமல், ஏற்கனவேதேர்வு நடந்த கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறுமாநிலங்களிலும், கடினமாகவே அமைந்துள்ளது.சி.பி.எஸ்.இ.,தேசிய அளவில் நடத்திய தகுதித் தேர்வில், தேர்ச்சி சராசரி வெறும் 6சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டி.ஆர்.பி.,நடத்திய தேர்வு, பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

"திறமையானவர் கிடைப்பார்''
:
இதுகுறித்து, டி.ஆர்.பி.,வட்டாரம் கூறியதாவது: கேள்வித்தாள் அமைக்கும் பணியில், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களைச் சேர்ந்த பாட வல்லுனர்களும் இடம் பெற்றனர். என்.சி.டி.இ., கூறியுள்ள விதிமுறை மற்றும் வழிகாட்டுதல் அடிப்படையில் தான், கேள்வித்தாள் தயாரிக்கப் பட்டன. டி.இ.டி., தேர்வில், 10 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுவர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றாலே, அது பெரிய விஷயம். இந்த 10 சதவீதம் பேரும், நல்ல திறமை உள்ளவர்களாக இருப்பர் என்பதுமட்டும் உறுதி.

"கீ-ஆன்சர்'' எப்போது?
மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள்கள் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை, "ஸ்கேன்'' செய்து, அதன்பின் மதிப்பீட்டு பணிகளை செய்ய வேண்டும். இரு வாரங்களில், இணையதளத்தில், "கீ-ஆன்சர்'' வெளியிடப் படும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பத்து சதவீத தேர்ச்சி எனில், 65,600 பேர் தேர்ச்சி பட்டியலில் இடம் பிடிப்பர். டி.ஆர்.பி., இப்படிதெரிவித்தாலும், 5 சதவீதம் வரை தான் தேர்ச்சி இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வராதவர்கள் எண்ணிக்கை:
முதல் தாள் தேர்வு எழுதியவர்களில், 7 சதவீதம் பேரும், இரண்டாம் தாள்எழுதியவர்களில், 8 சதவீதம் பேரும்,"ஆப்சென்ட்'' ஆனதாக, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அதன்படி, முதல்தாள் தேர்வில், 17,287 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 28,054 பேரும், "ஆப்சென்ட்'' ஆகி உள்ளனர்.

நன்றி:

 

விண்ணப்பதாரர் ரோல் நம்பர், பெயர் தெரிவித்தால் தேர்வு எழுதலாம்:ஆசிரியர் தேர்வு வாரிய உதவி இயக்குனர்

"ஜூலை 12ம் தேதி நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பதாரர் ரோல் நம்பர், பெயர் தெரிவித்து தேர்வு எழுதலாம்,'' என, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் சேதுராமவர்மா தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: ஜூலை 12ல் நடக்கும் டி.இ.டி., தேர்வு தொடர்பாக அனைத்து மாவட்டங்களிலும் சி.இ.ஓ., டி.இ.ஓ., மற்றும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன. கேள்வித்தாள் மற்றும் ஓ.எம்.ஆர்., ஷீட்டுகள் ஒவ்வொரு மையத்திலும் 10 சதவீதம் அதிகமாக வைத்திருக்க உத்தரவிடப்பட்டது.

பல விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. டி.ஆர்.பி., சார்பில் அனைவருக்கும் ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பிடம் ஒரு இடத்திலும், விண்ணப்பத்தில் வேறு முகவரி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஹால்டிக்கெட் கிடைத்திருக்காது. இது ஒரு பிரச்னை இல்லை. விண்ணப்பதாரர் ரோல் நம்பர், பெயர் தெரிவித்தாலே அதை தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர் சரிபார்த்து தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

தவறாக விண்ணப்பித்தவர் கவனத்துக்கு... பெயர், முகவரி உட்பட விண்ணப்பத்தில் தவறாக நிரப்பிய ஒரு லட்சம் விண்ணப்பங்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஏற்கப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பதாரர்கள் முன்னதாக தேர்வு மையத்துக்கு சென்று சரியான பெயர், முகவரி, பிறந்த தேதிக்கான உரிய கல்வி சான்றிதழை காண்பித்து ஓ.எம்.ஆர்., ஷீட்டில் சரியாக நிரப்பி தேர்வு எழுத அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரை தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்வில் எவ்வித தவறும் நடந்துவிடாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மதுரை, தேனி மாவட்ட டி.இ.ஓ.,க்கள், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சந்தேகங்களுக்கு இணை இயக்குனர் பதில் அளித்தார். மதுரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுபாஷினி, உசிலம்பட்டி டி.இ.ஓ., சாந்தமூர்த்தி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் ஞானகவுரி பங்கேற்றனர்.

நன்றி:

 

நாளை டி.இ.டி., தேர்வு: 6.5 லட்சம் பேர் பங்கேற்பு:1,027 மையங்களில் நடத்த தயார்

தமிழக அரசு நடத்தும், முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு, நாளை 12ம் தேதி நடக்கிறது. இதில், 6.5 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 1,027 மையங்களில், தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு வீச்சில் முடிக்கப் பட்டு, தயார் நிலையில் உள்ளதாக, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வு, 12ம் தேதி (நாளை) நடக்கிறது. காலையில், முதல் தாள் தேர்வும் (இடைநிலை ஆசிரியர்), பிற்பகலில் இரண்டாம் தாள் தேர்வும் (பட்டதாரி ஆசிரியர்) நடக்கிறது. இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தின் படி, இரு தேர்வுகளுமே, தலா 150 மதிப்பெண்களுக்கு நடக்கும்.

இத்தேர்வை, 1.81 லட்சம் ஆண்கள் மற்றும் 4.74 லட்சம் பெண்கள் என, 6.5 லட்சம் பேர் எழுதுகின்றனர். 1,027 மையங்களில் தேர்வுகள் நடக்கின்றன. பணிபுரியும் ஆசிரியர்களும் தேர்வில் பங்கேற்கும் வகையில், 12ம் தேதி, அனைத்துப் பள்ளிகளுக்கும், தமிழக அரசு விடுமுறை அறிவித்து உள்ளது.ரூ.3.61 கோடி செலவு:தேர்வுப் பணியில், 55,339 பேர் ஈடுபடுகின்றனர். 3.61 கோடி ரூபாய் செலவில், இத்தேர்வு நடத்தப்படுகிறது. எட்டு லட்சம் விடைத்தாள்கள் அச்சடிக்கப் பட்டு உள்ளன.விண்ணப்பத்தில், மொழித்தாள் பாடத்தை தவறாக குறிப்பிட்டவர்கள், விடைத்தாளில் சரியான மொழிப் பாடத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.பெயரில் பிழை இருந்தால், சம்பந்தபட்ட தேர்வர், தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளரை அணுகி, விவரத்தை தெரிவிக்கலாம். அசல் சான்றிதழ்களை காட்டி, பெயரில் பிழை இருந்தால் சரி செய்து கொள்ளலாம்.

ஒரு மாதத்தில் "ரிசல்ட்':
விண்ணப்பத்தை சரியாக பூர்த்தி செய்த அனைவருக்கும், "ஹால் டிக்கெட்' அனுப்பப்பட்டன. இணையதளத்தில் இருந்தும், பதிவிறக்கம் செய்யலாம். "ஹால் டிக்கெட்' கிடைக்கவில்லை என புகார் தெரிவித்தவர்களின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு, 323 பேருக்கு, "ஹால் டிக்கெட்' வழங்கநடவடிக்கை எடுக்கப்பட்டது.தேர்வுக்கான விடைகளை விரைவில் வெளியிடவும், தேர்வு முடிவுகளை ஒரு மாதத்திற்குள் வெளியிடவும் திட்டமிட்டு உள்ளோம். தேர்வுப் பணிகளை கண்காணிக்க, ஐந்து அதிகாரிகளை நியமித்து உள்ளோம்.

இவ்வாறு சுர்ஜித் சவுத்ரிகூறினார்.

3,500 பேர்பார்வையற்றவர்: தேர்வில் பங்கேற்கும் பார்வையற்றவர்களில், முதல் தாள் தேர்வை, 1,291 பேரும், இரண்டாம் தாள் தேர்வை, 2,094 பேரும் எழுதுகின்றனர். இரு தேர்வுகளையும், 171 பேர் எழுதுகின்றனர்.

தேர்வில் பிரச்னையா? அதிகாரிகளை அழையுங்கள்: டி.இ.டி., தேர்வு தொடர்பான சந்தேகம் மற்றும் பிரச்னை இருந்தால், அதிகாரிகளிடம் இன்று மாலை வரை, அலைபேசியில் தொடர்பு கொண்டுகேட்கலாம். இதற்காக, 32 மாவட்டங்களும், ஐந்து அதிகாரிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன.

மாவட்டங்கள் பொறுப்பு அதிகாரி அலைபேசி எண்:
  1. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, பெரம்பலூர், அரியலூர் சங்கர் 9444704635
  2. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி,விழுப்புரம் மற்றும் கடலூர் க.அறிவொளி 94440282683. 
  3. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம் எஸ்.அன்பழகன் 89396750044. 
  4. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் டி.உமா 94441373965. 
  5. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் எஸ்.சேதுராமவர்மா 9150642680
நன்றி:

 

வேலை நாளில் கல்வி வளர்ச்சி நாள்:பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

கமாராஜர் பிறந்த நாளான ஜூலை 15, விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால், கல்வி வளர்ச்சி நாளை , பள்ளி வேலை நாளில் கொண்டாட, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி , கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு ஜூலை 15 ஞாயிற்றுக்கிழமை வருவதால், ஜூலை 14 அல்லது ஜூலை 16 ஆகிய இரு தினங்களில் ,ஏதாவது ஒரு நாளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட, பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வி வளர்ச்சி நாளில், மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம் குறித்து, அதன் போட்டோக்களுடன் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் சமர்ப்பிக்க, தலைமையாசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை கேட்டுகொண்டுள்ளது.

நன்றி:

 

9.7.12

சமனில்லாத சமன்!

கடந்த ஆண்டு இதே காலத்தில் சமச்சீர் கல்வி பற்றி மிகப்பெரிய குழப்பம் ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் இருந்தது. இது தொடர்பாக போராட்டங்களும் ஆங்காங்கே நடந்தன. தில்லி உச்ச நீதிமன்றம்வரை சென்ற அந்தப் பிரச்னை ஒரு வழியாக சுமுகமாக்கப்பட்டது. கல்வி அனைவருக்கும் சமமாக்கப்பட வேண்டும் என்ற பெயரில் சமச்சீர் உருவாக்கப்பட்டது பாராட்டுக்குரியதுதான்.

"ஒரு கட்டடத்தை இரு தூண்கள் தாங்கிக் கொண்டுள்ளன. அதில் ஒரு தூணின் மேற்பகுதி சிறிது உடைந்துவிட்டது. இப்போது மேல்தளம் சமனில்லாமல் ஒரு புறம் சரிந்துள்ளது. இதனை சமன்செய்வதற்கான பல வழிகள் தொடர்பாகக் கூறப்பட்ட ஒரு யோசனை செயல்படுத்தப்பட்டது. அது என்னவென்றால், நன்றாக உள்ள மற்றொரு தூணையும் உடைந்த தூணின் அளவுக்கு உடைப்பதென்பது. அது அவ்வாறே மேற்கொள்ளப்பட்டு மேல் தளத்தைச் சமன்படுத்தியாயிற்று''.

இதுபோன்று எளிதில் புரியக்கூடிய, அழகான எடுத்துக்காட்டுகளைக் கொண்டிருக்கும் சமச்சீர் புத்தகம் அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதைக்குப் பிரச்னை அதுவல்ல.

8-ஆம் வகுப்பு வரை அமல்படுத்தப்பட்டுள்ள, மாணவர்களும் ஆசிரியர்களும் செயல்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகளைப் பற்றித்தான். செயல்வழிக்கற்றல், படைப்பாற்றல் கல்வி முறை மூலம் மாணவர்கள் பாடங்களைக் கற்கும் முறை இந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் தினமும் அதிகநேரம் படிப்பது என்பது மாறி அதிகநேரம் செயல்வழிக் கற்றல் என்றாகிறது. இது பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்த செயல் வழிக்கற்றலுக்காக மாணவர்களுக்கு சில மூலப்பொருள்கள் (சார்ட், அதில் ஒட்டுவதற்குப் படங்கள்..,) தேவைப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாணவனுக்கும் தினமும் குறைந்தது 20 ரூபாய் தேவைப்படுகிறது. 20 ரூபாய் என்பது உயர் வருவாய் பிரிவினருக்கு பெரும் தொகையல்ல. அரசுப் பள்ளியில் குழந்தைகளை விட்டுவிட்டு டாஸ்மாக்கில் நாள்தோறும் வருகையைப் பதிவு செய்யும் தந்தைக்கும், இலவசமாக அளிக்கக்கூடிய அரிசியைக்கூட கிலோ ரூ.3-க்கு வாங்கும் தாய்க்கும் இது பெருந்தொகையே! இது மாணவர்களுடைய பிரச்னை.

இந்தமுறையில் ஆசிரியர்களுக்கு என்ன பிரச்னை?
இங்குதான் ஆசிரியர்கள் ஆசிரியர்களாக அல்லாமல் மாணவர்களின் செயல்பாடுகளை ஆவணப்படுத்தும் அலுவலர்களாக மாறியிருக்கின்றனர்.

ஒவ்வொரு மாணவனுக்கும் 5 அல்லது 6 பக்கம் ஒதுக்கப்பட்டு, மாணவர்களைத் தனித்தனியே கவனித்து அவர்களைப் பற்றி வளர் மதிப்பீடு, தொகுப்பு மதிப்பீடு என்று ஆவணப்படுத்தும் வேலை ஆசிரியர்களுக்கு. இதனால் கற்றுத்தரும் நேரம் குறைவாகவும் ஆவணப்படுத்தும் நேரம் அதிகமாகவும் செலவிட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. உதாரணத்துக்கு மாணவனிடம் ஆசிரியர் ஒரு கேள்வி கேட்டால், மாணவனிடம் என்ன கேள்வியைக் கேட்டோம் என்று ஆவணப்படுத்த வேண்டும். மாணவன் புத்தகத்தை கையில் தொட்டால், அதற்கு தனி மதிப்பெண் என்று அதனையும் பதிவு செய்ய வேண்டும்.

இந்த வேலைகளையெல்லாம் செய்துதான் மாணவன் எந்த இடத்தில் தேங்குகிறான், தொய்வடைகிறான் என்று ஆசிரியர் அறிய வேண்டியதில்லை. மாணவர்களின் சில செயல்பாடுகளை வைத்தே அவனைப் பற்றி கணிக்கக் கூடிய திறமை ஆசிரியர்களிடத்தில் உண்டு. மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவாகவும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் தகவல்களை ஆவணப்படுத்தும் முறை எப்படி சாத்தியமாகும்?

இந்நிலையில் இத்தனை வழிமுறைகளை அமல்படுத்தினால் மாணவர்களுக்குக் கல்வி சுமையாகின்றதோ இல்லையோ ஆசிரியர்களுக்கு சுமையாகிவிடாதா?

ஆசிரியர்களைப் பொருத்தவரையில் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களைக் காட்டிலும், தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மேலானவர்கள். புதிதாகக் கொண்டு வந்துள்ள முறை தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தியுள்ளதா?

வண்டியில் சாட்டையைக் கையில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பவர் பாரத்தை இழுக்கும் எருதின் கஷ்டத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கல்வி முறைகளில் உள்ள குறைகளைக் கூறினால், ""சம்பளம் அதிகம்; அதனால் வேலை அதிகம்; இதைக் கூட அவர்கள் செய்ய முடியாதா?'' என்று கேள்விக்கணைகள். வேலை செய்ய ஆசிரியர்கள் தயார். ஆனால், ஓட்டைப் பானையை வைத்து செடிகளுக்கு எப்படி நீர் ஊற்றுவது? இங்கு மாற்ற வேண்டியது பானையையா, நீர் ஊற்றுபவர்களையா?

கால்குலேட்டர் வந்தவுடன் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் திறன் குறைந்தது; செல்போன் வந்தவுடன் நினைவுத்திறன் குறைந்தது; இவைகளை இழந்து நாம் எதைப்பெற்றோம் என்று தெரியவில்லை.

அதேபோல் தொழில்நுட்பம் வந்தபின் எழுதுவது குறைந்தது. அட்டை வழி, செயல்வழி கற்றல்கள் மூலம் மாணவனின் வாசிப்புத் திறன் மறைந்து கொண்டிருக்கிறது. எழுத்து, வாசிப்பு இவையிரண்டும் இல்லாமல் எப்படி ஒரு மொழியைக் காப்பாற்றுவது?

மாற்றங்கள் வரும்போது ஒன்றை நாம் இழக்கத்தான் வேண்டும். மாற்றத்தை மறுப்பவர்கள் பிற்போக்காளர்கள், இந்த காலத்துக்கு உதவ மாட்டார்கள் என்று மாற்றத்தை ஏற்பவர்கள் ஏளனம் செய்கிறார்கள்.

அசோகர் மரம் நட்ட வரலாற்றுக் கல்வியைத் தூக்கிப்போடுங்கள். இந்த காலத்துக்கு ஏற்ற கல்வியை உருவாக்குங்கள் என்று முற்போக்கு சிந்தனைவாதிகளின் (?) குரல்கள் முன்பு கேட்டன.

ஆனால் இன்றோ, உலக வெப்பமயமாதலைத் தடுக்க ஜி-20 மாநாட்டில் ஆலோசிக்கப்படுகிறது. மரத்தின் அருமை குறித்து அரசு பல விளம்பரங்களைச் செய்து வருகிறது. மரங்களை வளர்க்க பல இயக்கங்கள் தோன்றிவிட்டன.

இப்போதாவது புரிகிறதா, பழைய கல்வி முறை எவ்வளவு உகந்ததென்று? எந்தக் கல்வி முறையை மாற்ற வேண்டுமென்று யார் கூறுவது? மாற்றங்களை நாம் ஒத்துக் கொண்டுதான் ஆகவேண்டுமா? அவ்வாறாயின், உருவில் சிறியதாக இருந்து அறை முழுவதும் மணத்தை பரப்பக்கூடிய மல்லிகை போல்தானே அது இருக்க வேண்டும். அதைவிடுத்து காற்றிலே பட்டவுடன் சுருங்கி விடும் பஞ்சு மிட்டாய் போன்று இருந்து என்ன பயன்?

இந்த வகையான கற்றல் முறைகள் எல்லாம் சிபிஎஸ்இ-க்கு ஈடாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது அதிகாரிகளின் கருத்து. ஒருவேளை இந்த முறையும் அதற்கு ஈடாகவில்லையென்றால் என்ன செய்வது என்று ஆசிரியர்களிடம் கேள்வியெழுப்பினால், "நாம் என்ன செய்ய, அரசன் எவ்வழியோ நாம் அவ்வழி' என்ற பழமொழியை நினைவூட்டுகிறார்கள்.

நீரில் நனைந்த காகிதமோ, அட்டையோ ஈரம் காய்ந்தபின் முன்பைவிட விறைப்பாகத்தான் இருக்கும். அதற்காக அது உறுதியாகத்தான் உள்ளது என்று கூறிவிட முடியுமா?

முன்னர் பார்த்த கட்டட உதாரணத்தில், எதிர்கால சிந்தனையின்றி மேல்தளம் சமன்செய்யப்பட்டது. பாருங்கள், நாளைக்கு ஏற்கெனவே பாதிப்படைந்த தூண் பளு தாங்காமல் மேலும் பாதிப்படைந்தால் மேல்தளத்தை எப்படி சமன் செய்வது? மீண்டும் நன்றாக உள்ள தூணை வெட்டி சமன் செய்வதா? இதைத் தவிர்க்க முன்னரே என்ன செய்திருக்க வேண்டும்?

- கட்டுரையாளர்  ம. பண்டரிநாதன்

நன்றி:


7.7.12

பள்ளிகளில் சிறப்பு பாதுகாப்புப்படை

"மாணவர்களின் நலன் காக்க, சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க வேண்டும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி அறிவுறுத்தியுள்ளார்.

முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, அவர் அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிகளில் மாணவர்கள் நலன் பாதுகாக்க, உடற்கல்வி ஆசிரியர், தேசிய மாணவர் படை அலுவலர் , நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர், சாரண மற்றும் செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர்கள் உள்ளடக்கிய சிறப்பு பாதுகாப்பு படை அமைக்க வேணடும்.

போலீஸ், போக்குவரத்து , தீயணைப்பு , சுகாதாரத்துறை மூலம், சிறப்பு பாதுகாப்பு படைக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதன் மூலம், மாணவர்களிடையே அச்ச உணர்வு நீக்க வேண்டும்.

இதை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி, பாதுகாப்பு படை அமைக்க வேண்டும். பாதுகாப்பு படை நடவடிக்கை தொடர்பான அறிக்கையை, இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:




ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய காப்பீடு அட்டை:காப்பீடு நிறுவனத்திற்கு அரசு உத்தரவு

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கான, புதிய அடையாள அட்டையை, வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள், அரசு ஊழியர்களுக்கு வழங்க, சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நான்கு ஆண்டு காலத்திற்கு...
தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு, மருத்துவ சிகிச்சைக்காக நான்கு ஆண்டு காலத்திற்கு, நான்கு லட்சம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான, காப்பீடு வழங்கும், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தேசிய அளவில் ஒப்பந்தம் கோரப்பட்டது. தொடர்ந்து, "தி யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிட்' நிறுவனம், வரும் ஜூலை முதல் தேதி முதல், புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனமாக, தேர்வு செய்யப்பட்டது.

புதிய அரசாணை:
ஏற்கனவே, அமலில் உள்ள மருத்துவ காப்பீட்டு திட்டம், கடந்த, 2008ம் ஆண்டு, ஜூலை 11 முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப்பட்டு, கடந்த மாதம், 10ம் தேதியுடன், முடிவடைந்துள்ளது. புதிய திட்டம், வரும் ஜூலை 1ம் தேதி முதல் துவக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். இத்திட்டத்திற்கு முதற்கட்டமாக, ஐந்து கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது. இந்நிலையில், பயன் பெறும் அரசு ஊழியர்களுக்கு, புதிய திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக, புதிய அரசாணை ஒன்றை நிதித்துறை பிறப்பித்துள்ளது.

புதிய நடைமுறைகள்
:
இதன் படி, பழைய காப்பீட்டு திட்டத்தில் இருப்பவர்களும், சமீபத்தில் அரசு பணியில் சேர்ந்தவர்களும், புதிய திட்டத்தின் கீழ் இணைவதற்கான, விண்ணப்பங்கள் பெறுதல், பூர்த்தி செய்தல், புதிய அட்டை வழங்குதல் தொடர்பான நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம், அட்டை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, அரசு அலுவலகங்களில் உள்ள, சம்பளக் கணக்கு அதிகாரிகளுக்கு, அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள், தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, அந்த விண்ணப்பத்தை அளித்து, பூர்த்தி செய்து, பெற்று, மீண்டும், காப்பீட்டு நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.

20ம் தேதிக்குள் விண்ணப்பம்:
இதில், ஏற்கனவே பயன்பெறும் ஊழியர்கள், புதியதாக சேர்ந்துள்ள ஊழியர்கள், என அனைவரும், தங்கள் குடும்பத்தினர் பற்றிய தகவல்களுடன், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ,வரும் 20ம் தேதிக்குள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அளிக்கவேண்டும். அந்த விண்ணப்பங்களை, இம்மாதம் 31ம் தேதிக்குள், காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பத்தை பெறும் காப்பீட்டு நிறுவனம், ஆகஸ்ட் மாதம், 31ம் தேதிக்குள், புதிய காப்பீட்டு திட்டத்திற்கான அடையாள அட்டைகளை தயாரித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு வேளை புதிய அடையாள அட்டையை தொலைத்து விட்டால், 50 ரூபாய் செலவில், புதிய அட்டையை, ஊழியருக்கு, காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், காப்பீடு தொடர்பான தகவல்கள், அளிக்கப்படும் மருத்துவ சேவைகள், காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் குறித்த விவரங்களை, www.tn.gov.in/karuvoolam என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
.

அரசு ஊழியர்கள் விடுதலை ஆனாலும் துறை ரீதியாக நடவடிக்கை உண்டு

விஜிலென்ஸ் உள்ளிட்ட வழக்குகளில் சிக்கும், அரசு ஊழியர்களை, கோர்ட் விடுதலை செய்தாலும், சரியான காரணங்கள் இருப்பின், அவர் மீது துறைத் தலைவர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் முதல், அதிகாரிகள் வரையில், சில நேரங்களில் பல்வேறு முறைகேடுகளில் சிக்கி, லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கைகளுக்கு உள்ளாவதுண்டு. அவ்வாறு வழக்குகளில் சிக்குபவர்கள், சில நேரங்களில் தண்டனை அல்லது விடுதலை அடைகின்றனர். இவ்வாறு தண்டனை, விடுதலை விஷயத்தில், அந்த அரசு ஊழியர் சார்ந்த துறை, சில நேரங்களில் நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு, அரசு ஊழியர் தொடர்பான வழக்குகளில், தண்டனை அல்லது விடுதலை பெறும் நேரத்தில், துறையின் தொடர் நடவடிக்கை குறித்து, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை, சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது தொடர்பான, சென்னை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.

அவசியம்: கோர்ட் தீர்ப்புகளில், தண்டனை பெற்ற அரசு ஊழியர், சேவையில் தொடர அனுமதிக்கக் கூடாது. தண்டனை பெற்றவர், மேல்முறையீடு செய்திருந்தாலும், அதற்கான தீர்ப்பு வரும் வரையில், பணியாற்றுவதை அனுமதிக்கக் கூடாது. மேல் முறையீடு உள்ளிட்டவற்றிற்காக, சம்பந்தப்பட்டவர் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. தண்டனை பெற்ற அரசு ஊழியர்களை ,பணி நீக்கம் செய்ய வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை, அரசுத் துறைகளுக்கு வழங்கப்பட வேண்டிய சில அறிவுரைகளை அரசுக்கு பரிந்துரைத்தது.

இதனை ஏற்ற தமிழக அரசு, அரசு ஊழியர் ஒருவர், வழக்கில் சிக்கி, கோர்ட் மூலம் விடுவிக்கப்பட்டாலும், சரியான தகுதி மற்றும் தொழில் நுட்ப காரணங்கள் அடிப்படையில், அந்த ஊழியர் சார்ந்த துறையின் தலைவர், அந்த ஊழியர் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். அந்த நடவடிக்கைக்கான தேவையான ஆதாரங்கள் இருக்க வேண்டும். மேலும், அவ்வாறு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், விடுதலை குறித்த கோர்ட் உத்தரவு பெற்ற ஒரு மாதத்திற்குள், நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணம், அதிகாரியின் நிலைப்பாடு குறித்த அறிக்கையை, உத்தரவு நகலுடன் இணைத்து அரசிற்கு அனுப்ப வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

.

5.7.12

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் - 2012 அரசாணை வெளியீடு; மாத சந்தா ரூ.150/-

  • புதிய மருத்துவ காப்பீடு திட்டம் (New Health Insurance Scheme) - 2012. மருத்துவ சிகிச்சைகள், மருத்துவமனைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் விவரம்; 
  • மாத சந்தா ரூபாய். 150 ஆக உயர்வு. 

அரசாணை எண்:243 நாள்:29-06-2012.
.

4.7.12

ஊதியக் குழு முரண்பாடுகளை களைதல் குழு - தனிப்பட்ட விசாரணைக்கு சங்கங்கள் / தனிநபர்கள் / ரிட் மனுதாரர்களுக்கு அழைப்பு

ஊதிய குறைகளை நிவர்த்தி செய்ய தனிப்பட்ட விசாரணைக்கு சங்கங்கள் / தனிநபர்கள் / ரிட் மனுதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாள்: 9, 10 & 11 - 07 - 2012

இடம்: உயர்கல்வித்துறை கூட்ட அரங்கம், வெல்லிங்டன் சீமாட்டி கல்லூரி வளாகம், காமராசர் சாலை, சென்னை - 5.

.