தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.6.10

மக்கள்தொகை முதல் கட்ட கணக்கெடுப்புக்கான காலவரையறை நீட்டிக்கப்படாது

தமிழகத்தில் மக்கள்தொகை முதல்கட்ட கணக்கெடுப்புக்கென்று நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூலை 15-ம் தேதி என்ற காலவரையறை நீட்டிக்கப்படமாட்டாது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் எஸ். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.   

நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:   
தமிழகம் முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதல்கட்ட பணிகள் ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 முதல் 25 சதவிகிதம் வரை பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தப் பணியை மேற்கொள்வது தொடர்பாக பெரிய அளவுக்கு புகார்கள் ஏதுமில்லை. திட்டமிட்டுள்ளபடி ஜூலை 15-ம் தேதிக்குள் கணக்கெடுப்பு பணி முடிக்கப்படும். காலவரையறை நீட்டிக்கப்படமாட்டாது.   

ஜூலை 15-ம் தேதி என்ற காலவரையறையை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்கு போதுமான காரணங்கள் இல்லை. மழையைக் காரணம் காட்ட முடியாது. ஏனெனில், மழைக் காலத்திலும் பணிகளில் போதிய முன்னேற்றம் காணப்படுகிறது. ஏற்கெனவே நாட்டிலுள்ள 25 மாநிலங்களில் இந்தப் பணி முடிக்கப்பட்டுவிட்டது.   

முதல்கட்டமாக, வீடுகள் மற்றும் அந்த வீடுகளில் உள்ள நபர்கள் குறித்த கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது. 2-ம் கட்டமாக 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முழு அளவிலான கணக்கெடுப்புப் பணிகள் நாடு முழுக்க ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. அப்போது வீடுகள் இல்லாதவர்கள், தெருவோரங்களில் வசிப்போர், அரவானிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்துக் குடிமக்கள் குறித்தும், அவர்களது வாழ்க்கை நிலைகள் குறித்தும் முழுமையான கணக்கெடுப்பு நடத்தப்படும். அதன்பின் தேசிய அளவில் அடையாள அட்டைகள் வழங்கும் பணிகள் நடைபெறும்.   

கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு வரும்போது அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உண்மையான பதில்களை அளிக்க வேண்டியது மக்களது கடமையாகும். கணக்கெடுப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது அல்லது கணக்கெடுப்புப் பணியைச் சீர்குலைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது காவல் நிலையங்களில் தொடரப்படும் வழக்குகளோடு கூடுதலாக மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின்கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.  

பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் விளம்பரங்கள் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரகம் சார்பில் திரைப்பட நடிகர்களின் குரல் மற்றும் நடிப்பில் விளம்பர ஒலி, ஒளி காட்சிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.   திரையரங்குகளில் இவற்றை திரையிடவும், உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும், தொலைத்தொடர்புத்துறை மூலமும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை எடுத்துரைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.    

கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தை ஒதுக்கித்தருவது குறித்து, அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறையிலிருந்து சுற்றறிக்கை ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்களுக்கு நேரம் ஒதுக்கித்தரவில்லை, நேரம் போதவில்லை என்ற புகார்களுக்கே இடமில்லை.

கடலோர கிராமங்களில் ஜூலை 15-க்குப் பின் அடையாள அட்டை விநியோகம்:   
நாட்டிலுள்ள கடலோரப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடலோரக் கிராமங்களில் வசிக்கும் 15 வயதுக்கு மேற்பட்டோர் குறித்த கணக்கெடுப்பும், புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 229 கடலோரக் கிராமங்களில் ஏறக்குறைய 8 லட்சம் பேரை புகைப்படம் எடுத்து, அவர்கள் குறித்த விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி  ஜூலை 15-ம் தேதிக்குப்பின் மேற்கொள்ளப்படும் என்றார் கோபாலகிருஷ்ணன்.    

முன்னதாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணி குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்தப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவிடம் ஆலோசனையும் நடத்தினார்.

நன்றி:


கணக்கெடுப்பு பணிக்குச் செல்ல அனுமதி அளிக்க, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் அறிவுறுத்தல்

பள்ளி நேரத்தில், கணக்கெடுப்பு பணிக்குச் செல்ல, தலைமையாசிரியர்கள் முடிவெடுக்க அனுமதி அளிக்க, மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் பெற இங்கே கிளிக் செய்க.

நன்றி:

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல்

நாகர்கோவில் அருகே மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபட்ட ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய இளைஞரை போலீஸôர் கைது செய்தனர்.​ ​ ​ 

நாகர்கோவிலை அடுத்த பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அல்போன்சம்மாள் ​(47).​ அங்குள்ள மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.​ தெங்கம்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பொட்டல்விளை பகுதியில் மக்கள் தொகைக் கணக்கெடுக்கும் பணியில் இவர் ஈடுபட்டிருந்தார்.​ ​ ​ வியாழக்கிழமை மாலையில்,​​ பொட்டல்விளையிலுள்ள வி.​ வேலப்பன் ​(32) என்பவரின் வீட்டுக்குச் சென்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களைக் கேட்டு உரிய படிவத்தில் பதிவு செய்து கொண்டிருந்தார்.​ ​​ ​ அப்போது வீட்டில் வேலப்பன்,​​ அவரது தாய் கமலம்,​​ அண்ணன் முருகன் ஆகியோர் இருந்தனர்.​ இரணியலைச் சேர்ந்த இவர்கள் பொட்டல்விளையில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.​ அவர்களிடம் அல்போன்சம்மாள் பல்வேறு விவரங்களைக் கேட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று ஆத்திரமடைந்த வேலப்பன் அவரைத் தாக்கினார்.​ ​ ​ இதில் நிலை குலைந்து அல்போன்சம்மாள் கீழே விழுந்தார்.​ அவர் வைத்திருந்த ஆவணங்களும் சிதறி விழுந்தன.​ ​ 

​ இது தொடர்பாக,​​ சுசீந்திரம் போலீஸில் அல்போன்சம்மாள் புகார் செய்தார்.​ அதன்பேரில்,​​ போலீஸôர் வழக்குப் பதிந்து வேலப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 நன்றி: 



மக்கள் தொகை கணக்கெடுக்க...சிக்கல்! கலெக்டரிடம் ஆசிரியர்கள் புகார்

"மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், வகுப்பு செயல்படும் நேரத்தில் செல்லக்கூடாது என திருப்பூர் மாவட்ட கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே, கணக்கெடுப்பு பணியில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.திருப்பூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் சமீபத்தில் ஆய்வு செய்த தொடக்க கல்வி அலுவலர், பணி நேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்குச் சென்ற ஆசிரியர்களுக்கு "ஆன் டியூட்டி' அனுமதிக் காமல், "சிறு விடுப்பு' என பதிவு செய்து, நட வடிக்கை எடுத்தார். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரிடம் புகார் தெரிவித்தனர். அவர், முதன்மை கல்வி அலுவலருக்கு விளக்க கடிதம் அனுப்பியதுடன், கலெக்டருக்கும் அறிக்கை சமர்ப்பித்தார்.

நன்றி:

மக்கள் தொகை கணக்கெடுப்பு - கணக்கெடுப்பாளர்கள் அவதி

தற்போது நடந்து வரும் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில், போதுமான தகவல்களை திரட்ட முடியாமல் கணக்கெடுப்பாளர்கள் அவதிப்படுகின்றனர். போதிய விழிப்புணர்வு இல்லாததால், படித்தவர்கள் முதற்கொண்டு பலரும் உண்மைத் தகவல்களை தர மறுப்பதாக, புகார் எழுந்துள்ளது.

முதல் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872ம் ஆண்டில், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், வெவ்வேறு கால கட்டங்களில் நடத்தப்பட்டது. அதற்கடுத்து, 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதிலிருந்து துவங்கி, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை விடுபடாமல், தொடர்ந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.இந்த "சென்சஸ்' வரிசையில், 15வது முறையாக தற்போது, கணக்கெடுப்பு பணி துவங்கி நடந்து வருகிறது. இது, சுதந்திரத்திற்கு பின் நடைபெறும் ஏழாவது கணக்கெடுப்பு. எப்போதும் இல்லாத வகையில் தற்போது, இரண்டு விதமான கணக்கெடுப்பு நடந்து வருகிறது.ஒன்று, வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, மற்றொன்று தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் குடும்ப அட்டவணையைப் பதிவு செய்யும் கணக்கெடுப்பு. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 1ம் தேதி துவங்கி, வரும் ஜூலை 15ம் தேதி வரை இந்தக் கணக்கெடுப்பு நடக்கவுள்ளது.

"இந்தக் கணக்கெடுப்பு நாட்டின் விரிவான தகவல் ஆதாரமாக அமையும். நாட்டின் பாதுகாப்பு, அரசின் திட்டங்கள், சேவைகள் போன்ற விரும்பிய இலக்கை அடைய, திட்டங்களை மேம்படுத்த இந்தப் பணி உதவும்' என்று இந்த கணக்கெடுப்பின் நோக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் படும் அவஸ்தை, கொஞ்ச நஞ்சமல்ல. "இன்கம்டாக்ஸ் ரெய்டு' நடத்த வருவதாக நினைத்துக் கொண்டு, படித்தவர்கள் உட்பட பலரும், இந்த கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை; உண்மைத் தகவல்களை மறுத்தும், மறைத்தும் வருகின்றனர்.

சென்னையின் மையப்பகுதியில் உள்ள ஒரு தரைதளம் மற்றும் இரண்டு மாடிகளைக் கொண்ட மிகப் பிரமாண்ட வீட்டில், கணக்கெடுக்க ஒரு ஆசிரியர் சென்றபோது, நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும், வீட்டுத் தலைவரை மொபைலில் தொடர்பு கொண்டு, பின்னரே அங்கிருந்த பெண்மணி பதில் அளித்தார். வீட்டுத் தலைவரின் தொழில் குறித்து கேட்கும் போது, "விவசாயம்' என்று அந்தப் பெண்மணி பதிலளித்தார்."கிராமத்தில் நிலம் இருக்கிறதா?' என்று கேட்டதற்கு, "இல்லை' என்றார். சென்னையில் எங்கு விவசாயம் நடக்கிறது? என்று நொந்து கொண்ட கணக்கெடுப்பாளர், அந்தப் பெண்மணியின் பிறந்த நாளுக்கான சான்று கேட்கும் போது, "பான்கார்டு' எடுத்து வந்து காட்டியுள்ளார்.

இதுகுறித்து கணக்கெடுப்பு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுவதாவது: இரண்டு விதமான கணக்கெடுப்பை ஒரே நேரத்தில் செய்யச் சொல்கின்றனர். குடும்ப அட்டவணை குறித்த கணக்கெடுப்பில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினர் தொடர்பான 14 கேள்விகள் உள்ளன. வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பில் 35 கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளை கேட்டு முடிப்பதற்குள், சம்பந்தப்பட்ட நபர் எரிச்சல்படுகிறார்."இந்தக் கேள்விகளில் உண்மையான பதிலை வரவழைப்பதற்கு முழு முயற்சி எடுக்க வேண்டும்' என்று எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், சிலர் வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. முறையான தகவலும் தருவதில்லை. ஒரு சிலர், "மற்றொரு நாள் வாருங்கள்' என்று "கூலாக' சொல்லி விடுகின்றனர். ஒரு சில வீடுகள் மூடிக் கிடக்கின்றன. அதற்காக மீண்டும் ஒரு நாள் வரவேண்டிய நிலை.இதுஒருபுறமிருக்க, தனியார் பள்ளி ஆசிரியர்கள் படும் பாடு, பெரும்பாடு. 45 நாட்களில் ஒன்றில் இருந்து ஆறு தெருக்கள் எனக் குறைந்தது 150 வீடுகளில், இந்த இரு கணக்கெடுப்பையும் எடுக்க வேண்டும்.

ஆனால், தனியார் பள்ளிகளில் இதற்கு விடுமுறையோ, கூடுதல் நேரமோ தருவதில்லை. "பள்ளியில் கடைசி இரு வகுப்புகள் இல்லாதவர்கள் செல்லலாம்' என்று மட்டுமே அனுமதிக்கின்றனர். தற்போது "அட்மிஷன்' பணி வேறு நடந்து வருகிறது. இதில் குறிப்பாக, பெண் ஆசிரியைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி முடிந்ததும், அவசர அவசரமாக கணக்கெடுக்கும் பணிக்கு செல்லும் போது, அங்குள்ளவர்களின் ஒத்துழைப்பு இல்லாதது, அவதிப்படவே வைக்கிறது.இவ்வாறு கணக்கெடுப்பாளர்களின் தரப்பில் கூறப்படுகிறது.

விழிப்புணர்வு தேவை: "மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தாததே இந்தப் பிரச்னைகளுக்கு காரணம்' என்று கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒரு மேற்பார்வையாளர் கூறும்போது, ""ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி தரப்படவில்லை.இவ்வளவு கேள்விகள் வைத்திருக்கும்போது, அதுகுறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உண்மையைச் சொன்னால் பிரச்னை வந்துவிடுமோ? என்ற பயத்தைப் போக்க வேண்டும்,'' என்றார்.

நன்றி: தினமலர் 13-06-2010



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்